January 25, 2012


நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம்


திருமுகம்:

எல்லையற்ற அழகும் இனிய தண்ணளித்திறனும் கொண்டு தலைமைப்பாட்டினைக் குறிக்கும்.
பனித்தசடை:
சடை சிவநெறிக்குரிய தவ ஒழுக்கச் சிறப்பையும் காட்டுகின்றது.
கங்கை:
இறைவன் பேராற்றலையும் வேகங்கெடுத்தாளும் வித்தகத்தையும் விளக்குவது.
பிறைசூடுதல்:
சரண் என அடைந்தவரைத் தாங்கித் தாழ்வு நீக்கிப் பாதுகாக்கும் வள்ளல்தன்மை.
குனித்த புருவம்:
பரதக் கலையின் மெய்ப்பாடு உணர்த்துவது. தன்பாற்போந்து குறையிரந்து முறையிடும் அடியார்களின் விண்ணப்பங்களைக் கூர்ந்து நோக்கி ஊன்றிக் கேட்டருளும் கருணைத் திறத்தினைக் காட்டுவது.
குமிண்சிரிப்பு:
அடைக்கலம் புகுந்தோரை, என்று வந்தாய் என்று அருளோடு வரவேற்று, பிழைபொறுத்து வாழ்வளித்து மகிழ்விக்கும் மாட்சியைக் குறிப்பது.
பவளமேனி:
இறைவன் நீ வண்ணத்தான் நெருப்பை யொத்தவன். நெருப்புத் தன்பால் எய்தும் பொருள்களை எல்லாம் தூய்மையாக்கிப் புனிதம் அடையச் செய்வது போல, இறைவனும் தன் அடியார்களின் மாசுக்களை நீக்கி – மலநீக்கி மாண்புறச் செய்யும் அருட்டிறத்தைக் குறிப்பது.
பால்வெண்ணீறு:
எப்பொருளும் இறுதியில் எய்தும் நிலை சாம்பல்தானே! நீறு மற்றொன்றாக மாறி அழியாது. ஆகவே பால்வெண்ணீறு தூய இயல்பினையும் அழியாத் தன்மையையும் குறிக்கின்றது. தொழுதெழுவார் வினைவளம் நீறெழ இறைவன் நீறு அணிகின்றார். மேலும் செந்நிற மேனியில் வெண்ணீறு அணிந்த கோலம் எவர் நெஞ்சையும் கவர்ந்து பிணிக்கும் பான்மையுடையது.
நெற்றிக்கண்:
மேல் நோக்கிய நிலையில் நிமிர்ந்து நிற்கும் நெற்றிக்கண் சிவபிரானின் தனிப்பெரும் முதன்மையை உணர்த்துவது. இது சிவபெருமானுக்குரிய சிறப்பு அடையாளம்.
நீலகண்டம்:
ஒருவரும் உண்ணாத நஞ்சு உண்டும் இருந்தருள் செய்யும் இறைவனின் நயத்தக்க நாகரிக நலனையும் பெருங்கருணைத் திறத்தையும் காட்டுவது.
உடுக்கை:
தமருகம் எனப்படும் உடுக்கை, இறைவன் உலகப் பொருள்களைப் படைக்கும் சிருஷ்டியைக் குறிப்பது. பரநாதத்தைப் பரமன் தோற்றுவிக்கும் பான்மையை இது காட்டுகிறது.
நெருப்பு:
இறைவன் இடக்கரத்தில் ஏந்தியுள்ள நெருப்பு. உயிர்களின் பிறவித் தளைகளின் இளைப்பினை நீக்கும் பொருட்டுச் செய்யும் சம்ஹாரத் தொழிலைக் காட்டுவது.
அபயகரம்:
அமைந்தகை காத்தல் தொழிலைக் குறிப்பது. அடியார்களுக்கு ஆறுதல் கூறித் தேற்றும் நிலை இது.
வீசியகரம்:
யானையின் துதிக்கையைப் போன்று திகழும் இவ்விடக்கை கஜஹஸ்தம் எனப்படும். இக்கையின் விரல், தூக்கிய திருவடியைக் காட்டுகின்றது. திருவடியை நம்பித் தொழுக. இது உம்மை ஈடேற்றும் என்பது குறிப்பு.
எடுத்த திருவடி:
இறைவனின் இடது திருவடி இது; அம்பிகைக்கு உரியது. துன்பக் கடலிடைத் தோணித் தொழில் பூண்டு தொண்டர் தம்மை இன்பக் கரை முகந்து ஏற்றும் திறத்தைக் காட்டுவது.
ஊன்றிய திருவடி:
இறைவனின் வலது திருப்பாதம் இது. முயலகனை மிதித்து அவன் மீது ஊன்றிய நிலை மலத்தை முழுதாக அழித்து விடாமலும், மலத்தால் உயிர்கள் பெரிதும் வருந்தாமலும், வினைப் பயன்களை உயிர்கள் நுகர இறைவன் இயற்றும் மறைத்தல் தொழிலைக் குறிப்பது.
முயலகன்:
இது ஆணவ மலத்தைக் குறிப்பது. முத்தி நிலையில் உயிர்கள் மாட்டு ஆணவமலம் அடங்கிக் கிடப்பதைப் போன்று. முயலகனும் இறைவன் திருவடியின் கீழ், மாயாதே தன் சத்தி மாய்ந்து கிடக்கின்றான்.
தெற்குநோக்குதல்:
ஆடவல்லான் தெற்கு நோக்கியே ஆடுகின்றார். யமபயத்தை நீக்கியருளி நம்மை உய்விப்பதற்காக தென்றற்காற்றின் மீதும் தென் தமிழின் மீதும் உள்ள விருப்பாலும் தெற்கு நோக்கி இறைவன் ஆடுகின்றார் என நயம்படக் கூறுவார் திருவிளையாடற் புராண ஆசிரியர் பரஞ்சோதி முனிவர்.
இறைவனின் உடுக்கை – ஆக்கல்(சிருட்டி), அமைத்தகை – காத்தல் (ஸ்திதி), ஏந்திய அனல் – அழித்தல்(சம்ஹாரம்), ஊன்றிய திருவடி – மறைத்தல் (திரோபாவம்), எடுத்த திருவடி – முத்தி (அனுக்கிரகம்)

