September 04, 2011

வயிரே வைகுண்டம்...கக்கூஸே கைலாசம்...!

அந்த பிரபல கோவில் நகரத்தின் மையப்பகுதி அங்கே கரிய நிறத்தில் ஓடிக்கொண்டிருந்த சாக்கடையில் தன் கால்களை நனைத்த வண்ணம் அமர்ந்திருந்தார் அந்த நபர்.

உடலின் சில பகுதியை சாக்கு மறைத்திருந்தது. அழுக்கும் சிக்குகளும் நிறைந்த சடை மேல் உடலை மறைத்துக் கொண்டிருந்தது. முகத்தின் முன் விழுந்த சடைகளால் அவரின் முகம் தெளிவாக தெரியவில்லை. தாடி சூழ்ந்த முகவாயில் இருந்து காது கூசும் கெட்ட வார்த்தைகள் வந்த வண்ணம் இருந்தது. இப்படி பட்ட ஒருவரை நீங்கள் பார்க்க நேர்ந்தால் அவரின் பெயர் தான் சாக்கடை சித்தர்...!

மக்கள் அவரை சூழ்ந்து நின்று ஏதாவது கேட்பார்கள். அவர் பதில்பேச மாட்டார். ஏதாவது பேசினால் அது கெட்ட வார்த்தையாகவோ அல்லது புரியாத வார்த்தைகளாகவோ இருக்கும். மக்கள் அதிகமாக கூடி இவரை தொந்தரவு செய்தால் தனது கையால் சாக்கடை நீரை எடுத்து அமிர்ந்தம் போல பருகுவார். பிறர் மேல் அதை தெளிப்பார். அவ்வளவு தான் கூட்டம் கலைந்துவிடும்.

அன்று காலை சாக்கடை சாமி வழக்கம் போல தன் விளையாட்டை சாக்கடையில் துவக்கி இருந்தார்.

அவரை இருவர் நெருங்கி நின்று பார்த்த வண்ணம் இருந்தனர். ஒருவர் எளிமையான உடையுடன் காணப்பட்டார். மற்றொருவர் வசதியான தோற்றத்தில் நின்று இருந்தார்.

“என்னடா ...... பசங்களா என்னையே பார்க்கிறீங்க? என்னை கொல பண்ண போறீங்களா? இந்த பிச்சக்காரன் கிட்ட கொள்ளை அடிக்க வந்தீங்களா...என்னடா வேணும் ” என்றார் சாமி.

 “சாமி... கடவுளை அடைய வழி சொல்லுங்க சாமி” என்றார்கள் இருவரும்....

“ கடவுளை அடைய வழியா...கேட்கரானுங்க பாரு கேள்வி ......... மாதிரி...” என்று தன் வழக்கமான அமிர்தத்தை எடுத்து பருகிவிட்டு....

“சொல்றேன் கேட்டுக்கோ...

வயிரே வைகுண்டம்...கக்கூஸே கைலாசம்”..என்றார்.


 

“சாமி புரியலையே..கொஞ்சம் விளக்கமா...” என இருவரும் சொல்லி முடிக்கும் முன் அவர்கள் மேல் சாக்கடை அமிர்ந்த மழை பொழிய...இருவரும் அந்த இடத்தைவிட்டு அகன்றனர்.


 

நாட்கள் கடந்தது....


 

வயிரே வைகுண்டம்...கக்கூஸே கைலாசம் - என்ற கருத்தை யோசித்து கடவுளை அடைய முயன்றார் பணக்காரர். தனது உணவுகளை மிகவும் சுவையாகவும் விலைபதிப்பாகவும் உண்ணத் துவங்கினார். தனது கழிவறையை பல லட்சம் செலவு செய்து பளிங்கு கற்களால் இழைத்தார். ஆனால் கடவுளை அடைவதற்கு பதில் நோய்வாய்பட்டு காலமானார்.


 

அதே நேரத்தில் ஏழ்மை நிலை கொண்ட மற்றொரு சாக்கடை சாமியின் வார்த்தைகளை ஆழமாக புரிந்துகொண்டார். ஒவ்வொரு மனிதனின் வயிறும் வைகுண்டமாக அவருக்கு தெரிந்தது. தினமும் அன்னதானம் செய்யது வைகுண்டத்தை அன்னம் மூலம் நிரப்பினார். அதே போல பொதுக்கழிப்பிடத்திற்கு சென்று மனதில் அருவெறுப்பு இல்லாமல் சுத்தம் செய்தார்.


 

அன்னதானத்தின் மூலமும் பொது சேவை மூலமும் கர்மயோக பாதையில் உயர்ந்து ஞானம் பெற்றார்....


 

--------------ஓம்------------


 

குரு அனைவருக்கும் ஒன்றே உபதேசிக்கிறார். அவருக்கு உயர்வு தாழ்வு இல்லை. ஆனால் நம் அஹங்காரம் உயர்வு தாழ்வுடன் இருப்பதால் குருவின் உபதேசத்தை தவறாக உணர்ந்து கொண்டு ஆன்மீக பாதையில் தவறிவிடுகிறோம்.


 

குருவின் உபதேசத்தை சுயநலமும் அஹங்காரமும் இல்லாமல் கண்டால் இறையருளை எளிமையாக அடையலாம்.




போன ஜென்மத்தை காட்டுகிறேன் வா என என் நெற்றிப் பொட்டில் கை வைத்தார் குரு நாதர்.

அந்த ஜென்மத்தின் நினைவுகள் தெரியத்து வங்கியது.

அதில் அடுத்த ஜென்மத்தை காட்டுகிறேன் வா என என் நெற்றிப் பொட்டில் கை வைத்தார் குரு நாதர்.

இவ்வாறு நாங்கள் பிறவிச் சுழற்சியில் மாட்டிக்கொண்டோம்..!

-----------------ஓம்-----------------

எந்த சிஷ்யனிடமும் குரு தான் அதை செய்கிறேன் இதை செய்கிறேன் என கூறுவதில்லை.
அவ்வாறு கூறுபவர் அகந்தையின் சொரூபமாக தான் உயர்ந்தவன் என காட்டவே செய்கிறார்.

அவர் குரு நிலையில் இருக்க வாய்ப்பில்லை.

பல ஜென்மங்களை காட்டுகிறேன் என கூறுபவரை விட...

உனக்கு உன் இருப்பை மட்டுமே காட்டுகிறேன் என்ற விழிப்புணர்வை கொடுப்பவரை குருவாக இருக்க முடியும்.

கடவுள் ஒரு காட்டு எருமை..!

“குருஜீ நீங்க பிறக்கு போதே இந்த தாடி இருந்துச்சா?”

“தினமும் ஏன் குருஜீ மாலையை விரலால தேச்சு சேதமாக்கனும்?”

“எப்பவும் நாமதான் மூச்சு எடுக்கறோமே அப்பறம் ஏன் காலையில தனியா ஒரு மணிநேரம் மூச்சு எடுக்கனும்?”

மேற்கண்ட கேள்விகளின் நாயகன் மாதவனுக்கு பதினாறு வயது நேற்றுடன் முடிந்து. வயதுக்கு ஏற்ற வளர்ச்சி இல்லை என்பார்கள். சிறு வயதிலிருந்தே மிகவும் குறும்புக்காரனாக வளர்ந்ததால் வீட்டில் இவனின் சேட்டைகளை அளவிட முடியாமல் பெற்றோர்கள் தவித்தார்கள்.

நல்வழிபடுத்தும் நோக்கில் பரமாணந்த ஆசிரமத்தில் கொண்டு விட்டு விட்டார்கள். ஆசிரமத்தில் அவனுக்கு தெரியாததே இல்லை என்பதை போல எந்த வேலையை கொடுத்தாலும் சலிக்காமல் செய்வான். சில நேரங்களில் சிறப்பாக செய்கிறேன் பேர்வழி என தனது புத்திச்சாலித்தனத்தால் குளறுபடிகளும் நடக்கும். அசிரமத்தில் பலர் இவனை கிண்டலும் கேலியும் செய்வதுண்டு.

இவனின் முட்டாள் தனமான கேள்விகளுக்கு சில நேரம் குரு பொருமையாக பதில் அளித்துக்கொண்டு இருப்பார். சில நேரங்களில் சிரித்துவிட்டு செல்வார். குரு மாதவனுக்கு முக்கியத்துவம் கொடுத்து விளக்குவது ஆசிரமவாசிகளுக்கு ஆச்சரியத்தை கொடுக்கும்.

