September 15, 2011

பெங்களூர் பெஹாக் ராகத்தில் ஒரு சிவராத்திரி!

தில்லை ஈசனைத் திருவரங்கம் பாடுமா? திருவரங்கப்ரியா பாடுறாங்க! ஷைலஜா அக்கா தானே எழுதிப் பாடும் சிவ-கவி இதோ, சிவராத்திரி நன்னாளில்! பெங்களூரின் பெஹாக் ராகத்தில் பாடலைக் கேட்டு ரசியுங்கள்!


எடுப்பு:
இமயம் செல்ல வேண்டும்-அதற்கு
சமயம் வந்திடுமா?


தொடுப்பு:உமையவள் நாதனை உண்மைப் பரம் பொருளை
இமைப் பொழுதேனும் கண்டு இன்னல் தொலைத்திடவே
(இமயம்)

முடிப்பு:ஆசைகளை அறுத்திட்டு அமைதியாய் வாழ்ந்தாலும்
ஓசைப்படாமல் ஒன்றன்பின் ஒன்றாய் தொடர்கிறதே
ஈசன் திருநாமம் இசைந்தே சொல்லிடவே
நேசம் மிகுந்த நெஞ்சம் ஏங்கித் துடித்திடுமே - எனவே
(இமயம்)


ஆசைகளை அறுத்திட்டு அமைதியாய் வாழ்ந்தாலும்
ஓசைப்படாமல் ஒன்றன்பின் ஒன்றாய் தொடர்கிறதே
- என்னும் போது, ஒன்றன் பின் ஒன்றாய், ஆசை வலை கட்டுவதைக் கண் முன்னே கொண்டு வராங்க இல்லையா?

ஈசன் திருநாமம் இசைந்தே சொல்லிடவே = இறைவன் நாமத்தை வெறுமனே சொல்லாது, "இசைந்து" சொல்லணும்! மனத்தால் "இசைந்து" சொல்லும் போது தான், இசையாகிறது அல்லவா? ஆடி ஆடி அகம் கரைந்து, "இசை" பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி என்பதே அந்த "இசைந்து"!

இன்று சிவராத்திரி நன்னாளில் "இசைந்து" சொல்லுவோமா? இதோ ஓதுவார் சொல்லித் தர கூடவே ஓதிக் கொண்டே படியுங்கள்!
 
ஓம் நம சிவாய!
ஓம் நம சிவாய!
ஓம் நம சிவாய!

அப்பர் சுவாமிகளின் நமச்சிவாயத் திருப்பதிகம்:
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச் சிவாயவே.

வேத வாசகம் என்னும் சொல்லுக்குப் பொருளாக உள்ளவன்! சோதி வடிவானவன்!
அவன் பொன்னடிகளை, மனதால் பொருந்திக் கையால் தொழும் போது,
கல் தூணில் பூட்டி, என்னைக் கடலில் போட்டாலும்
நல்ல துணையாய் வருவது, நமசிவாய என்னும் திருவைந்தெழுத்தே!

பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை
ஆவினனுக்கு அருங்கலம் அரன் அஞ்சு ஆடுதல்
கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது
நாவினுக்கு அருங்கலம் நமச் சிவாயவே


பூக்களுக்குச் சிறப்பு, பொங்கி விரியும் தாமரை!
பசுக்களுக்குச் சிறப்பு, சிவபூசைக்கு பஞ்ச கவ்வியம் தருதல்! (பால், தயிர், நெய், கோசலம், கோமயம் என்ற சாணம்)
அரசனுக்குச் சிறப்பு, கோல் வளையாமல் ஆட்சி புரிதல்!
நாவுக்குச் சிறப்பு, நமசிவாய என்னும் திருவைந்தெழுத்தே!

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே!


வீட்டின் விளக்காய் புற இருளும் போக்கும்! அக இருளும் போக்கும்!
சொல்லின் விளக்காய், ஐந்தெழுத்தின் விளக்கமாய், ஆன்ம சோதியுள் திகழும்!
பல ஆன்மாக்களின் அக விளக்கு! அதைப் பலரும் அவரவர் அகத்தில் காண்பார்கள்!
அதுவே நல் விளக்கு! நமசிவாய விளக்கு! நமசிவாய என்னும் திருவைந்தெழுத்தே!

இனிய சிவராத்திரி வாழ்த்துக்கள்!
இந்தச் சிவன் இரவில், ஈழச் சீவன் நிம்மதியை, உளமார வேண்டிடுவோம்!
திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!!

த்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்தோத்ரம்

இந்தியத் திருநாட்டின் வட எல்லையில் இருந்து தென் எல்லை வரை பல்லாயிரம் சிவாலயங்கள் இருக்கின்றன. அவற்றில் பன்னிரண்டு திருத்தலங்களில் இருக்கும் இலிங்கத் திருமேனிகளை சோதிலிங்கங்களாக பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அந்த பன்னிரண்டு திருத்தலங்களையும் ஒரே பாடலில் நினைவு கொண்டு போற்றும் ஸ்தோத்திரம் இந்த த்வாதச ஜ்யோதிர் லிங்க ஸ்தோத்ரம்.

பன்னிரு சோதிலிங்கங்கள்:

1. குஜராத்தின் சௌராஷ்ட்ரப் பகுதியில் இருக்கும் சோமநாதபுரம் சோமநாதர்
2. ஆந்திரபிரதேசத்தின் ச்ரிசைலம் மல்லிகார்ஜுனர்
3. மத்தியபிரதேசத்தின் உஜ்ஜயினி மஹாகாலர்
4. மத்தியபிரதேசத்தின் சிவபுரி/அமலேச்வரம் ஓம்காரேஸ்வரர்
5. மஹாராஷ்ட்ரத்தின் பரலி வைத்யநாதர்
6. மஹாராஷ்ட்ரத்தின் டாகினி பீமசங்கரர்
7. தமிழ்நாட்டின் இராமேஸ்வரம்/சேதுபந்தனம் இராமேசர்
8. மஹாராஷ்ட்ரத்தின் தாருகாவனம் நாகேசர்
9. உத்தரபிரதேசத்தின் காசி/வாரணாசி விஸ்வேசர்
10. மஹாராஷ்ட்ரத்தின் கௌதமீ நதிக் கரையில் இருக்கும் நாசிக் திரயம்பகேசர்
11. உத்தராஞ்சலின் இமயமலையில் கேதார்நாத் கேதாரேஸ்வர்
12. மஹாராஷ்ட்ரத்தின் சிவாலயமாம் தேவசரோவர் குஸ்மேசர்



ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

ஸௌராஷ்ட்ரே ஸோமநாதம் ச ச்ரிசைலே மல்லிகார்ஜுனம்
உஜ்ஜயின்யாம் மஹாகாலம் ஓம்காரம் அமலேஷ்வரம்

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

பரல்யாம் வைத்யநாதம் ச டாகின்யாம் பீமசங்கரம்
சேதுபந்தே து ராமேசம் நாகேசம் தாருகாவனே

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

வாரணஸ்யாம் து விஸ்வேசம் த்ரயம்பகம் கௌதமீ தடே
ஹிமாலயே து கேதாரம் குஸ்மேசம் ச சிவாலயே

ஏதானி ஜ்யோதிர் லிங்கானி சாயம் ப்ராத: படேந் நர:
சப்த ஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரனேன விநஷ்யதி
சப்த ஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரனேன விநஷ்யதி
சப்த ஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரனேன விநஷ்யதி

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய



ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

ஸௌராஷ்ட்ரே ஸோமநாதம் ச - சௌராஷ்ட்ர தேசத்தில் சோமநாதர்
ச்ரிசைலே மல்லிகார்ஜுனம் - ச்ரிசைலத்தில் மல்லிகார்ஜுனர்
உஜ்ஜயின்யாம் மஹாகாலம் - உஜ்ஜயினியில் மஹாகாலர்
ஓம்காரம் அமலேஷ்வரம் - அமலேஷ்வரத்தில் ஓம்காரேஸ்வரர்
பரல்யாம் வைத்யநாதம் ச - பரலியில் வைத்யநாதர்
டாகின்யாம் பீமசங்கரம் - டாகினியில் பீமசங்கரர்
சேதுபந்தே து ராமேசம் - இராமேஸ்வரத்தில் இராமநாதர்
நாகேசம் தாருகாவனே - தாருகாவனத்தில் நாகேசர்
வாரணஸ்யாம் து விஸ்வேசம் - காசியில் விஸ்வேசர்
த்ரயம்பகம் கௌதமீ தடே - கௌதமி நதிக்கரையில் த்ரயம்பகேசர்
ஹிமாலயே து கேதாரம் - இமயமலையில் கேதாரேஸ்வரர்
குஸ்மேசம் ச சிவாலயே - சிவாலயத்தில் குஸ்மேசர்

ஏதானி ஜ்யோதிர் லிங்கானி - இவையே சோதி இலிங்கங்கள்
சாயம் ப்ராத: படேந் நர: - மாலையிலும் காலையிலும் படிக்கும் ஒருவரின்
சப்த ஜன்ம க்ருதம் பாபம் - ஏழு பிறவிகளில் செய்த பாவங்கள்
ஸ்மரனேன விநஷ்யதி - ஒரே நொடியில் அழிந்துவிடும்

ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ

பெம்மானே பேருலகின் பெருமானே
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ
வெய்யோனே ஏனுருகி வீழ்கின்றோம்
வெந்தழிந்து மாய்கின்றோம் விதிதானோ
புலம்பெயர்ந்தோம் பொலிவிழந்தோம் புலன்கழிந்தோம்
அழுதழுது உயிர்கிழிந்தோம் அருட்கோனே (பெம்மானே)

சோறில்லை சொட்டு மழை நீரில்லை
கொங்கையிலும் பாலில்லை கொன்றையோனே
மூப்பானோம் முன் வளைந்து முடமானோம்
மூச்சு விடும் பிணமானோம் முக்கணோனே
ஊன் தேய்ந்தோம் ஊனுருகி உயிர் ஓய்ந்தோம்
ஓரிழையில் வாழ்கின்றோம் உடைய கோனே

நீராகி ஐம்புலனும் வேறாகி
பொன்னுடலம் சேறாகி போகமாட்டோம்
எம்தஞ்சை யாம்பிறந்த பொன்தஞ்சை
விரலைந்தும் தீண்டாமல் வேகமாட்டோம்
தாழ்ந்தாலும் சந்ததிகள் வீழ்ந்தாலும்
தாய்மண்ணில் சாகாமல் சாகமாட்டோம்

பொன்னார் மேனியனே வெம் புலித்தோல் உடுத்தவனே
இன்னோர் தோல் கருதி நீ எம் தோல் உரிப்பதுவோ
முன்னோர் பாற்கடலில் அன்று முழு நஞ்சுண்டவனே
பின்னோர் எம்மவர்க்கும் நஞ்சு பிரித்து வழங்குதியோ

பெம்மானே பேருலகின் பெருமானே
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ
 

காணக்கண் கோடி வேண்டும் கபாலியின் பவனி


பங்குனிப் பெருவிழாவின் போது மூன்றாம் நாள் காலை அதிகார நந்தி வாகனத்தில் கபாலீஸ்வரர் எழுந்தருளும் அந்த அழகைக் கண்டு பாபனாசம் சிவன் அவர்கள் " காணக் கண் கோடி வேண்டும் கபாலியின் பவனி" என்று பாடிய அந்த சௌந்தர்யத்தை அந்த அதிகார நந்தி வாகனத்தின் தாத்பரியத்தை இக்கட்டுரையில் காண்போம் மற்றும் அந்த பாடலை கேட்போம்.