சிந்து சமவெளி திராவிடர்களின் கடவுள் முருகர் அஸ்கோ பர்போலா தகவல்

கோவை செம்மொழி மாநாட்டில் திராவிக் கடவுளான சிவனின் மைந்தன் முருகனையும், சிவனை ருத்திரன் எனவும் வழிபட்டிருப்பதை அறிஞர்கள் வெளியிட்டார்கள். அதைப் பற்றிய தொகுப்பு.
சிந்து சமவெளி எழுத்துக்களை ஆய்வு செய்ததில், முருகன், ஆரிய கடவுள் ருத்ரா -ஸ்கந்தா ஆகியோர் திராவிடர் வணங்கிய கடவுள்களாக இருந்தார்கள் என்று ஆய்வில் தெரியவருகிறது, என்று “செம்மொழி தமிழ்’ விருது பெற்ற பின்லாந்து பேராசிரியர் அஸ்கோ பர்போலா, சிந்துசமவெளி எழுத்துக்கள் குறித்த ஆய்வு கட்டுரையில் கூறியுள்ளார். கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் வெளிநாட்டு அறிஞர்கள், பேராசிரியர்கள் பங்கேற்று, தமது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றனர். பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலா, சிந்து சமவெளி நாகரிகம், திராவிடர்களின் நாகரிகம் பற்றி ஆய்வு செய்து வருகிறார். இவருக்கு மாநாட்டு முதல் நாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் “செம்மொழி தமிழ்’ விருது வழங்கினார். இவர் “சிந்து சமவெளி எழுத்துக்களுக்கான திராவிட தீர்வு’ என்ற தலைப்பில் 35 பக்கம் ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வுக் கட்டுரையை, முதல்வர் கருணாநிதி முன்னிலையில் மாநாட்டில் சமர்ப்பித்தார்.
அவர் தமது ஆய்வு குறித்து பேசியதாவது: சிந்து சமவெளி நாகரிகம் நிலவிய ஹரப்பா பகுதியில், 1870 மற்றும் 1890ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், எந்த மொழி என்று அறிதியிட்டு கூற முடியாத, கற்களில் பொறிக்கப்பட்ட எழுத்து வடிவங்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் அகழாய்வு செய்ததில் மெசபடோமியா பகுதியில் பல எழுத்து வடிவங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில் சிந்து சமவெளி நாகரிக காலம் கி.மு. 2600 -1900 என்பதை ஆய்வுகள் மூலம் உறுதியானது. இக்கல்வெட்டு, எழுத்துக்கள் வளைகுடா கடல் வாணிபர்களால் அந்த பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களால் அந்த எழுத்துக்களை புரிந்து கொள்வதில் சிரமம் இருந்துள்ளது. சிந்து சமவெளி நாகரிகம் அழிந்தபோதே, சிந்து சமவெளி எழுத்து வடிவங்கள் சேர்ந்து அழிந்து விட்டது. ஆனாலும் பாதுகாக்கப்பட்ட சில எழுத்து வடிவங்கள் ஆய்வுக்கும், ஹரப்பாவில் பயன்படுத்தப்பட்ட மொழியினை அறிய உதவுவது திராவிட மொழிகளேயாகும், அவற்றின் மூலம் பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது. மத்திய மற்றும் தென்னிந்தியாவில் 26 திராவிட மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. எனினும், கி.மு. 1100 -600ம் ஆண்டுகளில், வடமேற்கு பகுதியில் காணப்பட்ட இந்தோ-ஆரிய உருவ வடிவ எழுத்துக்களில்,முகம்,பலம், காணா, கியாம்பு ஆகிய திராவிட மொழி எழுத்துக்கள் இருப்பதை அறிய முடிகிறது.
வரலாற்று மொழிகள் வாயிலாக நாம் அறிய முடிவது என்னவென்றால், சிந்து சமவெளி பகுதி மக்கள் (ஹரப்பா) திராவிட மொழியைத்தான் பேசியிருக்க வேண்டும் என்று தெரியவருகிறது. சிந்து சமவெளி மதங்களை பற்றி படிக்க பழந்தமிழ் இலக்கியங்கள் உதவிக்கு வருகின்றன. போர் மற்றும் காதலில் சிறந்து விளங்கிய “இளமை’ கடவுளை வணங்கினர். அக்கடவுள் வடஇந்தியர்கள் வணங்கிய போர்க்கடவுளான “ஸ்கந்தா’வோடு ஒத்து காணப்படுகிறது. அக்கடவுளுக்கு இளமை, இளைஞன் எனும் பொருள்பட முருகு அல்லது முருகன் என்ற திராவிட பெயர்கள் வழங்கப்பட்டன. வேதங்களில் ஸ்கந்தாவுக்கு முன்னோராக குறிப்பிடப்படும் “ருத்ரா’ என்னும் கடவுள், பச்சிளங்குழந்தையாக உருவாக்கப்பட்டும், சமஸ்கிருதத்தில் “குமாரா’ என்றும் அழைக்கப்படுகிறார். முருகனும், ஸ்கந்தாவும், சிவப்பு நிறம் அல்லது உதிக்கும் சூரியன் எழுத்துவடிவ குறியீடுகளால் குறிப்பிடப்படுகிறார்கள்.
இதன் மூலம் திராவிட கடவுள் முருகன் மற்றும் ஆரிய கடவுள் ருத்ரா-ஸ்கந்தா ஆகியோர், திராவிடர் வணங்கிய கடவுள்களாக இருந்தார்கள் என்று தெரியவருகிறது. சிந்துசமவெளி நாகரிக காலத்தைய எழுத்து வடிவங்கள் திராவிட மொழியே பின்னணியில் உள்ளதை தெளிவாகி உறுதியுடன் கூறமுடிகிறது. உருவக எழுத்துக்களின் அர்த்தங்களை கண்டுபிடிக்க, திராவிட மொழியாற்றல் மிக்க பேச்சாளர்கள் தேவையில்லை. இந்திய கலாசாரம் மற்றும் தெற்காசிய தன்மையை பற்றி நன்கு அறிந்திருந்தாலே போதும். இவ்வாறு பேராசிரியர் பர்போலோ பேசினார்.

பஞ்ச முகம் கொண்ட சிவன்!!!

சிவனின் ஐந்து முகங்கள் அனைவரும் அறிந்ததே. அதிலுள்ள ஒவ்வொரு முகத்தின் பெயரும் அதன் வடிவமும் அனைவரும் அறியவே இந்த பதிவு.

ஒரு முகம் - சிவ சொருபம்

இரண்டு முகம் - சிவன் பார்வதி

மூன்று முகம் - ப்ரம்மா, விஷ்னு, சிவன் மூண்றையும் நெற்றிக்க்ண்ணில் ஆட்கொள்பவர்

நான்கு முகம் - ப்ரம்மா

ஐந்து முகம் - மேற்கண்ட நான்கு முகங்களையும் ஆட்கொண்டு ஐந்தாவது சொருபத்துடன் சேர்ந்து சதாசிவன் என போற்றப்படுகிறது.



பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆட்கொள்வதனாலும் இவரை ஐமுகக் கடவுள் என்று போற்றுகின்றனர்.

இதிலே அனைத்து தெய்வங்களின் அம்சங்களும் அடங்கிவிடுகிறது.



இதே போல அந்ததந்த முகம் கொன்ட ருத்ராட்சங்களை அணியும் போது அந்த சொருப தெய்வங்கள் நம்மில் சேர்ந்து அருளை பொழிகின்றன.


