February 03, 2012



Sivan Malai Temple

ஒரு நிகழ்வு குறித்து உலகம் அறியும் முன்பே சொல்லும் ஒரு சக்தி வாய்ந்த மலைக் கோவில் குறித்து அறிந்து அதைக் காண ஆவலுடன் சென்றோம். 

சிந்தையை அடக்கி சும்மா இருக்கின்ற திறம் அரிது. பஞ்ச பூதங்களின் சக்தியை உணர்ந்து சித்தத்தை அடக்கி செயற்கரியன செய்து வென்றவர்கள் தான் சித்தர்கள். அவ்வகையைச் சேர்ந்தவர்களில் ஒருவரான சிவ வாக்கிய சித்தர் பூஜித்த மலை தான் சிவன்மலை.

எங்கும் வளம் பொங்கும் கொங்கு நாட்டின் சிங்க நகரான காங்கயத்திற்கு அருகில் காங்கயம்-திருப்பூர் நெடுஞ்சாலையில் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிவன்மலை.

இம்மலை மீது கோவில் கொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடந்த பல வருடங்களுக்கு முன்பு, பட்டாலிமலை என்று வழங்கப்பட்டதாகவும், அதன் பின் அங்கு வந்து சித்தர் சிவவாக்கியர் முன்நின்று முயன்று சான்றோர்களின் பெருந்துணையுடன் பக்தர்களின் ஒத்துழைப்பாலும் பல திருப்பணிகள் செய்துள்ளார். அது முதல் இந்த மலை சிவன் மலை என்று பெயர் பெற்றதாம்.

மேலும், அக்காலத்தில் இந்த மலையை சுற்றி பசுக்கள் சூழ்ந்தும் மேய்ந்தும் வர வளம் பெற்றுள்ளது. பசுக்களை சேய் என்று கூறுவது தமிழ் வழக்கில் உள்ளது. இதனால் சிவனின் சேயான குகன் வந்து அமர்ந்து அருள்பாலிப்பதாலும் சேமலை என்று அழைக்கப்பட்டது. கால சுழற்சியில் அது சிவன்மலை என மருவியதாகவும் ஒரு தகவல் உண்டு. 

இந்த மலையின் சிறப்பு குறித்து அங்கு சாமி கும்பிட வந்த ஈரோட்டைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர் ராஜேஷ் என்பவரிடம் பேச்சு கொடுத்தோம். அவர் நம்மிடம், சிவன்மலை முருகப் பெருமானின் சிறந்த திருத்தலமாகும். இது கொங்கு நாட்டின் புகழ்ப் பெற்ற திருத்தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள முருகன் சக்தி வாய்ந்த தெய்வமாகும். தான் தெரிவிக்க விரும்புவதை பக்தர்களின் கனவில் வந்து கூறி கட்டளையிட்டு பின் நடப்பதை முன் கூட்டியே தெரிவி்க்கும் அபூர்வ சக்தி கொண்டவர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோயில் பெட்டியில் சொம்பில் தண்ணீர் வைக்க உத்தரவு வந்தது. இதனால் நாட்டில் என்ன நடக்கப் போகின்றது என அது பற்றி அப்போது யாருக்கும் தெரியவில்லை. ஆனால் சில நாட்களிலேய தமிழகத்தில் மக்களின் மனங்களில் மாறாத வடுவை ஏற்படுத்திய பேரழிவு அரக்கன் என்ற சுனாமி வந்து அப்பாவிகள் பலர் உயிரையும் பலிவாங்கிவிட்டது. அப்போது தான் இந்த பெட்டியில் உள்ள பொருளுக்கு மதிப்பு இன்னும் அதிகமானது. 

அடுத்து மஞ்சள் வைத்து கோயிலில் பூசை செய்தனர். முன்பு காட்டில் சும்மா கிடந்த மஞ்சள் தங்கத்தின் விலையை விட அதிக அளவுக்கு மார்க்கெட்டில் விற்பனையானது. அப்போது விண்ணை முட்டும் அளவு உயர்ந்த விலை இப்போது வரை பழைய நிலைக்கு திரும்பிவே இல்லை என்றார்.

அடுத்து அங்கிருந்த கரூரைச் சேர்ந்த தேமுதிக முன்னாள் மாவட்டத் தலைவர் விஸ்வநாதன் என்பவர் கூறுகையில், நான் இந்த கோவிலின் மகிமை தெரிந்து அடிக்கடி வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றேன். இங்கு வந்துவிட்டு சென்றாலே ஒரு மாற்றம் நிச்சயம். இந்த கோவிலின் சக்தி ஆபூர்வமானது. முன்பு ஒரு பக்தரின் கனவில் வந்து மண் வைத்து பூசை செய்யச் சொன்னதாம். அது முதல் இந்த பகுதியைச் சுற்றி நிலத்தின் மதிப்பு கண்ணாபிண்ணா என உயர்ந்து வி்ட்டதாம். அவ்வளவு ஏன் தமிழகத்தில் பல இடங்களில் இதே நிலை தான். இப்போது கூட சாமானிய மக்கள் நிலம் வாங்குவது குதிரைக் கொம்பாக உள்ளது. 