ஒரு நந்தி தனில் இவர்ந்து ஒரு நந்தி தலைச் சூடி உலகமெல்லாம்
தரு நந்தி உமையுடனே சார்ந்த பெரும் கயிலைதனில் காவல் பூண்டே
கரு நந்தி இட அருள்வான் கர நான்கும் கண் மூன்றும் கலந்த ஞானத்
திரு நந்தி தலைவன் உயர் சிவாகமங்கள் ஓர்ந்தானை சிந்தை செய்வாம்.


பொருள்: நந்தியாகிய இடப வாகனத்தில் அமர்ந்து, பாம்பை தலையில் சூடி, உலகிலுள்ளவர்களூக்கெல்லாம் நன்மையைத் தந்து உமா தேவியாருடன் இருக்கும் சிவபெருமானின் கயிலை மலைக்கு காவலனாக இருக்கும் அதிகார நந்தி தேவர், நான்கு தோள்களும், மூன்று கண்ணும் கொண்டவராக உள்ளார். சிவபெருமானிடமிருந்து ஆகமங்களை அறிந்து உலகிற்கு ஞானம் வழங்கிய அந்த நந்தி தேவரை சிந்தை செய்வோம் என்று புலியூர்ப் புராணம் அதிகார நந்தி தேவரின் புகழைக் கூறுகின்றது.

கபாலீஸ்வரரின் அதிகார நந்தி சேவை முன்னழகும் பின்னழகும்

சிவபெருமானைப் காதலாகி கசிந்து கண்ணிர் மல்கி போற்றி வணங்கி, அந்த காருண்ய மூர்த்தியைப் போலவே சாரூப நிலை பெற்றவர்கள் அனேகராவர். இவர்கள் முக்கண் சுடர் விருந்தினைப் போலவே தலையில் ஜடாமகுடமும் அதில் தாரமர் கொன்றையும், ஊமத்தையும், சந்திரப்பிறையும் தாங்கும் பேறு பெற்றவர்கள். நான்கு கரங்கள் கொண்டு மேற்கரங்களில் மான், மழு ஏந்துபவர்கள். இவர்களில் முதன்மையானவர், எம்பெருமானின் முழு முதல் தொண்டரான நந்தியம்பெருமான் ஆவார். அப்போது அவர் அதிகார நந்தி என்று வழங்கப்படுகிறார். இவர் சந்திரனைப் போன்ற குளிர்ச்சியும், வெண்மை நிறமும் கொண்டவர். இறைவனின் ஞான வாளையும், பொற்பிரம்பையும் தாங்கி நிற்பவர். இவருடைய தேவியின் பெயர் சுயம்பிரபா என்பது ஆகும்.


நந்தி முகமும், மனித உடலும் கொண்டு , வலது காலை மடக்கி, இடது காலை ஊன்றி மண்டியிட்ட நிலையில் கீழ் திருக் கரங்கள் இரண்டிலும் ஐயனின் பாதங்களைத் தாங்கி, நான்கு தோள்களிலும் எம்பெருமானை சோமாஸ்கந்தராக தாங்கி வீதி வலம் வருவது " அதிகார நந்தி சேவை " எனப்படுகின்றது. அதிகார நந்தி ஞானத்தின் திருவுருவம். நந்தீ என்பதற்கு வளர்வது என்று பொருள். நமது அறிவையும் செல்வத்தையும் வளர்ப்பவராக இருப்பதால் தான் சிவபெருமானுக்கும் நந்தி என்ற பெயர் வழங்கப்படுகின்றது. நந்தி நாமம் நமச்சிவாயவே என்னும் தொடரும் இதனையே உணர்த்துகின்றது. அவர் தன் சார்பாக அறிவு செல்வம், இன்பம் ஆகியவற்றை தடையின்றி வழங்கும் அதிகாரத்தை நந்தியம்பெருமானுக்கு அளித்துள்ளார். அதிகாரம் பெற்ற வல்லமை மிக்க நந்தி தேவர் அதிகார நந்தி எனப்படுகின்றார்.
கந்தர்வி வாகனத்தில் கற்பகவல்லி

ந்தருவன் வாகனத்தில் சிங்கார வேலவர்
சோமஸ்கந்தர்


விரைமலர் குழல்வல்லி
மறைமலர் பத வல்லி
விமலி கற்பகவல்லியே

யோக சாஸ்திர பிரகாரம் அதிகார நந்தியின் விளக்கம், அதிகார நந்தி என்பது ஒரு உவமை மனிதனின் கபாலத்தில் மூளைக்கு நடுவில் இருக்கும் ( pineal gland) என்னும் சுரப்பியை குண்டலினி சக்தி அடையும் போது ஆத்ம தரிசனம் கிடைக்கிறது. காலம் தாண்டின அறிவு ஏற்படுகின்றது. உடம்பு வஜ்ரமாகின்றது. சித்தர்கள் இதை நந்தி என்று சொல்கின்றனர். இந்த உடலோடு ஆத்ம தரிசனம் அதாவது சிவ தரிசனம் அடைய நந்தியின் அனுமதி தேவை. அதற்குத்தான் சிவனை மனிதனுக்கு காட்டும் அதிகாரம் உள்ளது. இவ்வாறு உடலுக்குள் இருக்கிற ஆன்மாவே உலகமெங்கும், பிரபஞ்சமெங்கும் பரவியிருப்பதை அந்த நந்தி காட்டுகின்றது. இறை அனுபவம் எளிதல்ல. மனிதான் யோகம் பயின்ற வஜ்ரம் போன்ற உடம்போடு கம்பீரமான பணிவோடு இடைவிடாத எருது உழைப்போடு முயன்றால், யோக வழியில் முயன்றால் நந்தி என்னும் சுரப்பி திறந்து தலைக்கு மேலே இறை தரிசனம் பெறலாம் என்பதை குறிப்பதே அதிகார நந்தி வாகனம் என்று ஆன்றோர்கள் இவ்வாகனத்தின் தாத்பரியத்தை விளக்குகின்றனர்.
வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர்



வெள்ளி மயிலை அதிகார நந்தியின் கண்ணில் இறைவனைத் தாங்குகின்ற பேறு பெற்றதின் மிகப் பெரிய சந்தோஷம் தெரியும். மண்டியிட்ட உடலில் பணிவு தெரியும்.பளபளப்பில் சுத்தம் தெரியும். உயரமும் அகலுமுமான உருவத்தில் உறுதி தெரியும். அதுபோல நாமும் உறுதி, சுத்தம், பணிவு, கனிவு கொள்ள வேண்டும் என்பதைத்தான் அதிகார நந்தி நமக்கு உணர்த்துகின்றதோ?

அதிகார நந்தி சேவை காண்பதால் தெளிந்த அறிவு, உடல் வலிமை, குறைவற்ற செல்வம், நிறைந்த மன மகிழ்ச்சி, சமுதாயத்தில் நல்ல செல்வாக்கு , பெரியோர்கள் நன்மதிப்பு முதலியன உண்டாகும்.



இசையில் மயங்கி பவனி வரும் சிங்கார வேலவர்



கயிலையே மயிலை எனப்படும் திருமயிலப்பூரிலே எம்பெருமான் உமையம்மையின் ஞானப்பாலுண்டு தீந்தமிழ் பதிகங்கள் பாடி இம்மயிலையிலேயே சாம்பரை அங்கம் பூம்பாவை ஆக்கிய ஆளுடையப்பிள்ளையாம் திருஞான சம்பந்தருக்கும் அவரது தந்தையாராம் சிவபாத இருதயருக்கும் அதிகார நந்தி சேவை அருளுகின்றார். சோமாஸ்கந்தராக வெள்ளி அதிகார நந்தியிலே ஈரேழு புவனங்களுக்கும் ஈசனான எம்பெருமான் செங்கோல் தாங்கியும், வெள்ளி மூஷிக வாகனத்திலே நர்த்தன வினாயகரும், கந்தர்வி வாகனத்திலே ஆடும் மயிலாய் அன்று இறைவனை அர்ச்சித்த கற்பக வல்லியும், கந்தர்வ வாகனத்திலே வள்ளி தேவசேனா சமேத சிங்கார வேலவரும், வெள்ளி இடப வாகனத்திலே சண்டிகேஸ்வரரும் அன்று சேவை சாதிக்கின்றனர். அதிகாலை 6 மணிக்கு கோவிலை விட்டு கிளம்பும் பஞ்ச மூர்த்திகள் 11 மணியளவில் திருக்குளத்தின் தென் மேற்கு மூலையில் உள்ள பந்தலில் வந்து தங்குகின்றனர், நாம் எல்லோரும் உய்ய சேவை சாதித்த பின் 1 மணி அளவில் மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு 4 மணியளவில் திருக்கோவிலை அடைகின்றனர்.



கம்பீர திருமயிலை வெள்ளி அதிகார நந்தி

அதிகார நந்தி சேவை ஓவியம்
எம்பெருமானுக்கு நடனத்தின் போது மத்தளம் இசைப்பவர் நந்தியம்பெருமான், கந்தர்வர்களும் இசை மரபினர் ஆகவே இன்றைய தினம் ஒரே இசை மயம் தான், ஐயனை தோளிலே தாங்கி அன்பர்கள் இப்படியும் அப்படியுமாக அசைந்து ஆடி வரும் அழகை எப்படி வர்ணிப்பது. நேரில் கண்டால் மட்டுமே அந்த தெய்வீக உணர்வைப் பெற முடியும். பாபநாசம் சிவன் அவர்கள் பக்திபரவசத்துடன் பாடிய பாடல் இதோ.