ஸ்ரீ சிவ காயத்ரி மந்திரம்



ஓம் தத் புருசாய வித்மஹே மகாதேவனாய தீமஹீ 
தந்நோ ருத்ர பிரசோதயாத். 

என்ற சிவனின் காயத்ரி மந்திரத்தை இந்த தமிழர் திருனாள் முதல் ஓதி அவன் அருள் பெற்று அவனின் பாத கமலங்களை நோக்கி செல்ல அவனை வணங்கி அவந்தாள் பணிகிறேன்.

அகத்தியர் கதை – சித்தமெல்லாம் சிவமயம்


அகத்தியர்
அகத்தியர் தோற்றம் பற்றி பல விதமாகக் கூறப்படுகிறது. தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தனர். இவர்களைக் கண்ட அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும், மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும்,மிர்திரர் குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார்
என்றும் பலவாரான கருத்துகள் நிலவுகின்றன.

முன்பு தேவர்களை வருத்திய அசுரர் இப்போதும் வருத்த ஆரம்பித்தனர். இந்திரன் அவர்களை அழிக்க வரும்போது அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்து கொண்டனர். தேவேந்திரன் வேண்டுகோளுக்கிணங்க அகத்தியர் சமுத்திர நீர் முழுவதையும்  குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை  மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியர். அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய
சக்திகளை பெற்றார். கைலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தெந்திசை உயர்ந்தது. அதனால் அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார்.

மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று கூறிச் சென்ற அகத்தியர் மீண்டும் வடதிசை செல்லாததால் விந்திய மலையும்
உயரவில்லை.

இராமபிரானுக்கு சிவகீதையை போதித்துள்ளார் அகத்தியர்.சுவேதன் என்பவன் பிணந்தின்னுமாறு பெற்றிருந்த சாபத்தை போக்கினார். தமக்கு வழிபாடு செய்யாது யோகத்தில் அமர்ந்திருந்த இந்திரத்துய்மன் என்பவனை யானையாகுமாறு சபித்தார். அகத்தியர் தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் மகள்
உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார்.
தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி “*அகத்தியம்*” என்னும் நூலை இயற்றினார்.

அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய்தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியர் சயந்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார்.
வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக்
கறி சமைத்து படைத்து வாதாபியை திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர் இதனை அகத்தியரிடம்
முறையிட்டனர். அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார். வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியை கூப்பிட அகத்தியர் “வாதாபே ஜீர்ணோ பவ” என்று வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான்.

சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் ‘காக உரு’ கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது. இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர். தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தார்.
புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரை’யில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி ‘அகத்தீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் கூறுகின்றனர்.
சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம் வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது. அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது.
ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.

அகத்தியர் தென்நாடு வந்த வரலாற்றை ஆய்வியல் நோக்கில் திரு.N. கந்தசாமி பிள்ளையின் சித்த மருத்துவ வரலாறு நூலில் காணலாம்.
அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை
ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன.

அகத்தியர் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள் பற்றி கூறியுள்ளார்.
*மேலும் அவர் எழுதிய நூல்களில் கிடைத்தவை:*
**
1. அகத்தியர் வெண்பா
2. அகத்தியர் வைத்தியக் கொம்மி
3. அகத்தியர் வைத்திய ரத்னாகரம்
4. அகத்தியர் வைத்தியக் கண்ணாடி
5. அகத்தியர் வைத்தியம் 1500
6. அகத்தியர் வைத்திய சிந்தாமணி
7. அகத்தியர் கர்ப்பசூத்திரம்
8. அகத்தியர் ஆயுள் வேத பாஷ்யம்
9. அகத்தியர் வைத்தியம் 4600
10. அகத்தியர் செந்தூரம் 300
11. அகத்தியர் மணி 4000
12. அகத்தியர் வைத்திய நூல் பெருந்திரட்டு
13. அகத்தியர் பஸ்மம் 200
14. அகத்தியர் நாடி சாஸ்திரம்
15. அகத்தியர் பக்ஷணி
16. அகத்தியர் கரிசில் பஸ்யம் 200
17. சிவசாலம்
18. சக்தி சாலம்
19. சண்முக சாலம்
20. ஆறெழுத்தந்தாதி
21. காம வியாபகம்
22. விதி நூண் மூவகை காண்டம்
23. அகத்தியர் பூசாவிதி
24. அகத்தியர் சூத்திரம் 30
போன்ற நூலகளை இவர் எழுதியதாகக் கூறப்படுகிறது. மேலும்
25. அகத்திய ஞானம் என்னும் அகத்தியம் என்னும் ஐந்திலக்கணம்
26 அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி வைத்திய நூலும் இவரால் செய்யப்பட்டதாகக்
கூறப்படுகிறது.

மகிமைமிக்க திருநீறு


சைவ நெறியினை பின்பற்றுவோரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றுதான் இந்த திருநீறு. சிவச் சின்னங்களில் ஒன்றாக வைத்தும் போற்றப்படுகிறது.
இது சமயத்தின் தோற்ற ஒழுக்க முறையுண்மைகக்கும், கிரமததுவங்களுக்கும், முப்பொருள் உண்மைக்கும் அறிகுறியாய் அமைவது.
மூன்று விரல்களால் இடப்படும் திருநீற்றின் மூன்று கோடுகள் சிந்தனை , சொல், செயல் என்ற திரி சத்தியங்களை உணர்த்த்வதாக அமைகிறது. வாழ்வின் முடிவில் யாவரும் சாம்பல் ஆவர் என்ற நிலையான உண்மையையும் திருநீறு உணர்த்துகின்றது.
திருநீறு பூசிய அடியாரை சிவனாகவே கருதுவது சைவர்கள் இயல்பு, உடம்பெல்லாம் உடம்பெல்லாம் உவர் மண்ணாகிவரும் வண்ணாரை சிவனடியாராக பாவித்து தரையில் விழுந்து வணங்கியர் சேர வேந்தரும், நாயன் மாரில் ஒருவராக போற்றப்படும் சேரமான் பெருமாள் நாயனார்.
மெய்ப்பொருள் நாயனாரும், ஏனாதிநாத நாயனாரும் புற வேதமாகிய திருநீற்றுக்காகவே உயிரைக் கொடுத்தவர்கள்.
மதுரையின் கூன் பாண்டியனின் வெப்பு நோயை தீர்க்க திருநீற்றின் பெருமையை விளக்கி திருஞான சம்பந்தரும் திருநீற்றின் பெருமையை விளக்கி பதிகம் பாடியுள்ளார்.
இந்த வகையில்,
“கங்காளன் பூசும் கவசத்திரு நீற்றை
ங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்க வினைகளும் சாருஞ் சிவகதி
சிங்காரமான திருவடி சேர்வரே”

என்று தெய்வத் திருமூலரும் திரு நீற்றின் பெருமையை உணர்த்தியுள்ளார்.