இவ்வளவு பொறுமையான குருவையே ஒரு நாள் கோபப்படுத்தினான் மாதவன். குரு தனது அன்றாட பூஜைக்காக மலர்களை நந்தவனத்தில் பறித்துக் கொண்டிருந்தார்.


உருவமற்ற பரம்பொருளை மானச பூஜை செய்வது குருவின் பூஜாமுறைகளில் ஒன்று. அவ்வாறு அவர் பூஜைக்காக தயாராகி வரும்பொழுது மாதவன் குருவின் அருகே வந்தமர்ந்து அவர் செய்வதை கவனித்துக் கொண்டிருந்தான்.

திடீரென பூ இருக்கும் தட்டிலிருந்து மகிழம் பூவை எடுத்து நாசிக்கு அருகில் வைத்து நுகர்ந்தான்.

இச்செய்கையை கண்ட குரு, “மாதவா கடவுளுக்கு வைத்திருக்கும் பூவை இப்படி செய்யலாமா? போ வெளியே” என கோபம் கொண்ட வார்த்தைகளால் கூறினார்.

தன் செய்த செய்கையை உணராத மாதவன் “குருவே கடவுள் எப்படி இருப்பார்?” என வேறு கேள்வியை கேட்டான்.

கோபத்தின் உச்சத்திற்கே சென்ற குரு “கடவுள் காட்டு எருமை போல இருப்பார். இப்பொழுது நீ வெளியே செல்” என கோபம் தனியாது கூறினார்.

குருவிடம் ஏற்பட்ட திடீர் மாற்றத்தை குழப்பத்துடன் பார்த்தவாறே வெளியே சென்றான் மாதவன்.

நாட்கள் மாதத்திலும் ... மாதங்கள் வருடத்திலும் கரைந்தது.

ஒரு நாள் அருகில் இருக்கும் புண்ணிய தலத்திற்கு பயணமானார் குரு. மாதவன் இல்லாமல் பயணமா? அவனும் குருவுடன் பயணித்தான்.

கோவிலின் வாயில் அருகே அதிக கூட்டம் இருப்பதை கண்டார்கள். திருவிழா நேரம் என்பதால் இறைவனின் திருவீதி உலாவிற்காக கூட்டம் குழுமி இருந்தது. கோவிலின் வாயிலில் இருவரும் நின்றார்கள்.

இறைவனின் பல்லாக்கை கோவிலுக்குள் இருந்து வெளியே எடுத்து வரும் நிலையில் கோவிலின் வாசலில் நெரிசல் ஏற்பட்டது. இதனால் பல்லாக்கை சரியாக வெளியே கொண்டு வர முடியவில்லை.

நெரிசலை கண்ட குரு, “ஓ இறைவனை நகர் வலம் கொண்டு செல்ல மிகவும் சிரமம் ஏற்படுகிறதே..” என புலம்பினார்.

இதைக்கேட்ட மாதவன், “குருஜீ... மிகப்பெரிய காட்டெருமையை இந்த சின்ன வாயிலில் கொண்டு வர முடியுமா? வாயிலை அகலப்படுத்த வேண்டும். முட்டாள்கள்” என்றான்.

--------------------------------ஓம்----------------------------------------

இறைவன் அருவமானவன்.
இறைவன் குருவின் வாக்கினால் உருவமாகிறார்.

குருவே இறைவனை நமக்கு காட்டும் கண்களாக இருக்கிறார்.
அதில் தெரியும் காட்சிகள் என்றும் தெய்வீகமானது.

குரு கூறும் எவ்வாக்கியமும் மஹாவாக்கியமாகிவிடும்.

ஆன்மீக குருவுடன் முதல் சந்திப்பு

ரிஷிகளின் கருப்பை என அழைக்கப்படும் ரிஷிகேசத்தின் கிழக்கு பகுதி. சூரியன் தன் கதிர்களை தளர்த்தி செம்பாகும் மாலை நேரம். அந்த மலைபகுதியை ஒட்டி இருக்கும் ஆசிரம குடில்கள் நிறைந்த ஏகாந்தமான சூழலுக்குள் நுழைந்தான் விஷ்வ தாஸ்.

நீண்ட காலமாக குருவை தேடி பல இடங்களுக்கு பயணப்பட்டவனுக்கு அந்த இடம் ஒரு ரம்மியமான அமைதியை கொடுத்தது. ஆசிரம குடில்களுக்கு மத்தியில் இருந்த ஆலமரத்தின் அடியில் சிறிது கூட்டம் தென்பட அதை நோக்கி சென்றான் விஷ்வதாஸ்.

கண்கள் மூடி அன்பர்கள் சுற்றி அமர்ந்திருக்க ஒரு தெய்வீகமான உருவத்தில் நடு நாயகமாக அமர்ந்திருந்தார் யோகி யஸ்வந். வெண் பஞ்சு போன்ற நீண்ட தலை முடியும் தாடியும் ஆழ்ந்த அமைதியை பறைசாற்றியது. அவரின் முன் சென்று அமைதியாக அமர்ந்தான் விஷ்வ தாஸ். எங்கும் பேரமைதி நிலவியது.

சில நிமிடங்கள் கரைந்தது. மெல்ல கண்களை திறந்தான் விஷ்வ தாஸ், யோகி அவனை உற்று நோக்கிய வண்ணம் இருந்தார். சைகையால் அவனை அருகில் அழைத்தார்.

முக மலர்ச்சியுடன் அவரின் அருகில் சென்று பணிந்து வணங்கினான் விஷ்வ தாஸ். மீண்டும் சைகையால் கண்களை மூடச்சொன்னார். கண்கள் மூடி ஆழ்ந்த ஆன்மீக எதிர்பார்ப்புடன் இருந்தான் விஷ்வ தாஸ்.

“பளார்...”

அசுரத்தனமான அடி ஒன்று கண்ணத்தில் இறங்கியது. எதிர்பாராத அடியால் நிலை குலைந்து போனான் விஷ்வ தாஸ்.

சுற்றி இருந்தவர்கள் அனைவரும் இவனை பார்த்து பலமாக சிரிக்க, அவமானமும் ஏமாற்றமும் இணைந்து கண்களில் நீர்துளியாக எட்டிபார்த்தது.

வேறு யோசனைகள் இல்லாமல் அந்த இடத்தைவிட்டு வெளியேரினான் விஷ்வதாஸ். ஆசிரமத்தை விட்டு வெளியேறி வெளியே இருக்கும் பாதையில் நடக்கலானான். அவமானம் ஆத்திரமாக மாறியது. பல பேர் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்திய யோகியை பழிதீர்க்க எண்ணினான். வேறு ஆசிரமம் சென்று அங்கே இணைந்து இவருக்கு முன் ஆன்மீகத்தில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது.

கங்கை கரையை பாலத்தின் மூலம் கடந்து மறுகரையில் இருக்கும் மற்றொரு ஆசிரமத்திற்குள் நுழைந்தான்.

சிஷ்யர்கள் ஒருவர் முன் அமர்ந்து கொண்டு பஜனை பாடிகொண்டிருந்தார்கள்.

அங்கே மழிக்கப்பட்ட தலையுடன் கருப்பு கம்பளியை மட்டும் உடலில் போர்த்திய கம்பளி யோகி அமர்ந்திருந்தார். யோகி யஸ்வந் உடன் கம்பளி யோகியை ஒப்பிட்டு பார்த்தான். உடை, தலை முடியின் அமைப்பு என பல்வேறு ஒப்பீடுகள் நடத்தினான். யோகி யஸ்வந்க்கு முற்றிலும் எதிரான நிலையை கப்பளி யோகியிடம் கண்டான். தான் சரியான இடம் வந்திருப்பதாக உணர்ந்து கொண்டான்.

விஸ்வ தாஸ் சிஷயர்களுடன் அமர்ந்து கண்களை மூடி தானும் பஜனை பாடியவாறே மெல்ல தலையை அசைத்துக் கொண்டிருந்தான்.

யாரோ அவனை உற்று நோக்குவது போல இருந்தது கண்களை திறந்து பார்த்தான். கம்பளி யோகி இவனை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். கம்பளி யோகி தன்னை ஏற்றுக் கொண்டதாக உணர்ந்தான். இவனுக்கு ஆனந்த அனுபவமாக இருந்தது.

