November 21, 2011

மயூராரூடர்
    
   
சிவபுரிப்பட்டி என்னும் சிறு கிராமம் சிங்கம்புணரியிலிருந்து இரண்டு மைல் தூரத்தில் இருக்கிறது. வட சிவகங்கைச்சீமையில் உள்ளது. இதைப் பற்றி சில மடல்கள் எழுதியுள்ளேன்.
   
இது ஒரு புராதனமான கோயில்.
   
ஒரு வரலாற்றுப் பேழையாகத் திகழ்வது.
   
மற்ற இடங்கள் எங்குமே காணமுடியாத விபரங்கள் அடங்கிய கல்வெட்டுக்கள் இங்கு இருக்கின்றன. தனித்தன்மை பொருந்திய அரிய சிலைகள் சிலவற்றையும் இங்கு காணலாம்.
   
   
இந்த ஊர் ஒரு காலத்தில் மட்டியூரான நிருபசேகர சதுர்வேத மங்கலம் என்று பெயருடன் விளங்கியது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அது பெரிய ஊர். மூன்று பிரிவுகளாக விளங்கியது.
   
படாகை அல்லது பிடாகை என்று கல்வெட்டுக்களில் காணப்படும். ஊர்ப் பகுதிகளை அவ்வாறு குறிப்பிடுவார்கள். இதன் கிழக்குப் பகுதி இப்போது மட்டியூர் சதுர்வேதமங்கலம் என்று வழங்குகிறது. இதன் மேல்பிடாகையாக விழுப்பரையநல்லூர் என்னும் பகுதி இருந்தது. நடுவில் இருந்தது சிவபுரி என்று இன்று அழைக்கப்படும் கிராமம்.    
   
சிவபுரியில் இருப்பது தான்தோன்றீஸ்வரர் கோயில்.
   
   
ஒரு சதுர்வேதமங்கலம் என்பது பிராம்மணர்களுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்ட ஊரும் அதைச்சேர்ந்த நிலங்களும், நீர்நிலைகளும், பாசனவசதிகளும் ஆகும்.
   
   
நிருபசேகர சதுர்வேத மங்கலம் என்பது சதுர்வேத மங்கலங்களில் மிகப் பெரியதாக உள்ளதாகத் தெரிகிறது. குறைந்தது ஆறுமைல் நீளத்துக்கு இந்தச் சதுர்வேத மங்கலம் இருந்தது.
   
இன்னும் பல முக்கியத்துவங்கள் இந்த ஊருக்கு இருந்தன.
   
சிவபுரிக் கோயிலின் முக்கிய தெய்வங்கள் திருத்தான் தோன்றீஸ்வரர் தர்மசம்வர்த்தினி ஆகியோர்.
   
துருக்கர்கள் வருவதற்கு முன்னர் இன்னும் பெரிதாக இருந்திருக்கிறது. இன்னும் இரண்டு வெளிப்பிரகாரங்கள் இருந்திருக்கவேண்டும். ஏனென்றால் கோயிலின் வெளிப்புற மதிற்சுவற்றின்மேல் வைக்கப்படும் நந்தி சிலைகள் ஏராளமாக ஆங்காங்கு இருக்கின்றன.
   
இடைக்காலப் பாண்டியர் காலத்துச் சிலைகளும் சிதிலமடைந்துபோய் கோயிலுக்கு வெளியில் இருக்கின்றன.
   
கோயிலில் பல மர்மங்கள் இருக்கின்றன.
   
இதுவும் ஒரு மர்மஸ்தலம்தான்.
   
அவற்றைப் பற்றி இன்னொரு சமயம் விரிவாகச் சொல்கிறேன்.
   
இந்தக் கோயிலில் சில அற்புதமான சிலைகள் இருக்கின்றன. இந்தக் கோயில் பெரியதாக இருந்தபோது அதில் இருந்திருக்கவேண்டும். இப்போது தான்தோன்றீஸ்வரரின் சன்னிதிக்கு முன்பாக உள்ள மகாமண்டபத்தில் வடமேற்கு மூலையில் இருட்டில் இருக்கின்றன.
   
அவற்றில் ஒரு முருகன் சிலை இருக்கிறது.........   

இங்கே காணலாம்.

   
இந்தச் சிலை அற்புதமானது மட்டுமல்ல. அரியதும்கூட.
   
மயில்வாகனத்தின் மீது முருகன் அமர்ந்திருக்கிரார்.
   
சிற்பக்கலையின் எல்லையைச் சிற்பி தொட்டிருக்கிறார்.
   