உணர்வுடையார் உணர்க…
“ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு “

சிவன் தமிழில் போட்ட கையெழுத்து


‘திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது பழமொழி. மாணிக்கவாசகரின் மணிமொழிகள் திருவாசகத்தின் தேன் துளிகள். விண்ணோரும், மண்ணோரும், தென்னாட்டவரும், இந்நாட்டவரும், வெளிநாட்டவரும் எப்படி இவ்வெளிய நடையில், அழகு தமிழில் திருவாசகத்தைப் படைத்தார் என எண்ணி எண்ணி மனமுருகி, வாய்பிளந்த வண்ணம் இருக்கின்றனர்.
பேரருட்பெரியவர்
சைவத்திருமுறைகள் பன்னிரண்டு. அதில் திருவாசகம் எட்டாம் திருமுறையாகும். சிவனடியார்களில் நாயன்மார்கள் 63 பேர். சமயக்குரவர் நால்வர்-அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் ஆவர். திருவாசகம் செந்தமிழுக்கு அன்பு மறையாகவும், உயிர்ப்பிணிக்கு மருந்தாகவும் உள்ளது. அப்பர் சரியைக்கும், சம்பந்தர் கிரியைக்கும், சுந்தரர் யோகத்திற்கும், மாணிக்கவாசகர் ஞானத்திற்கும் உரியவராக எண்ணப்படுவர்.

‘தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’
மாணிக்கவாசகர் மதுரைக்காரர். பெயர் வாதவூரர். மாணிக்கவாசகர் ஏறத்தாழ 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர். இவர் ஐப்பசி விசாகத்தில் பிறந்தாரென கீழ்க்கண்ட செய்யுள் மூலம் தெரியவருகிறது.

சித்திரையில் ஆதிரையில் திருஞானசம்பந்தர்
பக்திமிகும் அப்பர்பிரான் பங்குனி ரோகிணி
வித்துரிய ஐப்பசி விசாகத்தில் வாசகனார்
உத்திரத்தில் ஆவணியில் உதித்தார் நம்சுந்தரரே.
ஆதி சங்கரரைப் போல 32 ஆண்டுகளே வாழ்ந்தார் மாணிக்கவாசகர்.
அப்பருக்கெண் பத்தொன் றருள்வாத வூரர்க்குச்
செப்பிய நாலெட்டிற் றெய்வீகம்-இப்புவியிற்
சுந்தரர்க்கு மூவாறு தொன்ஞான சம்பந்தர்க்
கந்தம் பதினா றறி. – (மாணிக்கவாசகர் அகவல்)

அப்பருக்கு 81, வாதவூரர்க்கு 32, சுந்தரருக்கு 18, ஞான சம்பந்தருக்கு 16 வயதில் முக்தி.
வைகைகரையில் திருவாதவூரில் அமாத்தியர் எனும் அந்தணர் மரபில் சம்புபாதசிருதர், சிவஞானவதிக்குப் புதல்வராகத் தோன்றியவர். மன்னன் அரிமர்த்தன பாண்டியனின் முதல் அமைச்சர். தென்னவன் பிரமராயர் என்ற பட்டம் பெற்றவர்.
சோழநாட்டுக் கடற்கரையில் குதிரைகள் வந்துள்ள செய்தி கேட்ட மன்னன், வாதவூரரிடம் பணம் கொடுத்து வாங்கி வரச்சொன்னான். வாதவூரர் வழியில் திருப்பெருந்துறையில் தங்கினார். சோலை ஒன்றில் சிவாகமங்கள், வேதங்கள் ஒலிப்பதைக் கேட்ட வாதவூரர் அங்கே சென்று, சிவனே குருநாதர் தோற்றத்தில் மரத்தடியில் வீற்றிருக்க, கீழே அடியார்கள் கூடியிருக்கும் காட்சியைக் கண்டு, பசுவைத் தேடிய கன்று போல் விரைந்து சென்று காலடியில் வீழ்ந்து வணங்கி, அருள் தர வேண்டினார்.
”அறை கூவி ஆட்கொண்டருளி
மறையோர் கோலம் காட்டி அருளலும்
உளையா அன்பென்பு உருக ஓலமிட்டு” என்பார் மாணிக்கவாசகர்.
விண்ணவர் தேவர் மற்றவரிருக்க, குதிரை வாங்க வந்த வாதவூரரைத் திருப்பெருந்துறையில் சிவபெருமான் குருவாய்த் தோன்றி குருந்த மரத்தினடியில் அமர்ந்து தடுத்தாட்கொண்டு, தன் நீள் கழல்களைக் காட்டி ஸ்பர்ச, நயன, மந்திர தீட்சைகளை அளித்து மறைந்தார். வாதவூரரரை இறைவன் ‘மாணிக்கவாசக’ என அன்புடன் அழைத்தார்.

ஆண்டவனால் ஆட்கொள்ளப்பட்ட, வாதவூரர், பாடிய முதல் அடி
“நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க” .

அவ்விடத்தில், மதுரை மன்னன் குதிரை வாங்கக் கொடுத்த பணத்தில் இறைவனுக்கு ஆலயத்தைக் கட்டினார். பணத்தைத் திருப்பணிகளுக்கும், சிவனடியார்களுக்கும், மனத்தை சிவ வழிபாட்டிலும் கொடுத்த செய்தி கேட்ட மன்னன், மாணிக்கவாசகரைத் திரும்பி வருமாறு பணித்தான். மாணிக்கவாசகர் சிவன் கொடுத்த மதிப்பில்லா மாணிக்கமொன்றை அரசனிடம் அளித்து, “ஆவணித் திங்கள் மூல நாளில் குதிரைகள் வரும்” என்றார்.
பின்னர் அது பொய்யென்றறிந்த மன்னன், அவரைச் சிறையிலடைத்தான். சிவபெருமான் குதிரை வணிகனாகச் சென்று, நரிகளைப் பரிகளாக்கி அரசனிடம் கொடுத்தார். அவை, இரவில் மீண்டும் நரிகளாகி, மற்ற குதிரைகளையும் கடித்தன. இதனால் கோபம் கொண்ட மன்னன், மாணிக்கவாசகரை சுடுமணலில் கல்லேற்றி நிறுத்தினான்.
ஆண்டவன் வாங்கிய பிரம்படி
இதையறிந்த இறைவன் வைகையைப் பெருக்கி, மதுரையை வெள்ளத்தில் அமிழ்த்தி அச்சுறுத்த, அரசன் கரையை அடைக்க மக்களை ஏவினான். சிவபெருமான் கூலியாளாக, வந்தி எனும் பிட்டு வாணிச்சிக்கு உதவ வந்து, பிட்டை வாங்கிக் கொண்டு, கரையை அடைக்காமல், உறங்கியதால் அரசனிடம் பிரம்படி பட்டார். அடித்த அடி, அண்ட சராசரங்கள் மற்றும் அனைத்து உயிர்களின் மீதும் பட்டது. அடியாருக்காக அடி வாங்கிய இறைவன் வெள்ளத்தைக் குறைத்து மாணிக்கவாசகரின் பெருமையை உணர்த்தி, மறைந்தருளினார்.