ராகம்:- காம்போதி தாளம்:- ஆதி.
பல்லவி
காணக் கண் கோடி வேண்டும்--கபாலியின் பவனி
காணக் கண் கோடி வேண்டும்........(காணக்கண்)
அனுபல்லவி
மாணிக்கம் வைரம் முதல் நவரத்னாபரணமும்
மணமார் பற்பல மலர்மாலைகளும் முகமும்
மதியோடு தாராகணம் நிறையும் அந்தி
வானமோ கமலவனமோ என மனம்
மயங்க அகளங்க அங்கம் யாவும் இலங்க
அபாங்க அருள்மழை பொழி பவனி .......(காணக் கண் கோடி..)
சரணம்
மாலோடு அயன் பணியும் மண்ணும் விண்ணும் பரவும்
மறை ஆகமன் துதிக்கும் இறைவன் அருள் பெறவே
நமது காலம் செல்லுமுன் கனதனமும் தந்தார்க்கு நன்றி
கருதி கண்ணாரக்கண்டு உள்ளுருகிப் பணியப் பலர்
காண அறுமுகனும் கணபதியும் சண்டேச்வரனும்
சிவகணமும் தொடர கலைவாணி
திருவும் பணி கற்பகநாயகி வாமன்
அதிகார நந்தி சேவைதனைக் (காணக் கண் கோடி வேணும்)

(பாடலுக்கு நன்றி மௌலி மற்றும் ஜீவா வெங்கட்ராமன்)

Friday, May 22, 2009

எப்படி பாடினரோ அடியார் அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் சிவனே


எப்படி பாடினரோ அடியார் அப்படிப் பாட நான்
ஆசை கொண்டேன் சிவனே

அப்பரும் சுந்தரரும் ஆளுடைப் பிள்ளையும்
அருள் மணி வாசகரும் பொருளுணர்ந்து உன்னையே
(எப்படி பாடினரோ)

குருமணி சங்கரரும் அருமை தாயுமானாரும்
அருணகிரி நாதரும் அருட்ஜோதி வள்ளலும்
கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி
கனித்தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம்
(எப்படி பாடினரோ)
இயற்றியவர்: கவியோகி திரு. சுத்தானந்த பாரதியார்
வயலினில் இசைத்தவர்: குன்னக்குடி திரு. வைத்தியநாதன்
பாடியவர்: சிக்கில் திரு. குருசரண், டி.எம்.எஸ்.
இப்பாடலை தட்டச்சி மின் தமிழ் குழுமத்திற்கு அனுப்பியவர்: திரு. கிருஷ்ணமூர்த்தி

அனைவருக்கும் நன்றி.

கார் விரிக் கொன்றைப் பொன் நேர் புது மலர்த் தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்...

பாரதம் பாடிய பெருந்தேவனார் என்னும் புலவர் சங்க கால தொகை நூல்களான அகநானூறு, புறநானூறு போன்ற பல தொகுப்புகளுக்கும் கடவுள் வாழ்த்து பாடியிருக்கிறார். வெவ்வேறு காலங்களில் வாழ்ந்த பல்வேறு புலவர்கள் பாடிய பாடல்களைத் தொகுத்து வைத்தவை இந்த எட்டுத் தொகை நூல்கள். யார் இவற்றைத் தொகுத்தார்கள் என்ற குறிப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஏரணப்படி பார்த்தால் தொகுக்கும் காலத்தில் கடவுள் வாழ்த்து பாடப்பட்டிருக்கலாம்; கடவுள் வாழ்த்து பாடியவரே தொகுத்த புலவராகவும் இருக்கலாம் - என்று தோன்றுகிறது. உறுதிபடுத்த மேற்கொண்டு ஆராய்ச்சிகள் வேண்டும்; ஏற்கனவே ஆய்வுகள் நடந்திருந்தால் அந்த ஆய்வுகளை நான் இனிமேல் தான் படிக்க வேண்டும். இந்த ஏரணம் சரி என்றால் பாரதம் பாடிய பெருந்தேவனாரே அகநானூறு, புறநானூறு போன்ற நூல்களைத் தொகுத்தவராவார்.

எட்டுத்தொகையில் இருக்கும் பல பாடல்கள் கி.மு. 5ம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. 2ம் நூற்றாண்டு வரையில் பாடப்பட்டிருக்கலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. அதன் படி பார்த்தால் இவை கி.பி. 2ம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கடவுள் வாழ்த்தும் அக்காலத்திலேயே எழுதப்பட்டிருக்கலாம். பாரதம் பாடிய பெருந்தேவனாரும் அக்காலத்திலேயே வாழ்ந்திருக்கலாம். இவ்விரு விடயங்களையும் உறுதி செய்ய மேற்கொண்டு ஆய்வுகளோ படிக்கவோ வேண்டும்.

அகநானூற்றின் கடவுள் வாழ்த்து சிவபெருமானைப் போற்றுகிறது. பதம் பிரித்துப் படித்தால் உரை இல்லாமலேயே விளங்கக் கூடிய வகையில் கொஞ்சம் எளிமையாகவே இருக்கிறது. சிவபெருமானின் திருவுருவத்தை எண்ணத்தில் நிலை நிறுத்தும் வகையில் பாடப்பட்டிருக்கிறது.

கார் விரிக் கொன்றைப் பொன் நேர் புது மலர்த்
தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்;
மார்பின் அஃதே மை இல் நுண் ஞாண்;
நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டு
கையது கணிச்சியொடு மழுவே; மூவாய்
வேலும் உண்டு அத் தோலாதோற்கே!
ஊர்ந்தது ஏறே; சேர்ந்தோள் உமையே;
செவ்வான் அன்ன மேனி; அவ்வான்
இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று
எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை;
முதிராத் திங்களொடு சுடரும் சென்னி;
மூவா அமரரும் முனிவரும் பிறரும்
யாவரும் அறியாத் தொல் முறை மரபின்
வரி கிளர் வயமான் உரிவை தைஇய
யாழ் கெழு மணி மிடற்று அந்தணன்
தாஇல் தாள் நிழல் தவிர்ந்து அன்று ஆல் உலகே!


பொன்னைப் போல் ஒளி வீசும் மஞ்சள் நிறக் கொன்றைப் பூ சூடியவனாக சிவபெருமான் சங்க கால பாடல்கள் பலவற்றிலும் போற்றப்படுகிறான். கொன்றை கார் காலத்தில் பூக்கும். அப்படி கார்காலத்தில் பூத்த, பொன்னைப் போல் நிறம் கொண்ட, புத்தம் புதிய கொன்றை மலர்களைத் தாராகவும் மாலையாகவும் திருமுடியில் சுற்றியிருக்கும் கண்ணியாகவும் அணிந்திருக்கிறான் சிவபெருமான். கார் விரிக் கொன்றைப் பொன் நேர் புது மலர்த் தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்.

ஆண்டாள் மாலை என்று தற்காலத்தில் சொல்கிறோமே, இரண்டு குஞ்சம் வைத்து, கழுத்தில் சூடினால் நீண்டு இருபுறமும் தொங்குமே அதனைத் தார் என்று சொல்வார்கள். ஒரே ஒரு குஞ்சத்துடன் வளையம் போல் கட்டினால் அது மாலை. மிகவும் நெருக்கமாகச் சிறு சிறு வளையமாகக் கட்டினால் அது கண்ணி. இன்றைக்கும் வைதிகச் சடங்குகளின் போது கழுத்தில் மாலையும் கை மணிக்கட்டுகளில் கண்ணிகளும் அணிந்து கொள்ளும் வழக்கம் இருக்கிறது.

தார் ஆண்களுக்கும் மாலை பெண்களுக்கும் கண்ணி இருபாலருக்கும் உரியவை. தார் ஆண்களுக்கு உரியது என்றால் அது எப்படி ஆண்டாள் மாலை ஆகியது என்று யாராவது கேட்டால் 'போய் ஆண்டாள் கதையைப் படியுங்கள். அவள் சூடிக் கொடுத்த சுடர்கொடி ஆனதை நுண்மையாகப் படித்துப் பாருங்கள். அப்போது புரியும்' என்று சொல்லலாம்.

இந்தப் பாடலில் தாரும் மாலையும் கண்ணியும் அணிந்தவன் சிவபெருமான் என்று சொல்லும் போது அவன் ஆணுமாய் பெண்ணுமாய் அல்லனுமாய் நிற்பதைக் குறிக்கிறார் போலும் புலவர். மாதொருபாகனாய் நிற்கும் சிவபெருமான் தாரும் மாலையும் கண்ணியும் அணிந்திருப்பதில் தடையென்ன?

இந்தக் கொன்றைத் தாரை பிற்காலத்தில் வந்த அபிராமி பட்டரும் 'தார் அணிக் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை ஊரர்' என்று பாடுகிறார். அபிராமி பட்டரும் 'தில்லை ஊரர் மாலையும் அணிந்தவர்' என்று சொல்லுவதைப் பாருங்கள். அதனைக் கவனித்தால் அவர் ஏன் 'தில்லை ஊரர் தம் பாகத்து உமை' என்று பாடுகிறார் என்பதும் புரியும்.

'மார்பின் அஃதே' என்னும் அடுத்த அடியின் முதல் பகுதியை கொன்றைத் தாரன், மாலையன், கண்ணியன் என்ற தொடருடன் சேர்த்துப் படித்தால் சிவபெருமானின் மார்பு நிறைய கொன்றைப்பூவே நிறைந்திருக்கிறது என்ற பொருள் கிடைக்கிறது. ஆனால் உரையாசிரியர்கள் இதனை அதே வரியில் இருக்கும் அடுத்தப் பகுதியுடன் சேர்த்துப் பொருள் கொள்கிறார்கள். 'மார்பின் அஃதே மை இல் நுண் ஞாண்' என்பதை ஒரே வரியாகக் கொள்கிறார்கள். இந்த அடிக்கு உரையாசிரியர்கள் தரும் பொருள் 'குற்றமில்லாத பூணூல் மார்பில் விளங்குகின்றது'. மை என்பது இங்கே கருமையைக் குறித்து 'மை இல்' என்பது குற்றமற்ற / வெண்ணிறமான என்ற பொருளைத் தருகிறது.

சிவபெருமானின் திருவுருவத்தில் இருக்கும் சிறப்புகளில் அடுத்த சிறப்பாகப் புலவர் குறிப்பது நெற்றிக் கண். தேவர்களின் கண்கள் இமைக்காமல் இருக்குமாம். எல்லா தேவர்களைப் போல் சிவபெருமானின் திருக்கண்களும் இமைக்காமல் இருக்கும் போது அவரது சிறப்பான மூன்றாவது கண்ணும் இமைக்காமல் இருக்குமாம் நெற்றியில். நுதலது இமையா நாட்டம் - நெற்றியில் இமைக்காத திருக்கண்.

தேவதேவனான சிவபெருமான் எண்ணியதெல்லாம் நிகழ்த்திக் கொள்ளும் ஆற்றல் உடையவன். தோல்வி என்பதே அறியாதவன். அதனால் அவனுக்குத் தோலாதவன் என்றே ஒரு திருப்பெயரைத் தருகிறார் புலவர். எந்த வித தடையையும் நீக்கிக் கொள்ளும் ஆற்றல் உடையவன். பகையெனும் தடையை நீக்கி அவன் திருக்கைகளில் விளங்குகின்றன மழுவும் மூவாய் வேலான திரிசூலமும். இகல் அட்டு கையது கணிச்சியொடு மழுவே; மூவாய் வேலும் உண்டு அத்தோலாதோற்கே! இகல் என்றால் பகை. பகையை வென்று கையில் இருக்கிறது மழு. மூவாய் வேலும் அந்த தோல்வியில்லாதவனிடம் உண்டு. கணிச்சி என்றாலும் மழு என்றே பொருள் சொல்கிறது அகரமுதலி. இங்கே புலவர் 'கணிச்சியொடு மழுவே' என்று ஏன் சொன்னார் என்பது புரியவில்லை. கணிச்சி என்றால் குந்தாலி என்று ஒரு பொருளை உரையாசிரியர் தந்திருக்கின்றனர்.