அதே போன்று மற்றொரு பக்தரின் கனவில் வந்து 500 ரூபாய் பணம் வைக்கச் சொல்லி உத்தரவு வந்ததாம். அதன் பின்பு மக்கள் மத்தியில் 10, 20, 50 ரூபாய்க்கு மதிப்பு குறைந்து போனது. ஏன் 100 ரூபாய்க்கு கூட மதிப்பு குறைந்து, தற்போது பலரிடம் ரூ. 500 சரளமாக புழக்கத்தில் உள்ளது. இது தான் முருகனின் அருள் என பெருமை பொங்கச் சொன்னார். 

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு பக்தரின் கனவில் வந்து அரைப் பவுன் தங்கத்தை வைத்து பூசை செய்யச் சொன்னதாம். 

சாமிக்கு கூட தங்கத்தின் மீது காதலா என பலரும் வியந்து கிடக்க, அடுத்த சில நாட்களிலேயே அதன் உண்மை நிலவரம் உலகிற்கு தெரிய வர ஆரம்பித்தது.

அது என்ன வென்றால் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்ததே அப்போது தான். பெண்ணைப் பெற்றவர்கள் முருகா இது என்ன சோதனை என குரலை உயர்த்தியவர்கள் இப்போது வரை முருகா நீ தான் எங்க பெண்ணை கரை சேர்க்க வேண்டும் என பிராத்தனை செய்து வருகின்றனர்.

இது இப்படி என்றால் மற்றொரு பக்தரின் கனவில் வந்த முருகன், தேங்காயை வைக்கச் சொல்லி உள்ளார். அது போலவே தேங்காயை வைத்து பூசையும் நடைபெற்றது. அப்போது தான் தேங்காய் விலையும் கூட அதிகரித்தது. கொப்பறை தேங்காய்க்கும் ஒரு மவுசு வந்து அது கொப்பறை தேங்காய் ஊழல் வரை சென்று நின்றது என்கின்றனர்.

தற்போது திருப்பூரைச் சேர்ந்த கோடீஸ்வரன் என்ற பக்தரின் கனவில் தோன்றி பச்சை அரிசி வைக்கச் சொல்லி உத்தரவு வந்ததாம். அதன்படியே அந்த பெட்டியில் தற்போது பச்சை அரிசி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இதைச் சொன்ன கோடீஸ்வரன் என்ற பக்தரின் பெயரும், அவர் கோயிலில் வந்து சொன்ன தேதியும் மறவாமல் குறிப்பிட்டுள்ளனர். 

கடவுள் கனவில் சொல்லுகின்ற அந்த பொருளை அந்தப் பெட்டியில் எப்போது வைப்பார்கள் என்று கோயில் ஊழியர் ஒருவரிடம் கேட்ட போது,

காங்கயத்திற்கு அருகில் உள்ள திருப்பூர், வெள்ளக்கோயில், தென்னிலை, பரமத்தி, பல்லடம், கோவை மற்றும் பல சுற்றுப்புற கிரமங்களில் உள்ள தனது பக்தர் ஒருவரின் கனவில் சாமி தோன்றி பெட்டியில் வைக்க வேண்டிய பொருள் பற்றி கூறுவார். 

மறுநாள் அருள் வந்த நிலையில், அந்த நபர் தனது கனவில் சுவாமி தோன்றி சொன்னது குறித்து கோயில் நிர்வாகியிடம் வந்து தெரிவிப்பார். அவர் சொன்னது உண்மை தானா என்று தெரிந்து கொள்ள கோயில் நிர்வாகிகள் பூக்களை பொட்டலத்தில் வைத்து அதை சாமி முன்பு போட்டு பூச்சயனம் கேட்பார்கள். 

அதில் முதல் எடுப்பிலே வெள்ளைப் பூ வந்தால் முருகன் கனவில் தோன்றி கூறியது உண்மை தான் என உறுதி செய்து கொண்டு அந்த பொருளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து அந்த பெட்டியில் வைத்து விடுவார்கள். கூடவே அருள் வந்து சொன்னவர் பெயர், அவரது ஊர், அவர் கோயிலில் வந்து சொன்ன தேதி என அனைத்தையும் அந்த பெட்டியின் கீழ் எழுதி வைத்துவிடுவார்கள். இது தான் நடைமுறை என விளக்கம் கொடுத்தார். 

தற்போது பச்சை அரிசி வைத்துள்ளது பற்றி கோயில் குருக்கள் ஒருவரிடம் கேட்ட போது அவர் நம்மிடம் பேசும் முன்பு, சில மந்திரங்களை வாயில் முணுமுத்தபடி பின்பு குரலை உயர்த்தி தம்பி பச்சை அரிசி வைத்துள்ளது நல்ல சகுனம் தான். நாட்டில் விவசாயம் செழிக்கும். அரிசிப் பஞ்சம் வராது. சுபிச்சமாக இருக்கும் போங்கோ என அருள்வாக்கு கூறினார்.

நாட்டில் நடப்பதை முன்கூட்டியே மக்களுக்கு சொல்லும் இந்த கடவுளின் அருள் வாக்கை நினைத்து மெய் மறந்தபடி அங்கிருந்து புறப்பட்டோம்.

No comments:

Post a Comment