உண்மையை உணர்ந்த மன்னனிடம் விடைபெற்ற அடிகள், மதுரையிலிருந்து புறப்பட்டு, பல திருத்தலங்களைத் தரிசித்து, மனம் கசிய திருப்பதிகங்கள் பல பாடினார். திருவாசகத்தில் 51 பகுதிகள் உள்ளன. இவற்றுள் 20 பகுதிகள், திருப்பெருந்துறையில் பாடப் பட்டன. இலங்கையிலிருந்து வந்த புத்தர்களை வாதில் வென்று, இலங்கை மன்னனின் ஊமை மகளைப் பேசச் செய்தார். அவள் வாயிலாகப் புத்தன் கேள்விகளுக்குப் பதில் சொல்லவைத்தார்.
ஆன்மிக வரலாற்றுச் சிறப்புகள்
* இறைவன் மனிதனுக்குச் சொன்னது ‘பகவத்கீதை’ – பகவான் கிருஷ்ணன் அருச்சுனனுக்கு அருளியது.
* மனிதன் இறைவனுக்குச் சொன்னது ’திருவாசகம்’ – மாணிக்கவாசகரிடம் சிவபெருமான் வேண்டி எழுதியது.
* மனிதன் மனிதனுக்குச் சொன்னது – திருக்குறள் – திருவள்ளுவர் படைத்தது.

இத்தருணத்தில் வேழமுகத்தோன் விநாயகப்பெருமான், தன்னுடைய தந்தத்தை உடைத்து வேத வியாசருக்காக, மகாபாரதத்தை எழுதியதையும் நினைவு கொள்க.
கைச்சாத்து
திருவாசகப் பாடல்கள் அதுவரை ஏட்டில் எழுதப்படாமலிருந்தன. திருவாசகத்தின் தேனினுமினிய தீந்தமிப் பாக்களைக் கேட்டு சொக்கிய மதுரைக் கடவுள் சொக்கநாதர், இப்புண்ணிய பூமியில் அந்தணனாய் உருக்கொண்டு மணிவாசகரைக்கண்டு, பாடல்களை எழுதிக்கொள்ள வேண்டினார். மாணிக்கவாசகர் இசைந்தருள, அட்சர லட்சம் பெறும் ஒவ்வொரு பாக்களையும் தம் அருள்புரியும் திருக்கரங்களால் ஓலைச்சுவடியில் எழுதினார். பாவை பாடிய வாயால் கோவை பாடுமாறு மீண்டும் இறைவன் வேண்ட, அவரும் பாடினார். இறைவன் விடைபெற்று, ’மாணிக்கவாசகர் சொற்படி அழகிய சிற்றம்பலவன் எழுதியது’ எனக் கையொப்பமிட்டு, ஓலைச்சுவடிகளைத் தில்லைப் பொன்னம்பலத்தின் கருவறையில் பஞ்சாட்சரப்படியில் வைத்தார். மறுநாள் அடியார்கள் ஏட்டைக்கண்டு மாணிக்கவாசகரை அழைத்து பொருள் விளக்க வேண்ட, ”அம்பலவாணரே இதன் பொருள்” என்றருளினார். இறைவன் அருட்பேரொளியாகத் தோன்றி, அத்தாட்சி அளித்து மாணிக்கவாசகரைத் தம்மோடு சோதியில் இணைத்துக்கொண்டார். அன்று ஆனி மாமக நன்னாள்.

எவ்வுலகிலும், எக்காலத்திலும், எவருக்கும் இறைவன், தில்லைக்கூத்தன், இதுவரை கைச்சாத்து அளித்ததில்லை. சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நிற்கும் திருவாசகத்தைக் கறந்த பால் கன்னலொடு, நெய் கலந்தாற்போல நமக்களித்த மாணிக்கவாசகர் ஒருவர் மட்டுமே, தாயிற்சிறந்த இறைவனால் கைச்சாத்துடன் நற்சான்றிதழ் பெற்ற மகாத்மா.
திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோவில்
இறைவன் அமர்ந்த இடம் குருந்த மரத்தடி. குருந்த மரத்தின் இலைகள் ஒவ்வொரு கொத்திலும் மூன்று வகை இலைகளுடன் காணப்படும். அவ்விடமே, கோவிலாகியது. இறைவன் திரு உருவச்சிலைகள் இங்கு இல்லையே தவிர, இக்கோவில், சிற்பக்கலையின் உன்னத சிகரமாக இருக்கின்றது. பூத கணங்களே இக்கோவிலைக் கட்டினர் என்பர். சிற்பிகள் தங்களது பணி ஒப்பந்தங்களில் “தாரமங்கலம் தூணும், திருவலஞ்சுழி பலகணியும், ஆவுடையார் கோவில் கொடுங்கையும் நீங்கலாக” என்று எழுதுவர் எனக் கேள்வி. கோவில் கணக்குகளில், ஆளுடையார் கோவில் என்று காணப்படுகின்றது. இலக்கியங்களில், அநாதி மூர்த்தித் தலம், சதுர்வேதபுரம், யோகபீடபுரம் என்றும், கல்வெட்டுகளில் சதுர்வேதமங்கலம் என்றும், திருவாசகத்தில், சிவபுரம் என்றும் வழங்கப் பெற்றுள்ளது. தற்போது கோவிலின் பெயராலேயே, ஊரும் அழைக்கப்பட்டுவருகிறது.

கோவிலின் சிறப்பு
தலம்: திருப்பெருந்துறை
மூர்த்திகள்: ஆத்மநாதர், யோகாம்பிகை
தீர்த்தம்: ஒன்பது- சிவ தீர்த்தம், அக்கினி தீர்த்தம், தேவ தீர்த்தம், முனிவர் தீர்த்தம், அசுர தீர்த்தம், வாயு தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், நாராயண தீர்த்தம், பிரம தீர்த்தம்

புனித மரம்: குருந்த மரம்
கோவிலின் மூலவர் ஆத்மநாதர் ஸ்வாமி ஆவார். சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. சிவபெருமானுக்கு ஆவுடையாரும் (சக்தி பீடப்பகுதி) எதிரில் ஒரு மேடையும் (அமுத மண்டபம்) மட்டுமே உள்ளன. ஆவுடையாருக்குப் பின் சுவரில் 27 நட்சத்திரத் தீபங்களும், அதற்கு மேல் சூரிய, சந்திர, அக்கினி தீபங்களும் ஒளிர்கின்றன. அம்மன் யோகாம்பிகை சந்நிதியில் யோக பீடமும், அதன் மேல் அம்மன் பாதங்களும் மட்டும் உள்ளன. அதுவும் பலகணி வழியே மனத்தை ஒருமுகப்படுத்தினால் மட்டும் தரிசிக்க முடியும். மாணிக்கவாசகருக்கு தனிச் சந்நிதி இருக்கிறது. கோவிலில் கொடிமரம், நந்திக்கடவுள், சண்டேசர் ஆலயம் கிடையாது. இங்கே நடராஜர், விநாயகர், முருகர் தவிர பரிவார மூர்த்திகள் இல்லை. தீபாராதனை கருவறையை விட்டு, வெளியே வராது. புழுங்கல் சோறு, கீரை, பாகற்காய் ஆகியவற்றின் ஆவியே நிவேதனம். அடியார் மாணிக்கவாசகருக்காக மட்டும், வருடந்தோறும் ஆனித்திருமஞ்சனத் திருவிழா நடக்கிறது.