மயிலின் கால்களைப் பாருங்கள். மெல்லிய கால்கள். தனியாக முப்பரிமாணத்தில் இருக்குமாறௌ குடைந்து செய்துள்ளார். பாதங்களின் விரல்களில் உள்ள கணுக்களைக்கூட செதுக்கியுள்ளார். நகமும் தத்ரூபமாக இருக்கும். மயிலின் கழுத்தும் அப்படித்தான். மயிலின் அலகும் அதில் அது கௌவிக்கொண்டிருக்கும் பாம்பும்கூட அதே மாதிரிதான். பாம்பு சுருண்டுகொண்டு தொங்குகிறது.
   
வலது, இடது கீழ்க்கைகளும் அப்படித்தான். இடது கையின் விரல்கள் தனித்தனியாக நளினமுடன் விளங்குகின்றன.
   
ஒரு முகமுடைய இந்த முருகனுக்குக் கைகள் ஆறு.
   
வலது மேல்புறக்கைகளில் சக்தியாயுதமும், கத்தியும். வலது கீழ்க்கரம் அபயமுத்திரை காட்டுகிறது.
   
இடது மேல்கரங்களில் வஜ்ராயுதமும் கேடயமும். இடதுக் கீழ்க்கை மயிலின் கழுத்தில் உள்ள லகானைப் பிடித்தவாறு இருக்கிறது.
   
வலது பாதம் கலனை என்னும் கால்மிதியில் வைக்கப்பட்டிருக்கிறது. சேணத்திலிருந்து தொங்குவது கலனை.
   
திருப்புகழில் அருணகிரிநாதர் 'பற்கரை விசித்ரமணி பொற்கலனையிட்ட நடை, பட்சியெனும் உக்ரதுரகமும்' என்று மயிலைக் குதிரைபோல் சித்தரிக்கிறார். அதில் குதிரைக்கு இருப்பதுபோலவே பொன்னால் ஆகிய கலனை இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
   
அழகிய எளிமையான ஆபரணங்கள்.
   
இந்தத் திருக்கோலத்தை 'மயூராரூடர்' என்று குறிப்பிடுவார்கள்.

   
ஒருமுறை ஆதிசங்கரின்மீது ஆபிசார மந்திரப் பிரயோகம் செய்விட்டனர். அதனால் அவருக்குக் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. அப்போது அவர் திருச்செந்தூர் முருகனை வழிபட்டு அவர்மேல் ஸ்ரீஸ¤ப்ரஹ்மண்ய புஜங்கம் என்னும் ஸ்தோத்திரத்தைப் பாடினார். வயிறு உபாதையும் அகன்று தீர்ந்துவிட்டது.
   
அந்த அழகிய ஸ்தோத்திரத்தின் மூன்றாவது பாடல்:
 
மயூராதிரூடம் மஹாவாக்யகூடம்  மனோஹாரிதேஹம் மஹாசித்தகேஹம்
மஹீதேவதேவம் மஹாவேதபாவம் மஹாதேவபாலம் பஜே லோகபாலம்

   
அந்த முதல் அடியில் சொல்லப்பட்ட மயூராதிரூடம் என்பது இந்தத் திருக்கோலம்தான்.
குமாரேச ¥நோ, குஹாஸ்கந்தஸேநா பதே சக்திபாநே, மயூராதிரூட
புலிந்தாத்மஜா காந்த, பக்தார்த்திஹாரின் ப்ரபோ தாரகாரே, ஸதா ரக்ஷ மாம் த்வம்

மயிலின்மீது அமர்ந்தவனே மகாவாக்கியங்களின் சாரமாக விளங்குபவனே மகாதேவனின் மைந்தா! அழகிய உடல் அமைந்தவனே சித்தர்களின் மனதில் இருப்பவனே மகாவேதங்களாக விளங்குபவனே உலகங்களையெல்லாம் காப்பவனே உன்னைத் துதிக்கிறேன்.
குமாரா! பிரபஞ்சத்தின் நாயகனின் மைந்தாஇருதயமாகிய குகையில் குகனாக  உறைபவனே! ஸ்கந்தா! தேவசேனையின் தலைவா! சக்தி ஆயுதத்தைக் கொண்டவனே! மயிலின்மீது அமர்ந்தவனே! குறமகளின் நாயகா! பக்தர்களின் தோஷங்களைப் போக்குபவனே! தாரகனை அழித்தவனே! எப்போதும் என்னை நீ காக்க!

   
இந்த அரிய சிற்பத்தைக் காண்பதற்காவது நீங்கள் சிவபுரிக்குச் சென்றுதான் ஆகவேண்டும்.




No comments:

Post a Comment