சிவபெருமானது ஊர்தி தரும வடிவான காளை; ஏறு. ஊர்ந்தது ஏறே. அவன் ஒரு பாகத்தில் இருப்பவள் உமையவள். சேர்ந்தோள் உமையே.

அவனது திருமேனி சிவந்த வானத்தைப் போன்ற நிறம் உடையது. செவ்வான் அன்ன மேனி. அந்த வானில் விளங்கும் பிறை நிலவைப் போல் வளைந்த வெண்மையான கூர் பல்லினை உடையவன். அவ்வான் இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று. விளங்கு என்றால் வளைவு. நேராக நில்லாமல் வளைந்து நிற்பதால் தான் மிருகங்களை விலங்கு என்றனர் போலும். வால் என்றால் வெண்மை. வை என்றால் கூர்மையான. எயிறு என்றால் பல். சிவபெருமானின் உருத்திர வடிவம் இங்கே போற்றப்படுகின்றது போலும். இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை என்று ஐந்து கரத்தனையும் இதே உவமையுடன் இன்னொரு பெரியவர் போற்றுவதையும் நினைவு கூரலாம்.

தீ கொழுந்து விட்டு எரிவதைப் போல் மேல் நோக்கிக் கட்டி விளங்கும் பல சுற்றுகள் கொண்ட சடை முடியை உடையவன் சிவபெருமான். எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை. மெல்லிய கோடு போல் இருக்கும் இளைய பிறையைச் சூடி ஒளிவிடும் தலை. முதிராத் திங்களொடு சுடரும் சென்னி. மற்றவர் இளம்பிறை என்று சொல்ல இப்புலவர் முதிரா திங்கள் என்று சொன்னது பெரும் சுவையாக இருக்கிறது.

திங்களை முதிர்ச்சியடையாத என்று சொன்னதைப் போல், என்றும் இளமையுடன் திகழும் அழிவில்லாத தேவர்களை மூவா அமரர் என்கிறார் புலவர். தேவரும் முனிவரும் பிறரும் என்று இருக்கும் யாவரும் அறிய முடியாத தொன்மையான மரபினை உடையவன் சிவபெருமான். எல்லோர்க்கும் மூத்தவன். மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும் அறியாத் தொல் முறை மரபின்.

வரியை உடைய புலித்தோலாடையை அணிந்தவன் சிவபெருமான். வரி கிளர் வயமான் உரிவை தைஇய. இங்கே வயமான் என்று குறித்திருக்கிறார் புலவர். அதன் நேர் பொருள் மான். மான் தோலாடையும் சிவபெருமானுக்கு உண்டு. அதனால் இங்கே மான் தோலாடையைத் தான் புலவர் குறித்துள்ளார் என்று சொல்லலாம். ஆனால் மானுக்கு புள்ளிகள் உண்டு; வரிகள் இல்லை. இங்கே வரி கிளர் என்று சொன்னதால் இது புலித்தோலாடையைத் தான் குறிக்கிறது என்று பொருள் கொண்டார்கள் போலும் உரையாசிரியர்கள். நெய் என்பது விதப்பாகப் பாலின் நெய்யைக் குறித்து பொதுவாக மற்ற நெய்களையும் குறிப்பது போல் மான் என்பது விதப்பாகப் புள்ளிமானைக் குறித்து பொதுவாக மற்ற விலங்குகளையும் குறிக்கும் போலும். அது உண்மையென்றால் இங்கே வயமான் என்று சொன்னது புலியையே என்பதில் தடையில்லை. உரிவை என்றால் உரிக்கப்பட்ட தோல் ஆடை.

யாழைப் போல் இனிமையான குரலையும் கருமையான கழுத்தினையும் உடைய அந்தணன் சிவபெருமான். யாழ் கெழு மணி மிடற்று அந்தணன். இங்கே யாழ் ஆகுபெயராக மறைகளைக் குறித்தது என்று உரைகள் சொல்கின்றன. அந்தணன் என்று இங்கே குறித்தமையாலும் சிவபெருமானது திருவாக்கு மறைவாக்கு என்பதாலும் அப்பொருளும் பொருத்தமுடைத்தே என்று தோன்றுகிறது.

தொல் முறை மரபினன் சிவபெருமான் என்று முன்னர் சொன்னார் புலவர். முடிவும் இல்லாதவன் என்று இங்கே சொல்கிறார். முடிவு இல்லாத சிவபெருமானின் திருவடி நிழலில் உலகம் நிலையாக நிற்கின்றதே என்கிறார். தாஇல் தாள் நிழல் தவிர்ந்து அன்று ஆல் உலகே! இந்த உலகையும் மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும் ஆனவர்களைக் காக்கத் தானே ஆலகாலத்தை உண்டு மணிமிடற்றன் ஆனான் சிவபெருமான். அவன் திருவடி நிழலின் பெருமை சொல்லவும் அரிதே!

பொன் ஊசல் ஆடாமோ ! ! !

திருமயிலை
கபாலீஸ்வரர்



கற்பகாம்பாள் பொன் ஊசலில்
மாதங்களில் சிறந்த மார்கழியில் சகல சிவாலயங்களிலும் அதிகாலையில் மாணிக்க வாசகரின் திருவெம்பாவையும் திருப்பள்ளி எழுச்சியும் இறைவன் முன்னர் இசைக்கப்படுகின்றன. மேலும் பல ஆலயங்களில் ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி பத்து நாள் திருவெம்பாவை விழா நடை பெறுகின்றது. திருமயிலையில் இந்த திருவெம்பாவை விழாவின் நிறை மூன்று நாட்கள் கபாலீஸ்வரரரும், கற்பகாம்பாளும் பொன்னூசல் ஆடி அருளுகின்றனர். அந்த அற்புத அனுபவத்தை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு.

இத்துடன் மாணிக்கவாசக சுவாமிகளின் தேனியும் இனிய திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்னும் சிறப்புடைய திருவாசகத்தின் "திருப்பொன் ஊசல் பதிகத்தையும்" காண்போம்.

மகளிர் விளையாட்டில் ஊசலாடுதலும் ஒன்று. சோலைகளில் கொடிகளாகிய ஊசலிலும், இல்லத்தில் சங்கிலியால் கோர்க்கப்பட்ட பலகைகளிலும் ஏறி ஊசலாடுவர் பெண்டிர். அவ்வாறு ஆடும் போது இனிமையானதொரு பாடலைப் பாடிக்கொண்டே ஊசலாடுவர். ஊசலாட்டில் பாடும் பாடல் "ஊசல்வரி" என்று அழைக்கப்படும். ஊசல் வரியில் தலைவி இறைவன் மேல் பேரின்பம் கொண்டு இறைவனின் அறக்கருணையை பாடி பொன் ஊசல் ஆடுகின்றபடியால் இப்பதிகம் "அருட்சுத்தி" என்றழைக்கப்படுகின்றது. அருட் சுத்தி என்பது அருளால் உண்டாகிய தூய்மை. தற்போது ஊசல் ’உஞ்சல்” என்றும் ஊஞ்சல்” என்றும் வழங்கப்படுகின்றது.

பொன் ஊசலில் கபாலீஸ்வரர்

பூரண ஆபரண மற்றும் மலர் அலங்காரத்தில் கபாலீஸ்வரரும் கற்பகாம்பாளும் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளி பூஜை கண்டருளி திருக்கோவில் வலம் வந்து ஊஞ்சல் மண்டபம் வந்தடைகின்றனர். முதலில் கற்பகாம்பாள் பொன் ஆட அம்மையின் ஊடலை தணிக்கும் வண்ணம் கபாலீஸ்வரப் பெருமான் பெருங்கருணையினால் அம்மையின் முன்னர் நடனமாடுகின்றார். மொத்தம் மூன்று சுற்றுகள் ஆடுகின்றார், முதல் சுற்றில் தேவாரப் பாடலுடனும், இரண்டாம் சுற்றில் கொட்டு தாளத்துடனும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இசையுடன் நடனமாடுகிறார் ஐயன் பின் அன்னையின் சினம் தணிந்த பின் இருவரும் எதிரெதிராக பொன் ஊசல் ஆடுகின்றனர். அப்போது ஓதுவார் மூர்த்திகள் அற்புத பொன் ஊசல் பதிகத்தைப் பாட அன்பர்கள் அனைவரும் அவருடன் சேர்ந்து பொன் ஊசல் பாடுகின்றனர். ஐயனும் அம்மையும் அகங்குழைந்து அன்பர்களுக்கு அருள பொன்னூசல் ஆடி அருளுகின்றனர். பின் தீபாதரனை முடிந்து யதாஸ்தானம் எழுந்தருளுகின்றனர். இந்த இனிய பொன் ஊசலின் படங்களை இப்பதிவில் காண்கின்றீர்கள். அத்துடன் பொன் ஊசல் பதிகத்தையும் அதன் பொருளையும் படித்து அருள் பெறுங்கள்.


திருமயிலைக் கற்பகம்

திருப்பொன் ஊசல் - அருட் சுத்தி


சீர் ஆர் பவளம்கால் முத்தம் கயிறு ஆக;
ஏர் ஆரும் பொன்பலகை ஏறி இனிது அமர்ந்து;
நாராயணன் அறியா நாள்மலர்த்தாள் நாய் அடியேற்கு
ஊர் ஆகத் தந்து அருளும் உத்தர கோசமங்கை
ஆரா அமுதின் அருள்தாள் இணைபாடி
போரார் வேல் கண்மடவீர்! பொன் ஊசல் ஆடாமோ! (1)
போருக்கு அமைந்த கூரிய வேலைப் போன்ற கண்களையுடைய பெண்களே! மேன்மை பொருந்திய பவளத்தையே கால்களாகவும், முத்து வடத்தையே கயிறாகவும் கொண்ட அழகு பொருந்திய பொன்னால் செய்த ஊஞ்சல் பலகையில் மேலேறி இனிதாக எழுந்தருளி நாயினுங்கடையேனாகிய அடியேனுக்கு திருமாலும் காணா தாமரை மலர் போல பிரகாசிக்கின்ற திருவடியினை வாழும் ஊராக கொடுத்து அருளுகின்ற திருஉத்தரகோசமங்கையில் எழுந்தருளி யாவர்க்கும் தெவிட்டாத அமிர்தம் போன்றவனாகிய சிவபெருமானது அருளைக் கொடுக்கின்ற இரண்டு இணையார் திருவடிகளைப் புகழ்ந்து பாடி, பொன் ஊசல் ஆடுவோமாக!