ஏனைய கோவில்கள் சரியை, கிரியை வழிபாட்டிற்கும், இக்கோவில் மட்டும் யோக, ஞான மார்க்க வழிபாட்டிற்கும் உரியதாக உள்ளது. அதனால் இக்கோவில் அமைப்பு மற்ற கோவில்களிலிருந்து பெரிதும் மாறுபட்டுள்ளது. மூலாதாரம் முதலாக ஆறு ஆதாரங்களின் வடிவாகவும், சிவனை அரூபமாகவும் நிர்மாணித்து, யோகிகளும், ஞானிகளும் வழிபடும் வகையில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது என்பர்.
பஞ்சாட்சர மண்டபம்
மூன்றாம் பிராகாரத்தில், இரண்டாம் கோபுர வாசலை ஒட்டி, பஞ்சாட்சர மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தின் மேல் தளத்தில் மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை எனும் ஆறு அத்துவாக்கள் கட்டங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

கற்சிலை ஓவியங்கள்
சிற்ப வேலைகளைப் பற்றிச் சொல்லி மாளாது. நேரில் கண்டால் பிரமிப்பு அடங்காது. வல்லப கணபதி, உக்கிர நரசிம்மர், பத்திரகாளி, ஊர்த்துவ தாண்டவர், பிட்சாடனர், வில் பிடித்த முருகன், ரிஷபாரூடர், சங்கரநாராயணர், குதிரைச்சாமி, குறவன், குறத்தி, வீரபத்திரர்கள், குதிரைக்காரர்கள், நடன மங்கைகள், விலங்குகள், உயிரோட்டத்துடன் ரத்த நாளங்கள் தெரிய மிளிர்கின்றன. தவிர டுண்டி விநாயகர், உடும்பும் குரங்கும், இரண்டே தூண்களில் ஓராயிரம் கால்கள், 1008 சிவாலய இறைவன், இறைவியின் உருவங்கள், பல நாட்டுக் குதிரைகள், நடனக்கலை முத்திரைகள், சப்தஸ்வரக் கற்தூண்கள், போன்ற அற்புதங்கள் மற்றும் நட்சத்திர மண்டலம், பச்சிலை ஓவியங்கள், கூரையிலிருந்து தொங்கும் கற்சங்கிலிகள் ஆகியன நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. மேற்கூரையான கொடுங்கை மிகச்சன்னமாக இழைக்கப்படுள்ளது. மரச்சட்டங்களில் குமிழ் ஆணி அடித்தது போல நுட்பமான வேலைகள் கல்லில் அடிக்கப்பட்டுள்ளன. அதில் நிஜக் கம்பிகள் போன்ற அமைப்பு உள்ளது. இதை நம்பாத ஒரு ஆங்கிலேயன் துப்பாக்கியால் சுட்டதால் ஏற்பட்ட ஓர் ஓட்டையும் கொடுங்கையில் உள்ளது. மொத்தத்தில் சிற்ப வேலைப்பாடுகள், கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி மிக மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன.

இக்கோவில், திருவாவடுதுறை ஆதீனத்தால் சிறப்பாகப் பராமரிக்கப்படுகிறது. புதுக்கோட்டையிலிருந்து, 45 கி.மீ தொலைவில் உள்ளது. அறந்தாங்கியிலிருந்து, 14 கி.மீ தூரம்.
மாணிக்கவாசகர் தீந்தமிழைத் தேனில் தோய்த்தெடுத்து, பக்தியால் உருக்கி, அன்பினால் வார்த்து, எளிய நடையெனும் உளியால் பதமுடன் பக்குவமாய்ச் செதுக்கி, என்றென்றென்றும் நிலைத்திருக்கும் சிலைபோல் திருவாசகத்தைப் படைத்தார். ஆவுடையார் கோவிலைக் கட்டிய சிற்பிகளோ, தமது கலைத்திறமையால் இக்கோவிலைக் கட்டிச் சிலைகளை உருவாக்கிக் காலத்தால் அழியாத ஒரு பெரும் காவியமாகப் படைத்தார்கள்.
நூலின் மகிமை
மற்றெந்த நூலையும் படித்து, சிந்தித்து அவ்வாசிரியரின் மனத்தைப் படம் பிடித்து ஒரு கட்டுரை எழுதிவிடலாம். திருவாசகத்தை மட்டும் படித்துக் கொண்டே இருக்கத்தான் மனம் விழைகிறது. திருவாசகத்தைப் படித்தலும் கேட்டலும் எப்போதுமே ஒரு இனிய அனுபவமாக இருந்துவருகிறது. திருவாசகத்தைப் பற்றி ஆழ்ந்து அனுபவித்து எழுதினால் பல புத்தகங்களாக நிரம்பிவிடும். பானை சோற்றுக்கு ஒரு சோறுதான் இக்கட்டுரை.

“வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே” -
-வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளின் ஆளுடைய அடிகள் அருள்மாலை
மாணிக்கவாசகரின் உயர்ந்த பக்குவம்
மாணிக்கவாசகர் எவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்தாலும், தன்னை மிகவும் தாழ்த்திக் கொண்டார். பணிவு, தன்னடக்கம், எளிமை ஆகியவற்றின் மறு உருவமாக இருந்தார். தன்னை நாயினும் கீழாகக் காட்டிக் கொண்டார்.