சில வினாடிகளில் சைகையால் தன்னை நோக்கி அழைத்தார் கம்பளி யோகி. மெல்ல அவரிடம் சென்றான். சைகையால் கண்களை மூடு என்றார்.

கண்களை மூடியவனுக்கு மனதுக்குள் மின்னலாய் முன்பு நடந்த அனுபவம் நிழலாடியது. யோகி யஸ்வந் விட்ட அறை ஞாபகம் வர....சற்று பின்னோக்கி நகர்ந்து கண்களை திறந்தான்.

அங்கே நீண்ட திரிசூலத்தை தூக்கி இவனை நோக்கி பாய்ச்சும் தருவாயில் இருந்தார் கம்பளி யோகி. அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றான். சடாரென சுதாரித்துக் கொண்டு திரும்பி ஓட துவங்கினான்.

கம்பளி யோகி அவனை விடாமல் துரத்த துவங்கினார்..

குருவை தேடிவந்தது குற்றமா? ஆன்மீக எண்ணத்தை தவிர தவறான எண்ணம் எதுவும் தனக்கு இல்லையே. அடிப்பதற்கும் கொல்லுவதற்கும் இவர்கள் துணியும் அளவுக்கு நாம் என்ன பாவம் செய்தும் என நினைத்து தன்னை நொந்து கொண்டான். விஸ்வ தாஸ் ஓடுவதை நிறுத்தவும் இல்லை. கம்பளி யோகியும் விடுவதாக இல்லை.

கங்கை கரையில் நீண்ட தூரம் ஓடியவனுக்கு கம்பளி யோகியின் மேல் எரிச்சல் உண்டானது. கம்பளி யோகி தன்னை கொலை செய்ய துரத்துவதை பார்க்கும் பொழுது யஸ்வந் யோகி தன்னை அடிக்க மட்டுமே செய்தார். அவர் எவ்வளவோ நல்லவர் என தோன்றியது.

பல எண்ணங்களுடன் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தவன் எதிலோ மோதி கீழே விழுந்தான். மெல்ல எழுந்து பார்த்தான்.

அங்கே யஸ்வந் யோகி நின்று இருந்தார். அவனை ஆதரவாக தூக்கி கையில் இருந்த இனிப்பை அவனுக்கு புகட்டினார். வாயில் இனிப்புடன் கலவரத்துடன் திரும்பி பார்த்தான் விஸ்வ தாஸ்.

அங்கே கம்பளி யோகி தென்படவில்லை.

-------------------ஓம்-----------------------

குருவை நீங்கள் தேடத்துவங்கினால் உங்கள் அறியாமையை தூண்டுபவரை சென்று அடைவீர்கள். உங்களுக்கு சுகமான உணவையும், சூழலையும் சுகானுபவத்தையும் கொடுப்பவர் குரு என நீங்கள் நினைப்பீர்கள். அப்படிபட்டவர்கள் உங்களை அறியாமை என்ற தூக்கத்தில் ஆழ்த்தி விடுவார்கள்.

ஆன்மாவை நேரடியாக தொடர்பு கொள்ள உங்கள் ஆணவத்துடன் போர் புரிபவரே உங்கள் குருவாக இருக்க முடியும். அவரை நீங்கள் சந்தித்ததும் உங்களிடம் இருந்து எதையோ முக்கியமானதை இழக்கப் போகிறேன் என்ற ஆழ்ந்த துக்கம் ஏற்படும். உங்கள் ஆணவம் தன்னை இழக்க தயாராகாமல் அவருடன் போராடி தோற்கும்.

எளிமையாக சொல்லுவதென்றால், உங்கள் உள் கட்டமைப்புகளை தகர்த்து யார் அதில் புதிய ஒளியை ஏற்றுகிறாரோ அவரே குருவாக இருக்க முடியும்.

உங்களை தூங்க செய்பவர் குரு அல்ல.. விழிக்கச் செய்பவரே குரு...!
 

குரு - அடி - திருவடி..!

குருவே சரணம், அனைவருக்கும் வணக்கம்.
நான் நந்து என்கிற முக்தானந்த கிரி பேசுகிறேன்.

எனக்கு சிறு வயதிலிருந்தே ஆன்மீக தாகம் அதிகம். ஆன்மீக வாழ்க்கையில் வாழ்ந்து இறைவனைக்கான வேண்டும் என்பது ஆழ்ந்த விருப்பமாக இருந்தது.ஆர்வம் அதிகரித்ததால் சுவாமி வேதானந்த கிரியின் ஆஸ்ரமத்தில் வந்து சேர்ந்தேன். கடந்த சில நாட்களாக சுவாமியின் அருட்பார்வையில் வாழும் பாக்கியம் கிடைத்தது.

சுவாமி வேதானந்தகிரி ஒரு மெளனகுரு. எந்த போதனையோ கருத்துக்களோ சொல்லமாட்டார். இடையில் கோமணத்தை கட்டிக்கொண்டு கையில் ஒரு சிறிய கம்பு ஒன்றும் வைத்திருப்பார். அவரை பார்த்தால் அதிகபட்சம் ஒரு மாடு மேய்க்கும் முதியவரை போன்று காட்சி அளிப்பார். மக்கள் அவரை வேதானந்த கிரி என அழைத்தார்கள். ஆனால் அவர் தன் பெயரை வெளியே சொன்னது இல்லை.

யாரிடமும் பேசாமல் அமைதியாக மரத்தடியில் இருந்தவரின் பால் மக்கள் ஈர்க்கப்பட்டு பலர் அவருடன் இணைந்து இருக்க துவங்கினார்கள். மெல்ல அந்த சூழல் ஓர் ஆன்மீக ஆசிரமமாக மலர்ந்தது.

தேசிய நெடுஞ்சாலையின் இரு பக்கமும் சிறிய குடில்கள் மற்றும் வீடுகளுடன் வேதானந்தகிரி ஆஸ்ரமம் செயல்பட்டுவந்தது. ஒரு பக்கம் சமையல் அறை மற்றும் குடியிருப்புக்கள், மறுபுறம் குருநாதர் இருக்கும் இடம், நந்தவனம் ஆகியவை இருந்தது.

எனக்கு நந்தவனத்தை சீரமைக்கும் பணி. தினமும் காலை எழுந்து நீராடிவிட்டு, குருவின் முன் வந்து விழுந்து வணங்குவேன். அவரோ ஏதோ ஒரு நிலையில் இருப்பார். அவர் முன் யார் இருக்கிறார்கள் என பார்க்கும் நிலையில் இருக்க மாட்டார். பிறகு நான் நந்தவனத்திற்கு சென்று அன்றைய பணியை துவக்குவேன்.

அன்று அப்படித்தான் பணியை துவக்கி மதியம் நெருங்கும் வேளையில் ஒரு முனகல் சப்தம் கேட்டது. அரளிச்செடியின் அருகே அழகான ஒரு நாய்க்குட்டி. பிறந்து சில மாதங்கள் ஆனதன் சுவடுகளுடன் மிகவும் மென்மையாக வலம் வந்து கொண்டிருந்தது.

அதன் துள்ளலும், ஓட்டமும் எனக்குள் உற்சாகத்தை ஏற்படுத்தின. அதற்கு சில உணவுகளை கொடுத்தவுடன் என்னுடன் மிகவும் நெருங்கியது அந்த நாய்க்குட்டி.



ஒரு நாள் மதிய உணவுக்காக நெடுஞ்சாலையை தாண்டி இருக்கும் ஆஸ்ரமத்தின் சமையலறைக்கு சென்றுவிட்டு வரும்பொழுது தான் கண்டேன். சமையலறை வாசலில் நாய்க்குட்டி. உணவை தேடி வந்திருந்தது.

அதற்கு உணவளித்துவிட்டு நான் மறுபுறம் சாலையை கடக்க எத்தனிக்கும் பொழுது நாயும் என்னுடன் வரத்துவங்கியது. நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிகமாக இருந்ததால் நாய்க்குட்டியை கையில் எடுத்துக்கொண்டு சாலையை கடந்து நந்தவனம் நோக்கி சென்றேன்.

“தட்” எதிர்பாராத விதமாக அந்த அடி என் முதுகில் விழுந்தது.

மரண வலி.

திரும்பிப்பார்த்தேன். வேதானந்தகிரி நின்று கொண்டிருந்தார்.

தனது கையில் இருக்கும் கம்பு கொண்டு என்னை அடித்திருக்கிறார்.

புரியாமல் பார்த்தேன். வழக்கம் போல எங்கோ பார்த்தவாரே நடந்து சென்றுவிட்டார்.