மூன்று அங்கு இலங்கு நயனத்தன் மூவாத
வான்தங்கு தேவர்களும் காணா மலர் அடிகள்
தேன்தங்கித் தித்தித் அமுதுஊறித்தான்தெளிந்து அங்கு
ஊன்தங்கி நின்று உருக்கும் உத்தர கோசமங்கைக்
கோன்தங்கு இடைமருது பாடி குலமஞ்ஞை
போன்று அங்கு அனநடையீர்! பொன்ஊசல் ஆடாமோ! (2)
மயிலைப்போன்ற சாயலைப்பெற்று, அன்னப்பறவையின் நடையுடைய ஆரணங்குகளே! விளங்குகின்ற சூரியன் சந்திரன், அக்னி ஆகிய மூன்று திருக்கண்களையுடைய சிவபெருமானது (அமுதமுண்டமையால்) மூப்படையாத விண்ணுலகில் தங்கி வாழ்கின்ற தேவர்களும் காணா தாமரை போன்ற திருவடிகளையும், தேனொடு கலந்து , இனிமைபெற்று ஊற்றெடுத்துத் தெளிவடைந்து என் உடற்கண்ணே பொருந்தி உருகுவிக்கும் திருஉத்தரகோசமங்கைக்கு அரசனாயிருக்கும் இறைவன் எழுந்தருளி அருள் பாலிக்கும் திருவிதைமருதூரைப் பாடி, பொன் ஊசல் ஆடுவோமாக!

முன் ஈறும் ஆதியும் இல்லான்; முனிவர்குழாம்
பல் நூறு கோடி இமையோர்கள் தாம் நிற்ப
தன்நீறு எனக்கு அருளித் தன்கருணை வெள்ளத்து
மன் ஊற மன்னும் மணி உத்தர கோசமங்கை
மின் ஏறும் மாடம் வியல்மா ளிகைபாடிப்
பொன் ஏறு பூண்முலையீர்! பொன் ஊசல் ஆடாமோ! (3)
மாற்று ஏற்றப்பட்ட பொன் ஆபரணங்களை அணிந்த தனங்களையுடைய மங்கை நல்லீரே! தோன்றிய பொருளுக்கு முற்பட்ட முடிவும் அதன் மேற்பட்ட தோற்றமும் இல்லாத சிவபெருமான் பற்பல நூறுகோடித் தொகையினராகிய முனிவர் கூட்டங்களும், இமையா தேவர்களும் நிற்க, தனது கருணையாகிய பால் வெண்ணீற்றை எனக்கு தந்தருளிய , தன் மகிமை வளர நிலை பெற்ற அழகிய திருஉத்தரகோசமங்கையிலுள்ள மின்னலைப் போல் பிரகாசிக்கின்ற மேல் மாடங்களையுடைய திருக்கோவிலைப்பாடி, பொன் ஊசல் ஆடுவோமாக!

நஞ்சு அமர் கண்டத்தன்; அண்டத் தவர்நாதன்;
மஞ்சுதோய் மாடமணி உத்தர கோசமங்கை
அம் சொலாள் தன்னோடும் கூடி அடியவர்கள்
நெஞ்சுளே நின்று அமுதம் ஊறிக் கருணைசெய்து

துஞ்சல் பிறப்பு அறுப்பான்; தூய புகழ்பாடி


புஞ்சம் ஆர் வெள்வளையீர் பொன் ஊசல் ஆடாமோ! (4)

தொகுதியாக பொருந்திய வெண்மையான சங்கு வளைகளை அணிந்த பெண்காள்! விடம் தங்கிய மணிகண்டத்தையுடையவன், அனைத்து தேவர்களுக்கும் இறைவன், கருத்த மேகங்கள் தவழுகின்ற நெடிதுயர்ந்த மாடங்களையுடைய அழகு பொருந்திய திருஉத்தரகோசமங்கையில் இனிய மொழியாளாகிய மலையரசன் பொற்பாவை உமையம்மையுடன் சேர்ந்து அடியவரது மனத்துள்ளே நிலைத்து நின்று அமிர்தம் சுரந்து அருள் கொடுப்பவனும், பிறப்பு இறப்பு என்னும் தளையை அழிப்பவனும் ஆகிய சிவபெருமானின் பரிசுத்தமாகிய புகழைப்பாடி, பொன் ஊசல் ஆடுவோமாக!

ஆணோ அலியோ அரிவையோ என்று இருவர்
காணாக் கடவுள்; கருணையினால் தேவர்குழாம்
நாணாமே உய்ய ஆட் கொண்டருளி நஞ்சுதனை

ஊண் ஆக உண்டு அருளும் உத்தர கோசமங்கைக்
கோண் ஆர் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப்
பூண் ஆர் வனமுலையீர்! பொன்னூசல் ஆடாமோ! (5)
ஆபரணங்கள் நிறைந்த மிகு அழகாகிய தனங்களையுடைய நங்கையரே! ஆண் இனமோ, பெண் இனமோ அல்லது அலி இனமோ என்று திருமாலும், நான்முகனும் தேடியும் காணாப்படா பெருங்கடவுளும் தன் மாப்பெரும் கருணையினால் தேவர் கூட்டம் நாணமடையாமல் பிழைக்கும்படி அடிமை கொண்டருளி, பாற்கடலிலிருந்து தோன்றிய ஆலகால விடத்தை உணவாக உட்கொண்டருளின திருஉத்த்ரகோசமங்கையிலுள்ள வளைவுள்ள மூன்றாம் பிறைச் சந்திரனை தன் ஜடாமுடியில் ஆபரணமாக அணிந்த கூத்தனாகிய சிவபெருமானது பெருங்குணத்தைப் பாடித் துதித்து பொன் ஊசல் ஆடுவோமாக!


மாது ஆடு பாகத்தன்; உத்தர கோசமங்கைத்
தாது ஆடு கொன்றைச் சடையான் அடியாருள்
கோது ஆட்டி நாயேனை ஆட்கொண்டு என் தொல்பிறவித்
தீது ஓடா வண்ணம் திகழப் பிறப்பு அறுப்பான்
காது ஆடு குண்டலங்கள் பாடிக் கசிந்து அன்பால்
போது ஆடு பூண்முலையீர்!
பொன் ஊசல் ஆடாமோ! (6)
தாமரை அரும்புகள் போல அசைகின்ற திருவாபரணங்களை பூண்ட தனங்களையுடையீர்! மலைமகளை தன் ஒரு பாகம் வைத்த உமையொருபங்கன்; திருஉத்தரகோசமங்கையில் உள்ள மகரந்தப் பொடி பொதிந்த பொன் கொன்றைப் பூமாலையை அணிந்த சடையையுடையவன்; தன் திருத்தொண்டர்களுக்குள்ளே நாயினும் கடையேனை ஒருவனாகப் பாராட்டி அடிமை கொண்டு, எனது பழைய பிறவித்துன்பங்கள் பெருகாவண்ணம் நான் ஞானத்தோடு விளங்கும்படி எனது பிறவித்தளையை அறுப்பவனுமாகிய சிவபெருமானின் காதில் அசைந்து ஆடும் அழகிய குண்டலங்களை அன்பினாற் கசிந்துருகிப் பாடி பொன் ஊசல் ஆடுவோமாக!


அருள் வாரி வழங்கும் அம்மையும் அப்பனும்

உன்னற்கு அரியதிரு உத்தர கோசமங்கை
மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே
பன்னிப் பணிந்து இறைஞ்சப் பாவங்கள் பற்றுஅறுப்பான்
அன்னத்தின் மேல் ஏறி ஆடும் அணி மயில்போல்
என் அத்தன் என்னையும் ஆட்கொண்டான்; எழில்பாடி

பொன் ஒத்த பூண்முலையீர்!
பொன் ஊசல் ஆடாமோ! (7)
அணிகளையணிந்த பொன்னொத்த தனங்களையுடைய பாவையரே! நினைத்தற்கரிய திருவினையுடைய திருஉத்தரகோசமங்கையில் நிலைபெற்று பொலிவுடன் விளங்குகின்ற வேதியனும்; தனது புகழினையே பல காலும் சொல்லி தாழ்ந்து வணங்க, பாவங்களின் பிடிப்பை ஒழிப்பவனும், எனக்கு அப்பனாகி என்னை ஆட்கொண்ட வள்ளல் ஆனவனும், என்னையும் ஒரு பொருளாக அடிமை கொண்டவனுமாகிய இறைவனது, பேரழகினைப்பாடி அன்னப்பறவையின் மீது ஏறி ஆடுகின்ற அழகிய மயிலைப் போன்று நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் ஏறி இருந்து ஆடுவோமாக!

கோல வரைக்குடுமி வந்து குவலயத்துச்
சால அமுது உண்டு தாழ்கடலின் மீது எழுந்து
ஞாலம் மிகப்பரிமேல் கொண்டு நமை ஆண்டான்;
சீலம் திகழும் திருஉத்தர கோசமங்கை
மாலுக்கு அரியானை வாயார நாம்பாடிப்
பூலித்து அகங்குழைந்து
பொன் ஊசல் ஆடாமோ. (8)
உலகம் உய்யும்படியாக அழகிய திருக்கயிலை மலையின் உச்சியினின்றும் குவலயத்து நிலவுலகில் இறங்கி வந்தருளி, வந்தி தரும் பிட்டினை நிரம்ப உண்டும், மிக ஆழந்த கடலில் வலைஞனாய்க் கட்டு மரத்தின் மீது ஏறி வலை வீசி மீன் பிடித்தும், பரிமேலழகனாய்க் குதிரை மீது வந்தும், நம்மை ஆண்டருளினவனாகிய நல்லொழுக்கம் விளங்குகின்ற, திருஉத்தர கோச மங்கையிலுள்ள, திருமாலுக்கும் காணுதற்கு அருமையான இறைவனை நாம் வாய் நிரம்பப் பாடி உடல் பூரித்து, மனம் நெகிழ்ந்து, பொன் ஊசல் ஆடுவோமாக!


தெங்குஉலவு சோலைத் திருவுத்தர கோசமங்கைத்
தங்குஉலவு சோதித் தனிஉருவம் வந்து அருளி
எங்கள் பிறப்பு அறுத்திட்டு எந்தரமும் ஆட்கொள்வான்;
பங்குஉலவு கோதையும் தானும் பணிகொண்ட
கொங்குஉலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்
பொங்குஉலவு பூண்முலையீர்!
பொன் ஊசல் ஆடாமோ! (9)
விளக்கம் பொருந்திய பிரகாசம் பொருந்திய ஆபரணங்களை அணிந்த தனங்களையுடைய கன்னியரே! தென்னஞ்சோலைகள் சூழ்ந்த திருஉத்தரகோசமங்கையில் தங்கி, பொருந்திய ஒளி மயமான ஒப்பற்ற திருவடிவையுடைய இறைவன் வந்தருளி, எளி வந்த கருணையினால் எங்கள் பிறவித் தொடர்பை அறுத்து எங்கள் இனத்தையும் அடிமை கொள்ளும் பொருட்டு இடது பாகத்தில் சோதிமயமான பரமேஸ்வரியும் தானுமாகி வந்தருளி என் குற்றேவலைக் கொண்டு எனை ஆளாக்கிக் கொண்ட, மணம் நிறைந்த பொன் கொன்றைமலர் மாலையைத் தரித்த சடைமுடியுடையவனாகிய சிவபெருமானது மங்கள குணங்களைப் புகழ்ந்து பொன் ஊசல் ஆடுவோமாக!