உதாரணங்கள்:
‘நாயினேனை நலமலி தில்லையுட்’
‘நாய்ச்சிவிகை ஏற்றினார்ப் போல’
“பிழைப்பு வாய்ப்பொன்று அறியா நாயேன்
குழைத்தசொல் மாலை கொண்டருள் போற்றி”

மேலும் ஒரு சாதாரண மனிதனுக்குரிய ஆசாபாசங்களைப் வெளிக்காட்டி, பசி, தூக்கம், பெண் மயக்கம், ஆகியவற்றிலிருந்து தன்னை எப்படி இறைவன் காத்து, அருளினார் என்பதையும், மாயையிலிருந்து தன்னை விடுவிக்கும் படியும் மனமுருகி வேண்டிக் கொண்டார்.
“நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து நானடுவே”
“அரவன் ஆண்டுதன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டோமே.”
“மண்ணி லேபிறந்(து) இறந்துமண் ஆவதற்(கு)
ஒருப்படு கின்றேனை
அண்ணல் ஆண்டுதன் அடியரில் கூட்டிய
அதிசயம் கண்டாமே”

அதேபோல், மறுபிறவியைக் கொடுத்து விடாதே எனவும் மறவாமல் கேட்டுக்கொண்டார். ஞானத்தைக் கொடுக்கும்படி கெஞ்சினார்.
கற்பனைக்கெட்டா வர்ணனை வளம் பெற்றவர் மாணிக்கவாசகர். இறைவனின் கருணையை வாழ்த்தும் அவருடைய பிரபலமான பாடல்:
“வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே”

பொதுவாக, கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பர். மாணிக்கவாசகர், அதற்கு மாறாக, ஞானம் கிடைத்தவுடன் அப்பேரின்பத்தை அனைவருடனும் பகிர்ந்து கொண்டார்.
“அருளதறிய தறியேன் பருகியும் ஆரேன்
விழுங்கியும் ஒல்ல கில்லேன்
செழுந்தண் பாற்கடல் திரை புரை வித்து
உவாக்கடல் நள்ளுநீர் உள்ளகம் ததும்ப
வாக்கிறந்து அமுதம் மயிர்க்கால் தோறும்
தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊந்தழை
குரம்பை தோறும் நாயுடல் அகத்தே
குரம்பைகொண்டு இன்தேன் பாய்ந்து நிரம்பிய
அற்புத மான அமுத தாரைகள்
எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவது”

வீட்டுக்கொரு திருவாசகம் இருக்க வேண்டும். அன்பர்கள், மெய்யுருக்கும் திருவாசகத்தைப் படித்தின்புற்று மனம்கசிந்து மெய்ஞானப்பாதையில் முன்னேற தில்லைக்கூத்தன் அருள்புரிவாராக.
நன்றி -
அம்மன் தரிசனம்.

எட்டி மரம்.



எட்டி மரம்.

1) மூலிகையின் பெயர் -: எட்டி மரம்.

2) தாவரப்பெயர் -: STRYCHNOS NUX VOMICA.

3) தாவரக்குடும்பம் -: LOGANIACEAE.

4) வேறு பெயர்கள் -: நக்ஸ்வாமிகா.

5) வளரியல்பு -: எட்டி மரம் தெய்வீக மூலிகைகளில் ஒன்றாகும். எட்டி மரம் ஒரு நடுத்தரமரம். எல்லா நிலங்களிலும் வளரக் கூடியது. இது எப்பொழுதும் பசுமையாக இருக்கும். இது சுமார் 18 அடி உயரம் வரை வளர்கூடியது. இதன் இலை பச்சையாக 2 அங்குல அகலத்தில் 5 - 9 செ.மீ. நீளம் வரை இருக்கும். அதன் தாயகம் தென் கிழக்கு ஆசியா. தென் அமரிக்கா, மற்றும் பர்மா, சைனா, கிழக்கிந்தியா, தாய்லாண்டு, வட ஆஸ்திரேலியா, இலங்கை, கம்போடியா, வியட்னாம், மலெசியா(மலேயா) இந்தியா போன்ற நடுகளில் பரவலாக உள்ளது. இலை வேர் காம்பு,பட்டை விடத் தன்மை உடையது. உயிரையும் கொல்லும். அதனால் இதை கவனத்துடன் கையாள வேண்டும். இது விதைமூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.


6) மருத்துவப் பயன்கள் -: இதன் பொதுவான குணம். வெப்பத்தை உண்டாக்கும். வாய்வை அகற்றும், மலத்தை உண்டாக்கும், நிறு நீரைப் பெருக்கும், நரம்பு மண்டலத்தை இயக்கும், வயிற்றுவலி, வாந்தி, அடிவயிற்றுவலி, குடல் எரிச்சல், இருதயவயாதி, இரத்த ஓட்டம், கண்வியாதி, மன அழுத்தம், நரம்பு சம்பந்தமான நோய்கள், தலைவலி, மாதவிடாய் பிரச்சனைகள், மூச்சுத்திணரல் போன்றவற்றைக்
குணப் படுத்தும்.

எட்டிமரத்தின் வடபாகம் செல்லும் வேரை உரித்த பட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் ஊற வைத்து உலர்த்தி சூரணம் செய்யவும். தும்பை இலை+சிவனார் வேம்பு சம அளவு கசாயத்தில் 2 கிராம் இந்தச் சூரணத்தைப் போட்டு உள்ளே கொடுக்க பாம்பு முதலான விடம் தீரும். மேலும் 2-3 நாள் கொடுக்க வேண்டும். கடி விட வலி, வீக்கம் குணமாகும்.

இநன் பொடி இரு கிராம் அளவு உப்படனோ, வெற்றிலையுடனோ தின்ன தேள்கடி விடம் தீரும்.

வேர்ப்பட்டை 20 கிராம் 200 கிராம் மி.லி.நீரில் போட்டுக் காயச்சி குடி நீராக மூன்று வேளை கொடுக்க காலரா,வாந்தி, பேதி குணமாகும்

இதன் சூரணத்தை வெந்நீரில் 1-2 கிராம் கொடுக்க வாத வலி, இசிவு தீரும்.

மரப்பட்டை 10 கிராம் 100 மி.லி.எள் நெய்யில் போட்டுக் காயச்சி மேலே தடவ சொறி, சிரங்கு ஆராத புண் குணமாகும்.

இதன் இலையை வெந்நீரில் போட்டு அந்த நீரில் குளிக்க நரம்பு வலி தீரும்.

இளந்துளிரை அரைத்து வெண்ணெயில் மத்தித்துப் பூச கட்டிகள் கரையும். வெப்பக்கொப்புளம் குணமாகும்.

எட்டிப் பழத்தைப் பிழிந்து சிவனார் வேம்பு குழிது தைலம் இறக்கி கந்தகப் பற்பத்துடன் கொடுத்து வர குட்ட நோய் குணமாகும். நோய்உடலில் எவ்வளவு நாள் இருந்த தோ அவ்வளவு நாள் கொடுக்கவும்.

எட்டிமரத்தின் வடக்குப் பக்கம் சென்ற வேர் மாந்திரீகம் செய்யப் பயன்படும்.

எட்டி இலையை தவறுதலாக உண்டவர்களுக்கு முறிப்பு மருந்தும் அறிதல் நன்றாம். கடுக்காய் கசாயம், வெற்றில்ச் சாறு, மிளகு+ வெந்தயக் கசாயம் ஆகியன எட்டிக்கு விட மிறிப்பாகும். எட்டி பிற மருந்துகளை முறிக்கும் குணத்தைப் பெற்றதாகும். எல்லாவிடங்களையும் முறிக்க எட்டியின் ‘நக்ஸ்வாமிகா’ கொடுக்கப்படுகிறது.