அடியைவிட அதற்கு காரணம் தெரியாமல் இருந்தது அதிகமாக வலித்தது. சில நாட்கள் கடந்தது அவரின் பார்வையை தவிர்த்து வந்தேன். இங்கே வந்திருக்கக் கூடாது என்றுகூட நினைத்தேன்.

------------------------------------------------------

மற்றொரு நாள் மதிய உணவுக்காக நாய்குட்டியை கைகளில் ஏந்திய வண்ணம் எதிர்பக்கம் இருந்த சமையலறையை நோக்கி நெடுஞ்சாலையை கடக்க துவங்கினேன்.

“தட்” மீண்டும் அந்த மரண அடி.

இந்த முறை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
கண்கள் கலங்கியது.

எந்த சலனமும் இல்லாமல் நடந்து சென்றுகொண்டிருந்தார் வேதானந்த கிரி.
மனநிலை பாதிக்கப்பட்டவரிடம் சிக்கிக்கொண்டோம் என நினைத்தேன்.
அன்று சாப்பிடும் எண்ணமே இல்லாமல் நந்தவனத்திலேயே இருந்தேன்.

------------------------------------------

சில நாட்கள் கடந்தது...

ஒரு நாள் என் அறையில் இருந்து நந்தவனம் நோக்கி சென்றுகொண்டிருந்தேன்.

சாலையைக் கடக்கும் பொழுது அந்த கோரக்காட்சியை கண்டேன்.

வாகனத்தில் அடிபட்டு அந்த நாய் இறந்துகிடந்தது. அதன் தலைப்பகுதி கூழாகி ஈக்கள் அதன் மெல் மொய்க்க அந்த காட்சி என்னை மிகவும் கலக்கம் அடையச்செய்தது.


அடுத்த நொடி அந்த சப்தத்தை கேட்டேன்...

“தட்”

“தட்”

அந்த அடியின் சப்தம்..
ஆனால் என்மேல் அடிவிழவில்லை.

நாயின் நசுக்கப்பட்ட உடலின் அருகே நின்ற வேதானந்த கிரி தன் உடலில் கம்பு கொண்டு தானே அடித்துக்கொண்டிருந்தார். அவரின் கண்கள் நாயின் உடல் மேல் இருந்தது.

அன்று நந்துவாக இருந்த நான் முக்தானந்த கிரியாக என்னுள் மாற்றமடைந்தேன்.

--------------------------ஓம்----------------------------

குரு தன் சிஷ்யனுக்கு போதிப்பது இல்லை. அவனின் வாழ்வியலில் ஒரு சிறிய நெருப்பு பொறியை தூண்டுகிறார். அது ஆன்மீகமாக கொழுந்துவிட்டு எரிகிறது.

எப்பொழுதும் கருத்துக்களையும், விளக்கங்களையும் கொடுத்துக் கொண்டிருப்பவரை நாம் குருவாக நினைத்து பின் தொடர்ந்தால் , நம் கதி நந்துவின் நாயின் கதியை போன்றாகிவிடும்.அதாவது போதனையை மட்டும் குருவாகக் கொண்டால் நெடுஞ்சாலை என்ற வாழ்க்கையை கடக்கும் நாய் போல விபத்துக்கள் நேரும்.

குரு நம்மில் மாற்றத்தை ஏற்படுத்தி நம்மை சுயமாக ஆன்ம முன்னேற்றும் பெறச்செய்வார். அத்தகைய குரு இல்லாத தருணத்தில் கூட நம்மால் சமநிலை தவறாமல் இருக்க முடியும்.
 

எலுமிச்சை புல்

திருவண்ணாமலை மலைப்பாதையின் மேல் குருவும் சிஷ்யனும் நடந்து கொண்டிருந்தார்கள். அங்கே இருக்கும் விருப்பாச்சி குகையில் தியானம் செய்ய இருவரும் நடக்க துவங்கி அரை மணி நேரம் கடந்துவிட்டது.

குரு மெளனமாக பின்னால் வர சிஷ்யன் வேகமாக நடந்து கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் குருவின் காட்சியில் மறைந்து வெகு தொலைவுக்கு சென்றுவிட்டான்.

குரு மெல்ல நடந்து கொண்டிருந்தார்.

சில நிமிடங்கள் கரைந்தன... தூரத்தில் சோர்வுடன் சிஷ்யன் அமர்ந்திருந்தான்.குரு கையில் ஒர் பச்சிலையுடன் நடந்து வந்தார். சிஷ்யனிடம் கொடுத்து முகர்ந்து பார்க்க சொன்னார்.

அவர் அந்த பச்சிலையை முகர்ந்ததும் அதில் எலுமிச்சை மணம் அடித்தது. சிஷ்யனின் மனதுக்கும் உடலுக்கும் ஒரு உற்சாகம் கிடைத்தது.

“குருவே இது என்ன இலை?”

“இதன் பெயர் எலும்மிச்சை புல். சாதாரண புல் போல தெரிந்தாலும் எலுமிச்சை மணம் கொண்டது.”

“குருவே உங்களிடம் ஒரு கேள்வி. தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது.”

புன்னகைத்தவாறே...“ம்..” என்றார் குரு.

”ஒருவனுக்கு ஆன்மீக உயர்வு அடைய குரு அவசியம் தானா?”

”விழிப்புணர்வு ஒருவனுக்கு கிடைக்கும் வரை அவனுக்கு குரு அவசியம்”

“விழிப்புணர்வு என்றால்...?”

“நான் கொடுத்த எலுமிச்சை புல் முகர்ந்தாய் அல்லவா? அதற்கு முன் இங்கே இருக்கும் எலுமிச்சை புல் பற்றி உனக்கு தெரியுமா?”

“தெரியாது”

“நான் வரும் வரை இங்கே அமர்ந்திருதாயே.. பார் உன் கால்களுக்கு அருகிலேயெ அந்த புல் புதர் போல வளர்ந்திருக்கிறது. உன் கால்களுக்கு கீழே அந்த பொருள் இருப்பது தெரியாமல், இன்னொருவர் உனக்கு தரும் வரை நீ அமர்ந்திருக்கிறாய். விழிப்புணர்வு கொண்டவனாக இருந்தால் உனக்கே தெரிந்திருக்கும்.”

“அப்படியானால் விழிப்புணர்வு வரும் வரை குரு தேவை அல்லவா?”

“விழிப்புணர்வு வரும் வரை குரு தேவை. விழிப்புணர்வு வந்த பின் குரு எல்லா இடத்திலும் இருப்பதை நீ உணர்வாய்”

”அப்படியானால் அனைவருக்கும் குரு தேவையா?”

“ஆம். அதனால் தான் ஆண்டாண்டு காலமாக இம்மலையில் எலும்மிச்சை புல் வளருகிறது. உன்னையும் என்னையும் போல பலர் இங்கே வந்து இதே கேள்வியையும் பதிலையும் விவரிக்கிறார்கள்.”

---------------------------ஓம்-------------------------------
குரு சிஷ்ய உறவு என்பது மனித வாழ்க்கைக்கு அப்பாற்பட்டது. எத்தனையோ குரு சிஷ்யர்கள் தங்களின் இறப்புக்கு பிறகும் அடுத்த பிறவியிலும் உறவை தொடர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

அதனால் தான் குரு சிஷ்யனுக்கு உபதேசம் செய்வதை அனேகமாக ஆலமரத்தின் அடியில் அமர்ந்து விவரிப்பதாக விளக்குகிறார்கள். ஆலமரம் போல விழுதுகளுடன் கிளைப்பது குரு சிஷ்ய பாரம்பரியம்.

இக்கதையில் எலுமிச்சை புல் என்பது ஞானத்தின் வடிவமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. எலுமிச்சை புல் என்பதற்கு பதில் பிரம்ம ஞானம் என மாற்றி படித்துப்பார்த்தால் கதையின் முழுமை புரியும்.

சீனத்தில் அதிகமாக விளையும் பொருளான இது ஜென் முறையின் வடிவமாக கருதப்படுகிறது. ஓஷோ தனது தாவோ பற்றிய உரையில் கூறும் பிரசித்திபெற்ற வரிகள் “புல் தானே வளர்கிறது”.
 

ஸ்டார்டிங் ட்ரபிள்

“டிங்...டிங்...டிங்” காலை ஆசிரம மணியின் ஓசை கேட்டது.