அருட்சோதி தெய்வம்! எனை ஆண்டுகொண்ட தெய்வம்!

லபதே சுதராம் பக்திம்
அநதே விஷ்ணு பதம் பவேத்!
துளசீ பூ மகாலக்ஷ்மீ
பத்மினி ஸ்ரீஹரிப் ப்ரியா!

துளசி ஸ்ரீசகி சுபே
பாபஹாரிணி புண்யதே!
நமஸ்தே நாரதனுதே
நாராயண மனப்ரியே!

(பூமியில் பக்தியைத் தருபவளே! இறுதியில் மாலோன் பதம் அருள்பவளே! துளசீ! பூமியில் மகாலக்ஷ்மி! தாமரையாளே! ஹரிப்ரியையே! துளசீ! திருவின் துணைவியே! மங்கலமானவளே! பாவங்களை அழிப்பவளே! புண்ணியத்தை அருளுபவளே! நாரதரால் வணங்கப்படுபவளே! நாராயணனின் மனப்ரியையே! உனக்கு வணக்கங்கள்!)

அருட்சோதித் தெய்வம் - எனை
ஆண்டுகொண்ட தெய்வம்!
அம்பலத்தே ஆடுகின்ற
ஆனந்தத் தெய்வம்!!

பொருட்சாரும் மறைகள் எலாம்
போற்றுகின்ற தெய்வம்!
போதாந்தத் தெய்வம் - உயர்
நாதாந்தத் தெய்வம்!!
இருட்பாடு நீக்கிஒளி
ஈந்தருளும் தெய்வம்!
எண்ணியநான் எண்ணியவாறு
எனக்கருளும் தெய்வம்!!

தெருட்பாடல் உவந்து எனையும்
சிவமாக்கும் தெய்வம்!
சிற்சபையில் விளங்குகின்ற
தெய்வமதே தெய்வம்!!

வடமொழிப்பனுவல்: புண்டரீக முனிவர் இயற்றிய துளசி ஸ்தோத்ரம்
தமிழ்ப்பனுவல்: அருட்சோதி வள்ளலார் இயற்றிய திருவருட்பா, ஆறாம் திருமுறை, பரசிவ நிலை முதல் பாடல்
பாடலை வலையேற்றியது: நண்பர் இராகவன்!


ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்

ஓம்.
பைரவ ருத்ராய
மகா ருத்ராய
கால ருத்ராய
கல்பாந்த ருத்ராய
வீர ருத்ராய
ருத்ர ருத்ராய
கோர ருத்ராய
அகோர ருத்ராய
மார்த்தாண்ட ருத்ராய
அண்ட ருத்ராய
ப்ரஹ்மாண்ட ருத்ராய
சண்ட ருத்ராய
ப்ரசண்ட ருத்ராய
தண்ட ருத்ராய
சூர ருத்ராய
வீர ருத்ராய
பவ ருத்ராய
பீம ருத்ராய
அதல ருத்ராய
விதல ருத்ராய
சுதல ருத்ராய
மஹாதல ருத்ராய
ரசாதல ருத்ராய
தளாதல ருத்ராய
பாதாள ருத்ராய
நமோ நம:

ஓம் சிவோஹம்
ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம்

ஓம் சிவோஹம்
ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம்

வீர பத்ராய அக்னி நேத்ராய கோர சம்ஹாரகா
சகல லோகாய சர்வ பூதாய சத்ய சாக்ஷாத்கரா
சம்போ சம்போ சங்கரா

ஓம் சிவோஹம்
ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம்

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்

நம: சோமாய ச ருத்ராய ச நம: தாம்ராய ச அருணாய ச நம: சங்காய ச பசுபதயௌ ச நம உக்ராய ச பீமாய ச நமோ அக்ரேவதாய ச தூரேவதாய ச நமோ ஹந்த்ரே ச ஹனீயசே ச நமோ வ்ருக்ஷேப்யோ ஹரிகேஷேப்யோ நம ஸ்தாராய நம: சம்பவே ச மயோ பவே ச நம: சங்கராய ச மயஸ்கராய ச நம: சிவாய ச சிவதராய ச

அண்ட ப்ரஹ்மாண்ட கோடி
அகில பரிபாலனா
பூரணா ஜகத் காரணா சத்ய தேவ தேவ ப்ரியா

வேத வேதார்த்த சாரா
யக்ஞ யக்ஞோமயா
நிஷ்சலா துஷ்ட நிக்ரஹா
சப்த லோக சம்ரக்ஷணா

சோம சூர்ய அக்னி லோசனா
ஷ்வேத ரிஷப வாகனா
சூல பாணி புஜங்க பூஷணா
த்ரிபுர நாச நர்தனா
வ்யோம கேச மஹாசேன ஜனகா
பஞ்ச வக்த்ர பரசு ஹஸ்த நம:

ஓம் சிவோஹம்
ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம்

ஓம் சிவோஹம்
ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம்

கால த்ரிகால நேத்ர த்ரிநேத்ர சூல த்ரிசூல தாத்ரம்
சத்ய ப்ரபாவ திவ்ய ப்ரகாச மந்த்ர ஸ்வரூப மாத்ரம்
நிஷ்ப்ரபஞ்சாதி நிஷ்கலங்கோஹம் நிஜ பூர்ண போதகம் ஹம்
கத்ய கத்மாகம் நித்ய ப்ரஹ்மோகம் ஸ்வப்ன காசோகம் ஹம் ஹம்

சத் சித் ப்ரமானம் ஓம் ஓம்
மூல ப்ரமேயம் ஓம் ஓம்
அயம் ப்ரஹ்மாஸ்மி ஓம் ஓம்
அஹம் ப்ரஹ்மாஸ்மி ஓம் ஓம்

கன கன கன கன கன கன கன கன
சஹஸ்ர கண்ட சப்த விஹரதி

டம டம டம டம டும ரும டும ரும
சிவ டமருக நாத விஹரதி

ஓம் சிவோஹம்
ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம்

வீர பத்ராய அக்னி நேத்ராய கோர சம்ஹாரகா
சகல லோகாய சர்வ பூதாய சத்ய சாக்ஷாத்கரா
சம்போ சம்போ சங்கரா
***

அப்பாடா. முழுப்பாடலையும் தட்டிவிட்டேன். தட்டுவதற்கே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குகிறது. எழுதியவரையும் பாடியவரையும் பாராட்டித் தான் தீர வேண்டும். இந்தப் பாடலின் பொருளழகும் பாடப்பட்ட முறையும் முதல் முறை கேட்டதில் இருந்து ஒவ்வொரு முறை கேட்கும் போதும் ஒரு வித மோன நிலையைத் தந்து கொண்டே தான் இருக்கிறது. ஒவ்வொரு முறை கேட்கும் போதும் இதன் பொருளை எழுத வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். இன்று தான் வாய்ப்பு கிடைத்தது.

***

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்


ஓம்.
பைரவ ருத்ராய
- பயங்கரமான ருத்ரன்
மகா ருத்ராய - பெரிய ருத்ரன்
கால ருத்ராய - கால வடிவான ருத்ரன்
கல்பாந்த ருத்ராய - கால முடிவான ருத்ரன்
வீர ருத்ராய - வீர ருத்ரன்
ருத்ர ருத்ராய - ருத்ரர்களில் பெரிய ருத்ரன்
கோர ருத்ராய - பயமுறுத்தும் ருத்ரன்
அகோர ருத்ராய - பயங்கரமில்லாத ருத்ரன்
மார்த்தாண்ட ருத்ராய - ஒளிவீசும் ருத்ரன்
அண்ட ருத்ராய - முட்டை வடிவ அகில ருத்ரன்
ப்ரஹ்மாண்ட ருத்ராய - மிகப்பெரிய அகில ருத்ரன்
சண்ட ருத்ராய - ஆவேசமான ருத்ரன்
ப்ரசண்ட ருத்ராய - மிக ஆவேசமான ருத்ரன்
தண்ட ருத்ராய - தண்டனையான ருத்ரன்
சூர ருத்ராய - பலம் பொருந்திய ருத்ரன்
வீர ருத்ராய - வீரனான ருத்ரன்
பவ ருத்ராய - பிறப்பிறப்புச் சுழலான ருத்ரன்
பீம ருத்ராய - வியப்புக்குரிய ருத்ரன்
அதல ருத்ராய - கீழ் உலகங்களின் முதலான அதல உலக ருத்ரன்
விதல ருத்ராய - இரண்டாவதான விதல உலக ருத்ரன்
சுதல ருத்ராய - மூன்றாவதான சுதல உலக ருத்ரன்
மஹாதல ருத்ராய - நான்காவதான மஹாதல உலக ருத்ரன்
ரசாதல ருத்ராய - ஐந்தாவதான ரசாதல உலக ருத்ரன்
தளாதல ருத்ராய - ஆறாவதான தலாதல உலக ருத்ரன்
பாதாள ருத்ராய - ஏழாவதான பாதாள உலக ருத்ரன்
நமோ நம: - போற்றி போற்றி

ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ருத்ர நாமம் பஜேஹம் - ருத்ரனின் திருப்பெயரைப் போற்றுகிறேன் நான்

ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ருத்ர நாமம் பஜேஹம் - ருத்ரன் நாமத்தை நான் போற்றுகிறேன்.

வீர - வீரன்
பத்ராய - மங்கலமானவன்
அக்னி நேத்ராய - தீக்கண்ணன்
கோர சம்ஹாரகா - பயங்கரமான அழிப்பவன்
சகல லோகாய - எல்லா உலகங்களுமானவன்
சர்வ பூதாய - எல்லா உயிர்களுமானவன்
சத்ய சாக்ஷாத்கரா - உண்மையை நேரடியாக அறிந்தவன்; அறியச் செய்பவன்

சம்போ சம்போ சங்கரா - இன்பத்தைத் தருபவனே மகிழ்ச்சியைத் தருபவனே இன்பத்தை உண்டாக்குபவனே!

ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ருத்ர நாமம் பஜேஹம் - ருத்ரன் நாமத்தை நான் போற்றுகிறேன்.