எட்டிக் கொட்டை -:

‘கைக்கறுப்பு சந்நி கடிவிஷங்குஷ் டூதைவலி
யெப்க்கவரு தாதுநஷ்டமெபவைபோ-மைக்கண்ணாய்
கட்டி கரப்பான் கனமயக்குப் பித்தமுமி
லெட்டிமரக் கொட்டையினால்’

எட்டிக் கொட்டையால் கருமேகம், சந்நி, குஷ்டம், வதவலி, வீரிநஷ்டம், பிடகம், கரப்பான், மூர்ச்சை, பயித்தியம் இவை போம்.

சுத்தம் செய்த எட்டி விதையைச் சந்தனக் கல்லின் மீது சலம் விட்டு உரைத்து வழித்துச் சிறுது வெதுப்பித்தலைவலிக்குத் தடவிச் சிறுது அனல் காட்டக் குணமாகும்.இன்னும் இதைக் கோழி மலத்துடன் சேர்த்தரைத்து வெறிநாயக் கடிக்கு மேற்றடவக் குணமாகும்.

எட்டி வித்து விராகனெடை 1, மிளகு விராகனெடை2, சுக்கு விராகனெடை 2.5, மான் கொம்பு விராகனெடை 1.5 இவற்றையெல்லாம் சூரணித்து அம்மியில் வைத்துச் சிறிது சலம் விட்டரைத்து வழித்து ஒரு கரண்டியில் விட்டு நெருப்பனலில் வைத்துச் சிறிது வெதும்பி களிபோல் செய்து அடிவயிறு வீக்கம், கீல்களில் காணும் வீக்கம் இவை மேல் பூசக் குணமாகும்.

எட்டிப் பழம் -:

ஒரு சுத்தமான மண்தரையில் 1 வீசைப் புளியம் புறணியைப் போட்டுக் கொழுத்திச் சாம்பலான சமயம் அச்சாம்பலை நீக்கி விட்டு அந்த சூடேரிய தரையில் 30-40 எட்டிப் பழத்தைச் சிதைத்துப் போட்டு அதன் பேரில் பாதத்தை அழுத்த வைத்து எடுக்கவும். இப்படி இரு பாதங்களையும் மாற்றி மாற்றிச் சூடு தாளும் வரையில் வைத்தெடுக்க குதிங்கால் வாதம் குணமாகும். இது விசேசமாக பெண்களுக்கு பிரசவித்த பின் அழுக்குத் தங்கி இரு பாதங்களில் உணைடாகும் எரிச்சல், திமிர், வலி முதலியவற்றிக்கு சிறந்த சிகிச்சையாகும்.

இதைப் பற்றி சித்தர்களான அகத்தியர், தேரையர் மற்றும் புலிப்பாணி ஆகியோர் பல நூல்களில் எழுதியுள்ளனர்.

-------------------------------------------(மூலிகை தொடரும்)

SAYANA SIVAN, பிரதோஷ விரதம், PRADOSHA VIRADHAM, SURUTAPALLI, LORD SHIVA IN RECLINING POSITION


HOW PRADOSHAM STARTED AND THE SIGNIFICANCE OF PRADOSHAM - THIS TEMPLE BLESSED BY KANCHI PARAMACHARYA!!!
ABOUT 56 KM from Chennai, on the Tamil Nadu-Andhra Pradesh border, is a small village called Surutapalli, which houses the only "Sayana Sivan" (sleeping Shiva) called Pallikondeswarar. The temple has an interesting history which is as follows:
Once Indra lost his kingdom and found that only if he consumed the Divine Nectar he could rule. So there was a tug of war between the devas and asuras to obtain this nectar. The Devas and Asuras got together to churn the ocean, using Mandramalai & Vaasuki, the snake. As they continued to churn the ocean, Vaasuki the snake began to tire and started spewing its poison. Siva  consumed all the poison. Thus Siva became blue up to his throat and is also known by the name "Neelakantan" ( neela-blue colour, kantam-throat).
Goddess Parvati rushed and held his neck so that the poison would not spread to the whole of his body. Shiva then became drowsy and selected Surutappalli, where he is seen inclined/sleeping posture on the lap of Parvathi. This is the only temple that houses Lord Shiva in a sleeping position.
Narada, meanwhile, passed on the message and down came the Devas, Brahma, Vishnu and the Saptarishis, to have darshan. They were promptly stopped by Nandi who asked them all to come after some time, as Shiva was resting. All of them waited. Shiva, when he woke up, was filled with extreme happiness and danced ("Ananda Thandavam"). This day, when the Devas, Brahma, Vishnu, Narada and Saptarishis had Shiva darshan was a Krishnapaksha Trayodasi (Stiravaram, Saturday). This is the Mahapradosham day. Pradhosham, generally, is a significant occasion observed with great piety at all Shiva temples.
It is believed that all the Devas & Gods are assembled in the Shiva temples during Pradosham time. Further, the first pradosham was on a Saturday & hence "Sani Pradosham" is even more auspicious.
பிரதோஷ விரதம்: பிரதோஷ விரதம் சிவமூர்த்திக்கு உரிய பலவித விரதங்களில் முக்கியமானது.இவ்விரதத்தை அனுஷ்டிப்போர் துன்பங்களில் நின்றும் நீங்கி இன்பத்தை எய்துவர். பிரதோஷ நேரத்தில் கடவுளை நினைத்துக் கொண்டால், கேட்ட கோரிக்கை பலிக்கும் என்பது நம்பிக்கை. அலுவலகத்தில், பணியில் இருப்பவர்கள் இந்நேரத்தில், ஒரு விநாடி தங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொள்வது நல்லது.
Pradhosha Vrata Significance:-
According to the Shiva Puranas, observing a fast on Pradosham Vratam is regarded as highly auspicious and beneficial. One would be blessed with wealth, children, happiness and honor. While the fast is undertaken by all Shiva devotees, but all women who have been longing for a son specially observe this. Also, praying to Lord Shiva during the course of the fast is said to liberate the devotee from all his previous and present sins and evil deeds committed. According to one legend, Lord Shiva is believed to have drunk the Halahala poison during Pradosham. This poison was mixed with the Ocean of Milk (Samudra Manthan). 
When you visit Tirupathi/Kalahasthi from Chennai,  this is on the highway and visit this amazing place, and seek the blessings of the Lord. 
The route is Chennai -> Redhills -> Periyapalayam -> Uthookottai -> Surutapalli.
The route is Tirupathi -> Puoor -> Nahalapuram -> Surutapalli.
 OM NAMA SHIVAYA SHIVAYA NAMA OM!!!
NOTE: ENLARGE THE LORD'S PICTURE AND SEE THE BEAUTY!!!  RARE TEMPLE!!!


MOOLAVAR - SURUTAPALLI - RARE TEMPLE FOR LORD EASHWAR/SIVAN,SHIVA,ISHWAR.