நான்கு மணி ஆகிவிட்டது என்ற எண்ணத்துடன் எழுந்தான் விஷ்ணு. விஷ்ணு ஆசிரமத்தின் அனைத்து வேலைகளையும் பார்ப்பவர்களில் ஒருவன்.

காலை ஐந்து மணிக்கு யோக பயிற்சி முடித்ததும், ப்ரார்த்தனை மற்றும் காலை உணவுடன் துவங்கும் அவனது பணி இரவு ஒன்பது வரை நீடிக்கும்.

புத்தகங்கள் பார்சல் அனுப்புவது, தோட்டத்தை சுத்தம் செய்வது மற்றும் குரு வெளியே செல்லுவதற்கு வாகன ஓட்டியாக மாறுவது என ஒரு நாளில் பல அவதாரம் எடுப்பவன் விஷ்ணு.

அன்று காலை வழக்கம் போல யோக பயிற்சிக்காக ஆசிரம யோக சாலைக்கு சென்று பயிற்சி செய்ய துவங்கினான்.

இன்று என்னமோ அவனுக்கு யோக பயிற்சியை சரிவர செய்ய முடியவில்லை.முன்னால் அமர்ந்திருந்த குருவின் மேல் அவனுக்கு கவனம் முழுவதும் சென்றது. விஷ்ணு ஆசிரமத்திற்கு வந்த நாள் முதல் பார்த்திருக்கிறான் குரு யோக பயிற்சியை கற்றுக்கொடுக்கிறாரே தவிர அவர் செய்வதில்லை.

இவனும் சக ஆசிரம வாசிகளும் ப்ராணயாமமும், ஆசனமும் செய்யும் பொழுது அவர் கண்களை மூடி அமர்ந்திருப்பார். அல்லது ஜன்னலுக்கு வெளியே எங்கோ பார்த்துக்கொண்டிருப்பார்.

பிறருக்கு பயிற்சி அளிக்கும் நேரத்தில் குரு செய்து இருப்பதை பார்த்திருக்கிறேன். எங்களை தினமும் செய்ய கூறும் குரு தான் செய்வதில்லையே என்ற எண்ணம் அதிகமாக வந்தது. தவறு என்றாலும் எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை. அவனது யோக பயிற்சியில் கூட அந்த தடுமாற்றம் தெரிந்தது.

ஆனாலும் யாருக்கும் தெரியாத வண்ணம் சரிசெய்து யோக பயிற்சி முடித்துவிட்டு அறையைவிட்டு வெளியேறினேன்.

“விஷ்ணு...”.. குருவின் குரல் கேட்டது.

அவரை நோக்கி புன்னகையுடன் கைக்கூப்பி நின்றேன்.

“ கொஞ்சம் வெளியே போகனும், ஜீப் ரெடி பண்ணுப்பா” என்றார் குரு.

என்றும் இல்லாத அதிசயமாக இன்று காலையிலேயே வெளியே செல்ல அழைக்கிறாரே என்ற தயக்கத்துடன் ஜீப்பை தயார் செய்தேன். குருஜி ஏறியதும் ஜீப்பை ஸ்டார்ட் செய்து ஆசிரமத்திலிருந்து வெளியே கொண்டு வந்தேன். ஆசிரமம் இருப்பது மலைபகுதி என்பதால் ஜீப் பயணிக்கும் பொழுது குளிர்ந்த காற்று ரம்மியமாக இருந்தது.

சில தூரம் பயணித்ததும் குருஜி என்னை பார்த்து திரும்பினார்..

பிறகு கேட்டார்.. “ சாவி போட்டுட்டியா விஷ்ணு?” என்றார்.

வண்டி ஓடிக்கொண்டிருக்கும் பொழுது இது என்ன இப்படி கேட்கிறார் என்ற குழப்பம் வந்தாலும் வேறு வழியில்லாமல் “போட்டாச்சு குருஜீ” என்றேன்.

ஜீப்பினுள் மெளனம் நிலவியது.

வண்டி சில கிலோ மீட்டர் சென்றது
மீண்டும் குருஜீ என்னை பார்த்து திரும்பினார்.

பின்பு கேட்டார்.. “ஜீப்புக்கு சாவி போட்டுட்டியா விஷ்ணு?”

இது என்ன முட்டாள் தனமான கேள்வி என தோன்றினாலும் வேறுவழியில்லாமல்.. “போட்டாச்சு குருஜீ” என்றேன்.

மேலும் சில கிலோமீட்டர் சென்றது. மீண்டும் குருஜீ என்னை பார்த்து...

“விஷ்ணு சாவி... ” என துவங்கும் முன் இடைமறித்தேன். “குருஜீ சாவி போடாமல் எப்படி வண்டி ஸ்டார்ட் ஆகும்? நாம் இவ்வளவு கிலோமீட்டர் வர முடியுமா? ” என்றேன்.

வேறு எங்கோ பார்வையை நிலைபடுத்திய படியே குருஜீ கூறினார்.

“ உள் இருக்கும் தெய்வீகத்தை தூண்டுவதற்காகத்தான் எல்லோரும் யோகப்பயிற்சி செய்கிறார்கள். இது வண்டிக்கு சாவி போடுவது போல. தூண்டிவிடப்பட்டதும் தெய்வீகம் ஆற்றலுடன் செயல் படத்துவங்கும். அப்பொழுது மீண்டும் மீண்டும் தூண்டிவிட தேவையில்லை. வண்டி ஓடும் பொழுது நீ மீண்டும் மீண்டும் சாவி போட்டு துவக்கவில்லை இல்லையா?”

“. க்ரிர்....ச்...” ஜீப்பை பிரேக் போட்டு நிறுத்தினேன்.

---------------------ஓம்-----------------------

நம்மை குருவின் நிலையுடன் எப்பொழுதும் ஒப்பிட்டுக்கொள்ளக்கூடாது.

நாம் குருவை மிஞ்சிய சிஷ்யர்களாக இருந்தாலும் குருவின் செயலை நாம் செய்ய வேண்டும் என்பதில்லை.

குரு நமக்கு எதை செய்ய சொல்கிறாரோ அதை செய்வதே பெரும் ஆன்மீக செயலாக கருதவேண்டும்.

குருவுக்கு தெரியும் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற அர்ப்பணிப்பு உணர்வு இருந்தால் அவருடன் நம்மை ஒப்பு நோக்க தோன்றாது.

கூட்டுப்புழு தன்னை பட்டாம்பூச்சி ஆக்க முயல வேண்டும். பட்டாம்பூச்சி எதுவும் ஆக முயல வேண்டாம். கூட்டுப்புழு எதுவும் செய்ய வில்லை என்றால் என்றும் பட்டாம்பூச்சி ஆக முடியாது.
நீங்கள் நீங்களாக இருக்க முயன்றால் நீங்களும் குருவாக மாற முடியும்.
மாறாக நீங்கள் குருவாக முயன்றால் நீங்கள் நீங்களாக கூட மாற முடியாது.

 

மீண்டும் ஒரு ரசவாதம்

ராஜன் நீங்கள் நினைப்பதை போல பணம் ...பணம் ...என அலைபவன் கிடையாது. ஏதோ சின்னவயதில் அவன் பணம் இல்லாமல் கஷ்டப்பட்டான் என்பதை தவிர அவனுக்கும் பண கஷ்டத்திற்கும் சம்பந்தம் இல்லை. போதை பழக்கம் மற்று சில கெட்ட விஷயங்களுக்கு அவனுக்கு அதிகமாகவே பணம் தேவைப்பட்டது. அவன் நண்பர்களுடன் உரையாடும் பொழுது ரசவாதம் செய்வதை பற்றி பேச்சுவந்தது. அனைத்து உலோகத்தையும் தங்கமாக மாற்றம் செய்யும் ரசவாதம் என்ற விஷயம் அவனுக்குள் புதிய ரத்தத்தை பாய்ச்சியது.

ரசவாதம் பற்றிய செய்திகளை சேகரிக்க துங்கினான். உணவு உறக்கம் அவனுக்கு இரண்டாம்பட்சம் ஆகியது. ரசவாதம் செய்வது அவனின் நோக்கம் அல்ல. ரசவாதம் செய்தால் கிடைக்கும் தங்கத்தை கொண்டு ஏழை எளியவர்களை காப்பாற்றலாம் அல்லவா?

நம்புங்கள் அது ஒன்று தான் அவன் நோக்கம். வேறு ஒன்றும் இல்லை.