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்

(அடுத்து வருவது ஸ்ரீருத்ரம் என்னும் வேத மந்திரத்தின் பகுதி)

நம: சோமாய ச - உமையுடன் கூடியவனுக்கு வணக்கம்
ருத்ராய ச - அழுகையைத் தருபவனுக்கும் வணக்கம்
நம: தாம்ராய ச - தாமிர நிறம் கொண்டவனுக்கு வணக்கம்
அருணாய ச - சிவந்த நிறம் கொண்ட சிவனுக்கும் வணக்கம்
நம: சங்காய ச - மகிழ்ச்சியைத் தருபவனுக்கு வணக்கம்
பசுபதயௌ ச - எல்லா உயிர்களின் உரிமையாளனுக்கும் வணக்கம்
நம உக்ராய ச - உக்கிரமானவனுக்கு வணக்கம்
பீமாய ச - பயமுறுத்துபவனுக்கும் வணக்கம்
நமோ அக்ரேவதாய ச - அருகில் இருந்து அழிப்பவனுக்கு வணக்கம்
தூரேவதாய ச - தூரத்தில் இருந்து வதைப்பவனுக்கும் வணக்கம்
நமோ ஹந்த்ரே ச - அழிப்பவனுக்கு வணக்கம்
ஹனீயசே ச - அனைத்தையும் அழிப்பவனுக்கும் வணக்கம்
நமோ வ்ருக்ஷேப்யோ ஹரிகேஷேப்யோ - பசுமையான முடி கொண்ட மரங்களாக இருப்பவனுக்கு வணக்கம்
நம ஸ்தாராய - தாரக மந்திரமான ஓம்காரமானவனுக்கு வணக்கம்
நம: சம்பவே ச - அனைத்து இன்பத்திற்கும் பிறப்பிடமானவனுக்கு வணக்கம்
மயோ பவே ச - இம்மையும் மறுமையும் ஆனவனுக்கு வணக்கம்
நம: சங்கராய ச - இயல்பாகவே இன்பத்தைத் தருபவனுக்கு வணக்கம்
மயஸ்கராய ச நம: - பேரின்பத்தை மறுமையில் தருபவனுக்கும் வணக்கம்
சிவாய ச - மங்கல வடிவான சிவனுக்கு வணக்கம்
சிவதராய ச - எல்லோரையும் விட மங்கலமானவனுக்கு வணக்கம்

(ஸ்ரீருத்ர மந்திரப் பகுதி முடிந்தது)

அண்ட ப்ரஹ்மாண்ட கோடி அகில பரிபாலனா - கோடி கோடி உலகங்களாக நிற்கும் முட்டை வடிவான பிரபஞ்சத்தை நன்றாக நடத்துபவனே
பூரணா - முழுமையானவனே
ஜகத்காரணா - உலகத்தின் பிறப்பிடமே
சத்ய தேவ - உண்மைக்கடவுளே
தேவ ப்ரியா - தேவர்களுக்குப் பிரியமானவனே

வேத வேதார்த்த சாரா - வேதங்களுக்கும் வேதப் பொருளுக்கும் அடிப்படையானவனே
யக்ஞ யக்ஞோமயா - வேள்விகளின் உருவானவனே
நிஷ்சலா - சலனம்/அசைவு இல்லாதவனே
துஷ்ட நிக்ரஹா - தீமையை அகற்றுபவனே
சப்த லோக சம்ரக்ஷணா - ஏழுலகையும் நன்கு காப்பவனே

சோம சூர்ய அக்னி லோசனா - சந்திரன், சூரியன், தீ என்னும் மூன்று கண்களை உடையவனே
ஷ்வேத ரிஷப வாகனா - வெள்ளை விடை வாகனனே
சூல பாணி - திரிசூலம் ஏந்தியவனே
புஜங்க பூஷணா - பாம்புகளை அணிந்தவனே
த்ரிபுர நாச நர்தனா - மூவுலகையும் அழித்து ஆடுபவனே
வ்யோம கேச - மேலே தூக்கி முடித்த சடையை உடையவனே
மஹாசேன ஜனகா - தேவசேனாபதியான முருகனின் தந்தையே
பஞ்ச வக்த்ர - ஐந்து முகத்தோனே
பரசு ஹஸ்த நம: - மழுவேந்தியவனே போற்றி

ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ருத்ர நாமம் பஜேஹம் - ருத்ரனின் திருப்பெயரைப் போற்றுகிறேன் நான்

ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ருத்ர நாமம் பஜேஹம் - ருத்ரன் நாமத்தை நான் போற்றுகிறேன்.

கால - காலமே
த்ரிகால - மூன்று காலமே
நேத்ர - கண்ணே
த்ரிநேத்ர - முக்கண்ணனே
சூல - சூலனே
த்ரிசூல தாத்ரம் - திரிசூலம் தாங்கியவனே
சத்ய ப்ரபாவ - உண்மைப் பெருமையுடையவனே
திவ்ய ப்ரகாச - தெய்வீகமான ஒளியை உடையவனே
மந்த்ர ஸ்வரூப மாத்ரம் - மந்திர உருவமாக மட்டும் இருப்பவனே

நிஷ்ப்ரபஞ்சாதி நிஷ்கலங்கோஹம் - உலகமும் அதன் குறைகளும் இல்லாதவன் நான்
நிஜ பூர்ண போதகம் ஹம் - உண்மையான முழுமையான அறிவு உடையவன் நான்
கத்ய கத்மாகம் - படிக்கவேண்டியவற்றை எல்லாம் படித்தவன்
நித்ய ப்ரஹ்மோகம் - என்றும் பிரம்மமானவன்
ஸ்வப்ன காசோகம் ஹம் ஹம் - கனவுகள் இல்லாதவன் நான் நான் (வாழ்க்கை என்னும் பெருங்கனவு இல்லாதவன்)

சத் சித் ப்ரமானம் ஓம் ஓம் - உண்மையும் அறிவுமே ஆதாரங்கள் ஓம் ஓம்
மூல ப்ரமேயம் ஓம் ஓம் - உலகமே அறிவது ஓம் ஓம்
அயம் ப்ரஹ்மாஸ்மி ஓம் ஓம் - இதுவே கடவுள் ஓம் ஓம்
அஹம் ப்ரஹ்மாஸ்மி ஓம் ஓம் - நானே கடவுள் ஓம் ஓம்

கன கன கன கன கன கன கன கன சஹஸ்ர கண்ட சப்த விஹரதி - கன கன என்று ஆயிரம் குரல்களின் ஒலி கேட்கிறதே

டம டம டம டம டும ரும டும ரும சிவ டமருக நாத விஹரதி - டம டம டும ரும என்று சிவனின் உடுக்கை ஒலி கேட்கிறதே

ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ருத்ர நாமம் பஜேஹம் - ருத்ரன் நாமத்தை நான் போற்றுகிறேன்.

வீர - வீரன்
பத்ராய - மங்கலமானவன்
அக்னி நேத்ராய - தீக்கண்ணன்
கோர சம்ஹாரகா - பயங்கரமான அழிப்பவன்
சகல லோகாய - எல்லா உலகங்களுமானவன்
சர்வ பூதாய - எல்லா உயிர்களுமானவன்
சத்ய சாக்ஷாத்கரா - உண்மையை நேரடியாக அறிந்தவன்; அறியச் செய்பவன்

சம்போ சம்போ சங்கரா - இன்பத்தைத் தருபவனே மகிழ்ச்சியைத் தருபவனே இன்பத்தை உண்டாக்குபவனே

திருஅங்க மாலை




மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வெண்டறை பொய்கையும் போன்றது
ஈசன் எந்தன் இணையடி நீழலே!










என்று பாடிய அப்பர் பெருமான்


கற்றிணைப் பூட்டியோர் கடலினில் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சிவாயவே!
என்று நமச்சிவாய என்னும் மந்திரத்தால் தண்ணீரில் மூழ்கும் கல்லையே தெப்பமாகக் கொண்டு கடலில் மிதந்து வந்து கரை சேர்ந்தவர். இவர் செய்த அற்புதங்கள்

சுண்ணாம்பு நீற்றறையின் துன்பத்தை நீக்கிக் கொள்ளுதல்.
கொல்ல ஏவப்பட்ட யானையை அடக்கியது.
கட்டப்பெற்ற கல்லையே தெப்பமாக மாற்றிக் கடலில் மிதந்து உயிர்பெற்றது.
திருநல்லூரில் இறைவனின் திருவடியைச் சூடிக்கொண்டது.
பாம்பு தீண்டப்பெற்ற அப்பூதியின் மகனின் விடத்தை நீக்கியது.
திருவீழிமிழலையில் படிக்காசு பெற்றது.
திருமறைக்காட்டில் திருக்கோயில் கதவைத் திறக்கச் செய்தது.
பழையாறையில் உண்ணாநோன்பு இருந்து கடவுட்காட்சி பெற்றது.
இறுதியில் திருப்புகலூரில் இறைவனோடு இரண்டறக் கலந்தது.

"நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்" என்று இறுமாப்புடன் முழங்கிய இவர், எம்பெருமானை எட்டு போற்றித்தாண்டகங்களால் பாடி மகிழ்ந்தவர் எனவே இவர் "தாண்டகவேந்தர்" என்று அழைக்கப்பட்டார். அவரது குரு பூசை நாளில் அவரது திருவங்கமாலை பதிகத்தைக் காணலாமா? அன்பர்களே.