இவ்வாறு ராஜன் ரசவாதத்திற்கு அலையும்பொழுது தான் ஸ்வாமி திரிலோகானந்தரை பற்றி கேள்விப்பட்டான். ஸ்வாமியின் ஆசிரமத்தில் ரசவாதம் நடப்பதாகவும், ஸ்வாமி ரசவாதம் தெரிந்தவர் என்றும் செய்தியை உறுதி செய்து கொண்டு அவரை சந்திக்க சென்றான்.

திரிலோகானந்தரின் ஆசரமம் முக்கிலி மலை உச்சியில் இருந்தது. முக்கிலி மலை சாதாரண மலை அல்ல. அதன் உச்சிக்கு செல்லுவதற்கு அதிக உடல் பலம் வேண்டும்.

வருடத்திற்கு ஒருமுறைமட்டுமே மலையிலிருந்து கீழே வந்து மக்களுக்கு தரிசனம் தருவார் ஸ்வாமி. அவரை அந்த நாளில் சந்தித்தால் நன்றாக இருக்கும் என நினைத்து சென்றான் ராஜன்.


அங்கே அவன் கண்ட காட்சி ஆச்சரியத்தை உண்டு செய்தது. பல்லாயிர கணக்கான மக்கள் அங்கு தரிசனத்திற்காக காத்திருந்தார்கள்.

இந்த ஜன கூட்டத்தில் ரசவாதம் பற்றி பேசமுடியுமா என ராஜனுக்கு சந்தேகம் வந்தது. ஸ்வாமி திரிலோகானந்தாவின் ஆசிரமத்தில் ஊடுருவி ரசவாதத்தை தெரிந்து கொள்ளலாம் என முடிவு செய்தான் ராஜன்.

ஸ்வாமி திரிலோகானந்தாவின் பாதங்களில் விழுந்து வணங்கினான்.

“ஐயா என்னை உங்கள் சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளுங்கள்”.

புன்னகைத்த திரிலோகானந்தர் அவனை மெல்ல எழுப்பி கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளுகிறேன். உனக்காகத்தான் காத்திருந்தேன்” என கூறி அவனை தன்னுடன் இருக்க அனுமதித்தார்.

தனது திட்டம் இவ்வளவு சுலபமாக செயல்படும் என ராஜன் நினைக்கவில்லை. தனது பழக்கங்களை விட்டுவிட்டு சிஷ்யனாக நடிக்கதுவங்கினான்.

முக்கிலி மலையில் ராஜனின் ஆசிரம வாசம் துவங்கியது. தினமும் நீர் மற்றும் உணவுகளை அடிவாரம் சென்று கொண்டுவருவது, ஆசிரம் தகவல்களை வெளியிடுவது என பரபரப்பான செயல்பட்டான் ராஜன். அவன் தனது வாழ்க்கையில் இப்படிபட்ட உடல் உழைப்பு கொண்ட வேலைகளை செய்ததில்லை.

சில மாதங்களிலேயே திரிலோகானந்தாவின் நெருக்கத்தொண்டன் ஆனான் ராஜன். அவனுக்கு ஆன்மீக தீட்சை வழங்கி தன்னருகில் இருக்குமாறு பணிந்தார் குரு.

ராஜன் ஸ்வாமி விஸ்வானந்தரானார்.

காலங்கள் கடந்தது ஸ்வாமி விஸ்வானந்தரின் ரசவாத ஆர்வம் மட்டும் குறையவில்லை. நொடிப்பொழுதும் குருவை விட்டு விலகாமல் இருந்தாலும் அவரின் செய்கையில் இருந்து ரசவாத குறிப்புகளை கண்டறியமுடியவில்லை.

காலங்கள் கடந்தது....

ஸ்வாமி திரிலோகானந்தர் தனது இறுதி காலத்தை எட்டினார்..

அவரின் படுக்கைக்கு அருகில் அமர்ந்திருந்தார் ஸ்வாமி விஸ்வானந்தர்.

தான் இங்கே வந்து பலவருடம் போராடி ரசவாதத்தை அறியமுடியவில்லை என்ற ஏக்கம் ஒருபுறம், இப்பொழுது கேட்டுவிட வேண்டும் இதைவிட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என்ற எண்ணமும் ஸ்வாமி விஸ்வானந்தரிடம் குடி கொண்டிருந்தது.

யாரும் அருகில் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு மெல்ல குருவின் பாதங்களை பற்றி நமஸ்கரித்தவாரே கேட்டான்...

“குருவே உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்”

“கேள் விஸ்வா ”

“உங்களிடம் நான் வந்த நோக்கம் தெரியுமா உங்களுக்கு”

“தெரியும். ரசவாதம் தானே”

ஸ்வாமி விஸ்வானந்தருக்கு அதிர்ச்சியாக இருந்தது. தெரிந்தா இவ்வளவு நாள் நம்மை அருகில் வைத்திருந்தார். தன்னை சுதரித்துக் கொண்டு..

“ஆம் குருவே. நீங்கள் எனக்கு அதை கற்றுக்கொடுப்பீர்களா”

“எனது அருமை விஸ்வா, ரசவாதம் செய்வது எளிது... பார் ராஜனாக இருந்த இரும்பு துண்டை விஸ்வானந்தா எனும் தங்கமாக மாற்றி இருக்கிறேனே? இது தானப்பா ரசவாதம்...!”

அவனை தீர்க்கமாக பார்த்து புன்னகைத்தவாறே அவரின் ப்ராணன் அவருள் அடங்கியது.
.
அவர் உடலிலிருந்து ஒளி வெளிப்பட்டு விஸ்வானந்தரின் உள்ளே சென்றது.

ஸ்வாமி விஸ்வானந்தாவுக்கு புரியதுவங்கியது.. இரும்பு துண்டுகளை எதிர்நோக்கி காத்திருந்தார்...

---------------------------ஓம்--------------------------------

குருவிடம் எதிர்பார்ப்புடன் செய்பவர்களின் சுயநலத்தை குரு பார்ப்பதில்லை. அந்த சுயநலத்தை எப்படி ஆன்மீக ஆற்றலாக மாற்றலாம் என்றே பார்க்கிறார்.

பொருள் தேடி இருளில் இருக்கும் உலகிற்கு எத்தனையோ குருமார்கள் ஒளி கொடுத்து இறை பெருவெளியில் நினைத்திருக்க செய்திருக்கிறார்கள்.

நீங்கள் நீங்களாக இருங்கள் குரு உங்களில் ரசவாதத்தை உண்டாக்குவார்..
முதல் ரசவாதத்தை படிக்க இங்கே
சுட்டவும்.

நீயா நானா?

“குருவே அத்வைத கருத்துக்களை எனக்கு புகட்டினீர்கள். அதைவிட மேலனாது எது இருக்க முடியும்?.உங்களை விட்டு தொலைவில் இருக்கும் இடத்தில் என்ன கற்றுக்கொள்ள முடியும்?”

தம்பூராவை நித்தமும் மீட்டுவது போன்ற ஓங்கார இசையால் அந்த சூழல் நிரம்பி இருந்தது. முனிவர்களுக்கு எல்லாம் முனிவர் என போற்றப்பட்ட ரிபு கண்கலங்கி நிற்கும் தனது மாணவன் நிதாங்கனை தீர்க்கமாக பார்த்தார்...

“நிதாங்கா நான் கூறுவதை கேள், நானும் நீயும் வேறல்ல. நான் எப்பொழுதும் இருக்கிறேன்.
நீ வாழ்வியல் அனுபவம் பெறவே உன்னை உனது ஊருக்கு திரும்ப சொல்லுகிறேன்.
கலக்கமடையாதே உன்னை வெகுவிரைவில் வந்தடைவேன்.”.

குருவின் சொல்லுக்கு கட்டுப்பட்ட நிதாங்கன் ஊருக்கு திரும்பி தனது இயல்பு வாழ்க்கையில் ஈடுபட்டான்.

காலங்கள் சென்றது....


ஒரு நாள் சாலையில் நடந்துவந்து கொண்டிருந்தான் நிதாங்கன். மக்கள் கூட்டமாக கொண்டாட்டதுடன் வருவதை கண்டான். பெரிய மேள தாளத்துடன் மக்கள் நடனமாடி ஊர்வலமாக வந்து கொண்டிருந்தார்கள். ஊர்வலத்தின் கடைசியில் பட்டத்து யானையின் மேல் அரசன் அமர்ந்து ஒய்யாரமாக வந்துகொண்டிருந்தார்...

அரசனின் அழகையும் மக்களின் ஆர்ப்பரிப்பையும் ரசித்துக்கொண்டிருந்தான் நிதாங்கன்.

பின்னாலிருந்து ஒரு கை அவனை தோளை தொட்டது....

தனது ரசிக்கும் மனோபாவத்திலிருந்து கலைந்து திரும்பிப்பார்த்தான்.

அங்கே முகத்தில் சுருக்கத்துடன், அழுக்கடைந்த உடையும், கலைந்த கேசமுமாக ஒருவர் நின்றிருந்தார். ஏதோ கிராமத்திலிருந்து வரும் நபராக இருக்க வேண்டும்.
தனது உள்ளங்கையை புருவத்தின் மேலே வைத்து அரசனின் ஊர்வலத்தை பார்த்தவாரே கேட்டார்...
“தம்பீ.. அங்கே என்ன ஒரே கூட்டமா இருக்கு?”
அவரை பார்த்தவுடன் நிதாங்கனுக்கு ஏனோ ஒருவித ஈர்ப்பு ஏற்படவில்லை. கல்விஅறிவில்லாத நாட்டுபுரத்தானிடம் என்ன பேச என என்னினான்.
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி, பேச்சை வெட்டிவிட எண்ணினான்.

“அதுவா.. ராஜா யானையில் ஊர்வலமா போராரு...” என்றான் நிதாங்கன்.

“ஓஹோ..” என இழுத்தார் அந்த கிராமத்துக்காரர்.

“என்ன ஓஹோ? நான் சொன்னது உங்களுக்கு புரிஞ்சுதா?”.. என கேட்டான் நிதாங்கன்.

” ராஜா ...யானை.... புரியுது தம்பி ஆனா அதில எது ராஜா எது யானை?”

“என்னய்யா அதுகூடவா தெரியல?.. மேல இருக்கிறது ராஜா, கீழ இருக்கிறது யானை”

குதுகூலத்துடன் படபடவென கைகளை தட்டிய கிராமத்தான்...

“எனக்கு இப்பதான் தம்பி புரிஞ்சுது...எது ராஜா எது யானைனு புரிஞ்சுது:”..

இப்படியும் ஒரு மனிதனா என நினைத்தவாறே வேறுபக்கம் திரும்பினான் நிதாங்கன்..

”தம்பி ஒரு சந்தேகம்..”

மீண்டும் அவர் அழைக்கவே பொறுமை இழந்து திரும்பி என்ன என்பதை போல பார்த்தான்..

“யானை, ராஜா எல்லாம் புரியுது தம்பி. மேல கீழனு சொன்னீங்களே அது என்ன?”

தன்னிடம் வம்பு செய்ய வந்திருக்கிறார் என நினைத்து தானும் அவரை கலாட்டா செய்ய நினைத்தான் நிதாங்கன்..

எதிர்பாராத தருணத்தில் திடீரென அவரின் முதுகில் ஏறி காலை தோள்பட்டையில் போட்டு குதிரை சவாரி செய்வதை போல அமர்ந்தான்.

“நீ என் கீழ இருக்க. உனக்கு மேல நான் இருக்கேன். இத்தான் மேல் கீழ். புரியுதா?”

“மேல் கீழ் புரிஞ்சுது தம்பி.... ஆனா..”

“என்னையா ஆனா?”.. அவரின் தோள்பட்டையிலிருந்து இறங்காமலேயே கேட்டான் நிதாங்கன்..

“நீ - நான் அப்படினு சொன்னீங்களே அப்படின்னா என்ன?”

“அ...ஹா... என்னது என்ன கேட்ட?”

“நீ நான் அப்படீனு பேசும்போது சொன்னீங்களே அப்படீனா என்ன? முதல்ல 'நான்' அப்படினா என்னனு சொல்லுங்க.. அப்பறம் நீ பத்தி சொல்லுங்க”

கேள்வியின் ஆழம் புரியாமல் சிந்திக்க துவங்கினான் நிதாங்கன்...

“நான் என்பது என்ன? நிதாங்கன் என்பதா.... இல்லை அது எனது பெயர்..
இந்த உடலா? இல்லையே.. தூக்கத்தில் நான் அதை உணருவதில்லையே.
அப்பொழுது நான் என்பது ........?

ஒரு ஒளிக்கீற்று அவனுக்குள் ஒளிர்ந்தது...

உணர்விற்கு வந்தவனாக முன்புறம் இருந்த கிராமத்தானை பார்த்தான். அவர் இவனை ஒருவித குழப்பத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான்..

அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து...கண்ணீர்வடித்தான்...

“ஐயா என்னக்கு எண்ணிலா தெளிவை கொடுத்துவிடீர்கள். நீங்கள் எனது குரு ரிபுவை தவிர வேறு யாராகவும் இருக்க வாய்ப்பில்லை. உங்களிடம் இருக்கும் பொழுது தான் இத்தகைய சத்தியத்தை உணர்ந்திருக்கிறேன்...”

அவனை தூக்கி தன்னுடன் அனைத்துக்கொண்டார் மகரிஷி ரிபு.
அன்று முதல் நிதாங்கனுக்கு அனுபவ பூர்வமான அத்வைத்த பாடம் துவங்கியது...

-----------------------------ஓம்---------------------------------------

குரு எப்பொழுதும் கற்றுக்கொடுப்பதில்லை.
தனது வாழ்வை அனைவருக்கும் போதிக்கிறார்.
அங்கே ஞானம் பிறக்கிறது.

 

ஞானிக்கும் சித்தருக்கும் என்ன வித்தியாசம்?


இளஞ்சூரியன் தனது கதிர்களை சுருக்கிக்கொண்டிருக்கும் மாலை வேளை. தனது சிஷ்யர்களுடன் பயணப்பட்டு கொண்டிருந்தார் பிரபுலிங்கா எனும் ஞானி.
கோகர்ணம் எனும் அழகிய நகரத்தை அடைந்தார்கள்.


கடற்கரையோரம் அமர்ந்து சிஷ்யர்களுடன் சத்சங்கமித்தார் ஞானபுருஷர். தனது சிஷ்யர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவரிடமிருந்து விரிவானதும் ஆழமானதுமான பதில்கள் வெளி வந்தவண்ணம் இருந்தது.


அவரின் முதன்மை சிஷ்யன் பணிவுடன் அவர் முன்வந்து கேள்வி கேட்க துவங்கினான்..

“சத்குரு பல சித்துகள் கைவரப்பட்ட சித்தர் கோரக்நாத் இந்த ஊரில் வாழ்ந்து வருகிறார். அவரின் ஆன்மீக நிலைக்கும் உங்கள் ஆன்மீக நிலைக்கும் என்ன வித்தியாசம்?”

“அனந்தா... எனக்கு எப்படி அவரின் நிலை தெரியும்? ”...தனது உடலை சுட்டிகாட்டி தொடர்ந்தார் ஞானி, “...இதற்கு இதை தவிர அன்னியமான வஸ்து கிடையாது”.

சிஷ்யனுக்கோ அவரின் பதில் திருப்தியை கொடுக்கவில்லை. குருவுக்கு தெரியாமல் சித்தர் கோரக்நாதை சந்தித்து தனது குரு சொன்ன கருத்துக்களை கூறினான்.

எனது அருமை தெரியாமல் உனது குரு அவ்வாறு கூறி இருக்கலாம். நாளை அவர் இருக்கும் இடத்திற்கு நான் வந்து சந்திக்கிறேன். அப்பொழுது அவர் என்னை பற்றி அவர் மட்டுமல்ல அனைவரும் புரிந்துகொள்வீர்கள்” என்றார் கோரக்நாத் சித்தர்.


அதிகாலை நேரம் தனது சிஷ்யர்களுடன் தியானத்தில் இருந்தார் ஞானி பிரபுலிங்கா... சித்தர் அவரின் இருப்பிடத்திற்கு வந்தார்...


கண்களை திறந்து பார்த்த ஞானி அவரை வரவேற்று அமரவைத்தார்.அவர் வந்த காரணத்தை கேட்டார்.

“எனது பெயர் கோரக்நாத், என்னை பற்றி தெரியாது என உங்கள் சிஷ்யர்களிடம் சொன்னீர்களாமே? என்னை பற்றி கூறவே வந்திருக்கிறேன். அஷ்டமா சித்தியை கைவரப்பட்டவன் நான். எனது உடலை காயகல்பமாக்கி இருக்கிறேன்...” என கூறியவாரே தனது இடுப்பில் வைத்திருந்த வாளை எடுத்து தனது மார்ப்பில் குத்தினார்....