தலையே நீ வணங்காய் - தலை
மாலை தலைக்கணிந்து
தலையாலே பலி தேரும் தலைவனைத்
தலையே நீ வணங்காய்.
( தலையே! நீ சிவபெருமானை வணங்கு , அவர் தலை மாலைகளை தலைக்கு அணிந்தவர், பிரமனின் சிரத்தைக் கொய்து , பலி கொள்பவர். அவரை வணங்குவாயாக.) கண்காள் காண்மின்களோ - கடல்
நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண்டோள் வீசி நின்றாடும்பிரான்தன்னைக்
கண்காள் காண்மின்களோ.
( கண்களே! பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தை அருந்திய சகல ஜீவராசிகளையும் காப்பாற்றிய தியாகராஜனும், எட்டுத்தோள்களை வீசி ஆடுகின்ற பேராற்றல் உடையவனுமாகிய தலைவனைக் காணுங்கள்.) மூக்கே நீ முரலாய் - முது
காடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை
மூக்கே நீ முரலாய்.
( மூக்கே! நீ தியானத்தில் ஈசனுடைய திருநாமத்தை மூச்சோடு கலந்து ஒலிப்பாய் ஆகுக! அவன் முது காட்டில் உறைபவன், முக்கண் முதல்வன், தனது வார்த்தை அமுதத்தை பருகுவதற்காக தன்னை நோக்கியபடியே இருக்கும் மலையரசன் பொற்பாவை , கௌரி, பார்வதி, உமையம்மை, மலைமகளின் மணாளன்) வாயே வாழ்த்து கண்டாய் - மத
யானை உரி போர்த்துப்
பேய்வாழ் காட்டகத்தாடும் பிரான்தன்னை
வாயே வாழ்த்து கண்டாய்,
(வாயே! மத யானையின் தோலை உரித்து போர்த்திக்கொண்டு, பேய்கள் வாழும் கானகத்தில் ஆடுகின்ற தலைவனை நீ வாழ்த்துவாயாக) நெஞ்சே நீ நினையாய் - நிமிர்
புன்சடை நின்மலனை
மஞ்சாடும் மலைமங்கை மணாளனை
நெஞ்சே நீ நினையாய்
(நெஞ்சமே! சடைமுடியை உடையவனும்,குற்றமற்றவனும், மலைமங்கையின் துணைவருமான ஈசனை நினைத்தபடி இரு.) கைகாள் கூப்பித்தொழீர் - கடி
மாமலர் தூவி நின்று
பைவாய்ப் பரம்பரை ஆர்த்த பரமனைக்
கைகாள் கூப்பித்தொழீர்.
(கரங்களே! நாகங்களை இடுப்பில் அணிந்திருக்கும் நாதனின் மேல் மலர்களைத் தூவி அவரை வணங்குங்கள்) ஆக்கையாற் பயன் என் - அரன்
கோயில் வலம் வந்து
பூக்கையால் அட்டிப் போற்றி என்னாத இவ்
ஆக்கையாற் பயன் என்?
(சிவபெருமான் வாழ்கின்ற ஆலயங்களை வலம்வந்து பூக்களைப் பறித்து அவரைப் போற்றாத உடலை வைத்துக் கொண்டு என்ன பயன்?) கால்களாற் பயன் என் - கறைக்
கண்டன் உறை கோயில்
கோலக் கோபுரக் கோகரணம் சூழாக்
கால்களாற் பயன் என்?
( கடல் நஞ்சையுண்டு கண்டம் கறுத்தவரான சிவபெருமானின் உறைகின்ற அழகான திருக்கோயில்களை அதிலும் குறிப்பாக கோகர்ண ஆலயத்தை வலம் வராத கால்களால் என்ன பயன்?) உற்றார் ஆருளரோ - உயிர்
கொண்டு போம்பொழுது
குற்றாலத்துறை கூத்தன் அல்லால் நமக்கு
உற்றார் ஆருளரோ.
( திருக்குற்றாலத்தில் நடனமாடும் ஆனந்த கூத்தன் சிவபெருமானைத் தவிர உயிர் பிரியும் தருணத்தில் நம்மோடு இருக்கவல்ல உற்றார் வேறு யார்.?) இறுமாந்திருப்பன் கொலோ - ஈசன்
பல்கணத்து எண்ணப்பட்டுச்
சிறுமானேந்தி தன் சேவடிக் கீழ்சென்றங்கு
இறுமாந்து இருப்பன் கொலோ.
( இப்படி எல்லா அங்கங்களினாலும் சிவத்தொண்டு புரிவதால் என்னையும் தன் அடியாரின் திருக்கூட்டத்தில் ஒருவனாக ஈசன் ஏற்றுக்கொள்வார். திருக்கரத்தில் மானையேந்தி அருள் பாலிக்கும் அந்த பரமனது திருவடியில் அமர்ந்து நான் பெருமையோடு இருப்பேன்.) தேடிக்கண்டு கொண்டேன் - திரு
மாலோடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை என்னுள்ளே
தேடிக் கண்டுகொண்டேன்.
(திருமாலும், நான்முகனும் தேடியும் காண முடியாத தேவ தேவன் சிவபெருமான், அப்படிப்பட்ட பரம்பொருளை நான் என்னுள்ளே தேடிக்கண்டுகொண்டேன்.) தமிழ் கூறும் நல் உலகில் இதற்கு முன்னர் எந்தப் புலவரும் காட்டிடாத ஒப்பற்ற வழி முறைகளை கூறும் அப்பரின் திருவங்கமாலை அவரை அடையாளம் காட்டும் ஒரு அற்புத பதிகம். தலையில் தொடங்கி கண் செவி, வாய்,நெஞ்சு, கைகள், கால்கள் என்று இறைவன் கொடுத்த இந்த உடலின் அனைத்துப் பாகங்களும் எம்பெருமானின் தொண்டி செய்வதற்கே என்று பாடிய அப்பர் பெருமானின் இந்த அற்புத பதிகத்தை படித்து இன்புறுங்கள் அன்பர்களே.


சித்திரை சதயம் தேவாரம் பாடிய மூவர்களில் ஒருவரான திருநாவுக்கரசரின் குருபூசை நாள். மூவரும் ஒவ்வொரு விதமாக இறைவனைப் பாடினர் அம்மையின் ஞானப்பால் உண்டதாலும் குழந்தை என்பதாலும் ஆளுடையபிள்ளை இறைவனை கொஞ்சு தமிழில் பாடினார். ஆதி காலத்தில் ஜைனராக இருந்து பின் இறைவனால் சூளை நோய் தீர்க்கப்பட்டதால் அப்பர் பெருமான் கெஞ்சு தமிழில் பாடினார். எம்பெருமான் தோழர் என்பதால் சுந்தரர் மிஞ்சு தமிழில் பாடினார். மூவரும் இறைவனை அடைய மூன்று வழிகளை காட்டினர். என் கடன் பணி செய்து கிடப்பதே என்று கோவில் கோவிலாக சென்று உழவாரப்பணி செய்த அப்பர் காட்டியது சரியை மார்க்கம். உழவாரப் படையைத் (புல்,பூண்டு நீக்கும் ஆயுதம்) தாங்கி, இறைத்தொண்டும் திருநாவுக்கரசர் செய்ததால் அவருடைய பாடல்கள் திருக்கோயில் தொண்டினையும், மனிதநேயத்தினையும் வலியுறுத்துவதாக உள்ளன. இவர் தாச மார்க்கத்தால் இறைவனை அடையலாம் என்று காட்டினார். திருஞானசம்பந்தர் கிரியை மார்க்கத்தையும் சுந்தரர் யோக மார்க்கத்தையும் உணர்த்தினர்.



சிவன் கோவில் பிரான்மலை

சிவனின் திருமண கோலம்
 

எங்கள் ஊர் பிரான்மலை இது முனொரு காலத்தில் வள்ளல் பாரி ஆண்ட ஊராகும் இங்கு உள்ள சிவன் கோவில் மூன்றடுக்கு கோயில் ஒருசமயம் வாயுபகவானுக்கும், ஆதிசேஷனுக்கும் தங்களில் யார் பலசாலி என போட்டி எழுந்தது. ஆதிசேஷன் மேரு மலையைச் சுற்றிக்கொள்ள வேண்டும், அதை வாயு பகவான் தனது பலத்தால் பெயர்க்க வேண்டும் என்பதே போட்டி. ஆதிசேஷன், தன் பலத்தால் மலையை இறுகப் பற்றிக்கொண்டார். வாயு பகவான் எவ்வளவோ முயன்றும், மலையை அசைக்க முடியவில்லை. இந்த போட்டியின்போது, மேரு மலையிலிருந்து துண்டுகள் பெயர்ந்து விழுந்தது. அவ்வாறு விழுந்த குன்றே, இங்கே மலையாக உள்ளது.
இம்மலையில் சிவன் பாதாளம், பூலோகம், கைலாயம் என மூன்று அடுக்குகளில் இருந்து காட்சி தருகிறார்.
பாதாளத்திலுள்ள கோயிலில் சிவன், கொடுங்குன்றநாதர் என்ற பெயரில் அருளுகிறார். இவருக்கான அம்பிகை, குயிலமுதநாயகி தனிச்சன்னதியில் இருக்கிறாள். மத்தியிலுள்ள கோயிலில் விசாலாட்சியுடன் விஸ்வநாதர், மேல் பகுதியில் அம்பிகையுடன் மங்கைபாகராக காட்சி தருகிறார்.
நந்தி இல்லாத சிவன்: கைலாயம் எனப்படும் மேலடுக்கிலுள்ள கோயில் குடவறையாக அமைந்துள்ளது. இந்த சன்னதியில் மங்கைபாகர், அம்பிகையுடன் இணைந்து, அகத்தியருக்கு திருமணக்காட்சி அருளிய கோலத்தில் காட்சி தருகிறார். இதை சிவனின், "அந்நியோன்ய கோலம்' என்கிறார்கள்.
இந்த சன்னதியின் முன்மண்டப மேற்சுவரில் கைலாயத்தில் சிவ,பார்வதி திருமணம் காணச்சென்ற முப்பத்து முக்கோடி தேவர்களும் இருக்கும் சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது.
மங்கைபாகர் சிலை, நவ மூலிகைச் சாற்றால் செய்யப்பட்டதாகும். எனவே, இவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. பவுர்ணமியன்று காலையில் புனுகு, சாம்பிராணி தைலம் மட்டுமே சாத்துகின்றனர். இவரது சன்னதியில் காசிராஜன் கொடுத்த, "உடையவர் லிங்கம்' என்ற சிறிய லிங்கம் இருக்கிறது. மங்கைபாகருக்கு அபிஷேகம் கிடையாது என்பதால், அவருக்குச் செய்ய வேண்டிய அபிஷேகம் அனைத்தும் இந்த லிங்கத்திற்கு செய்கின்றனர்.
குறிஞ்சி நிலத்தில் (குன்றில்) அமைந்த கோயில் என்பதால், இந்நிலத்திற்கு உரிய தேன், தினைமாவு மற்றும் பச்சரிசி மாவில் செய்த தோசையை நைவேத்யமாக படைக்கின்றனர்.
இவரது சன்னதியின் எதிரில் நந்தி கிடையாது. சிவன், அகத்தியருக்கு திருமணக்கோலத்தில் காட்சி கொடுத்தபோது, நந்திதேவர் மத்தளம் வாசித்துக் கொண்டிருந்தார். எனவே, சிவன் இங்கு நந்திதேவர் இல்லாமல் அம்பிகையுடன் காட்சி தந்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இவருக்கு எதிரில் நந்தி இல்லை என்கிறார்கள். மேலும் இவருக்கு கொடிமரம், பலிபீடமும் கிடையாது.
கைலாயத்தில் சிவன், பார்வதி திருமணம் நடந்தபோது தேவர்கள், மகரிஷிகள், முனிவர்கள் என அனைவரும் கைலாயம் சென்றனர். இதனால் வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்தது. உலகை சமப்படுத்த சிவன், அகத்தியரை தென்திசையில் பொதிகை மலைக்குச் செல்லும்படி கூறினார்.
அகத்தியருக்கோ, சிவனின் திருமணத்தைக் காண வேண்டுமென்ற ஆசை இருந்தது. தனது எண்ணத்தை சிவனிடம் முறையிட்டார். தென்திசையில் அவருக்கு தனது திருமணக்காட்சி கிடைக்கும் என்றார் சிவன். அப்போது அகத்தியர் சிவனிடம், தான் விரும்பும் இடங்களில் எல்லாம் அவரது திருமணக்கோல காட்சி கிடைக்க வேண்டும் என வேண்டினார்.
அதன்படி அகத்தியர் பொதிகை மலைக்குச் செல்லும் வழியில், பல இடங்களில் சிவனின் திருமணக்கோலத்தை தரிசித்தார். அவ்வாறு அவர் தரிசித்த தலங்களில் இத்தலமும் ஒன்று. இக்கோயில் குன்றக்குடி தேவஸ்தானத்தில் கட்டுப்பாட்டில் உள்ளது.