அனைத்து சிஷ்யர்களும் அந்த பயங்கரமான செயலால் அதிர்ச்சி அடைந்து எழுந்து நின்றார்கள்...
ஆனால் கோரக்நாத் கையில் இருந்த வாள் வளைந்து போயிற்று. அவர் உடல் காயகல்பம் ஆனதால் வாளைவிட கடினமாக மாறியிருந்தது.

கோரக்நாத் ஞானி பிரபுலிங்காவை பெருமையுடன் பார்த்தார்...அவர் பார்வையில் உன்னால் இதுபோல முடியுமா என்று கேட்பது போல இருந்தது.

தனது சிஷ்யர்களிடம் வாள் கொண்டு வர சொன்னார். அதை கோரக்நாத்திடம் கொடுத்து தனது உடலில் பாய்ச்ச சொன்னார்....


முழுவேகத்துடன் வாள் வீசினார் கோரக்நாத்.... வாள் பிரபுலிங்காவின் உடலில் புகுந்து மறுபுறம் வெளியே வந்தது...
மெல்ல வாளை சுழற்றினாலும் காற்றில் சுழலுவதை போல சுழன்றது...அவர் உடல் அங்கு இருந்தாலும் வாள் அதை தொட முடியவில்லை...


ஞானி பிரபுலிங்கா மெல்ல புன்புறுவலுடன் கூறினார்....”சித்த நிலை என்பது உனது சித்தத்துடன் நின்றுவிடுவது...ஞான நிலை என்பது நான் எனும் அகந்தையை வேறுடன் எடுத்து சித்தத்தை கடந்து சுத்த வெளியில் இருக்கும் தன்மை... ஒருவன் ஞானம் அடைந்ததும் ஆகாசத்தை போல ஆகிவிடுகிறான்..அவனை எதுவும் தடுக்கவோ அசுத்தப்படுத்தவோ முடியாது...ஞானி எல்லை அற்றவன்...சித்தன் உடல் எனும் எல்லைக்கு உட்பட்டவன்..”

சித்தர் கோரக்நாத் ஞானியின் கால்களில் பணிந்தார்...தனக்கு ஞானத்தை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்...

சத்குரு பிரபுலிங்கா பிரம்ம சொரூபத்தை அவருக்கு அளிக்கதுவங்கினார்...


----------------ஓம்---------------

ஆன்மீகத்தை தேடிவரும் பக்தர்கள் அனைவரும் சரியான பாதையில் செல்வதில்லை.
ஞானத்தை தேடாமல் சிலர் காட்டும் போலி வித்தையில் மதிமயங்கி மாயத்தில் விழுகிறார்கள்.

வாயிலிருந்து லிங்கம் எடுப்பவருக்கும் , கடன் தொல்லை நீங்க தீட்சை தருகிறேன் என விளப்பரம் செய்பவர்களிடம் செல்லும் மக்கள் உண்மை நிலையை விளக்கும் ஞானிகளிடன் செல்வதில்லை. அந்த ஞானி சமாதி அனதும் அவர் சமாதியில் தூமம் காட்டும் இழிநிலையிலேயெ இருக்கிறார்கள்..

உள்ளத்தில் உள்ளே உளபல தீர்த்தங்கள் என திருமூலர் கூறியவாக்கை கருத்தில் கொண்டு பிரம்ம ஞானத்திற்கு பாடுபடுவோம்...

பிரம்ம ஞானத்தை தேடு ...


கங்கைக்கரை பகுதி.....மெல்லிய தேவலோக இசை போன்ற பாடல் காற்றில் கசிந்து வந்தது....

ஒளிரும் தேகமும் ஞானம் ததும்பும் முகமுடன் பிரம்ம ஞானி அமர்ந்திருந்தார்.
அவரின் ஆசனத்தை சுற்றி சிஷ்யர்களும் பொதுமக்களும் ஆனந்தமயமான நிலையில் இருந்தனர்.

இறைநாமத்தை சங்கீதமாக ஒரு குழு இசைத்துக் கொண்டிருந்தது.
இவை அனைத்தையும் மெளன சாட்சியாக ரசித்துக்கொண்டிருந்தாள் கங்கை.. தேவலோகத்திலிருக்கும் அனைவரும் தங்கள் இடத்தை விட்டு அங்கு வந்துவிடலாம் என எண்ணும் அளவிற்கு தெய்வீக சூழ்நிலையை அங்கு காண முடிந்தது.

தன்முன்
னே ஓர் உருவம் நிழலாடுவதை கண்ட ஞானகுரு கண்களை திறந்தார். எதிரில் பட்டுவேஷ்டி அணிந்து உடல் முழுவதும் சந்தனம் பூசிய நிலையில் ஒருவர் வணங்கி நின்றார். கைகளில் தங்கத்தால் ஆன தட்டும் அதில் வைரம் வைடூரியம் என விலைமதிக்க முடியாத பொருட்கள் நிறைந்து வழிந்தது..

பணக்கார தோரணை கொண்ட அந்த மனிதர் ஞானகுருவை பார்த்து..” உலக மக்களை உயர்நிலைக்கு அழைத்து செல்லும் குருவே...உங்களிடம் எத்தனையோ முறை பிரம்ம ஞானத்தை
உபதேசிக்க கேட்டேன் ஆனால் நீங்கள் மனம் இளகவில்லை. என்னிடம் இருக்கும் விலைமதிக்க முடியாத செல்வத்தை உங்கள் காலடியில் சமர்ப்பிக்கிறேன். எனக்கு பிரம்ம ஞானத்தை உபதேசியுங்கள்...” என கேட்டார்.


ஞான குரு மெல்ல எழுந்து தனது காவி துணியில் அனைத்து செல்வங்களையும் போட சொன்னார். அவரின் காவித்துணியில் அனைத்தும் போடப்பட்டதும் அதை மூட்டையாக கட்டி, தலைக்கு
மேல் உயர்த்தி யாரும் எதிர்பாராத வண்ணம் கங்கையில் எறிந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத பணக்காரர் கங்கை நீரில் பாய்ந்து அந்த மூட்டையை பிடிக்க நீந்தினார்.


கங்கையின் வேகத்திற்கு மூட்டையும் அவரும் அடித்துச்செல்லப்பட்டார்கள்.
அதுவரை கண்களை மூடி அமர்ந்த்திருந்த சிஷ்யர்கள் நீரில் செல்வந்தர் குதித்த சப்தம் கேட்டு கண்களை திறந்து பார்த்தனர்.

குழப்பம் கொண்ட சிஷ்யர்கள் குருவிடம் கேட்டார்கள்...”குருதேவா என்ன நடக்கிறது? அவர் கங்கையில் குதித்து என்ன தேடிக்கொண்டிருக்கிறார்..?”


தனது ஆசனத்தில் அமந்த ஞான குரு புன்புறுவலுடன் சிஷ்யர்களை பார்த்து கூறினார்...

”அவர் பிரம்ம ஞானத்தை தேடுகிறார்”


----------------------ஓம்------------------------------------------------


நம்மில் பலர் ஆன்மீக உயர்வு நிலையை பணத்தை வழங்குவதன் மூலம் பெறலாம் என எண்ணுகிறார்கள்.

என்னிடத்தில் பலரும் தீட்சை தாருங்கள் அதற்காக நன்கொடை தருகிறோம் என கேட்டதுண்டு.
அப்பொழுது ஞானகுரு கதை எனக்கு நினைவு வருவதுண்டு.

செல்வந்தருக்கு விலைமதிக்க முடியாத செல்வம் பிரம்ம ஞானத்திற்கு ஈடாக தெரிந்ததால்
குருவும் அது பணக்காரனின் பிரம்ம ஞானம் என குறிப்பிடுகிறார்.

கடவுளை பார்க்க கோவிலில் “சிறப்பு” நுழைவாயில் வழியாக செல்லுவதிலிந்து ஆரம்பிக்கிறது நமது ஆணவ செருக்கு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

சிவன் எங்கே இருக்கிறார்?


ஆலமரத்தின் மேல் ஒரு குயில் மெல்ல கூவியது...

மரத்தின் அடிப்பகுதியில் குருவின் முன் அமர்ந்திருந்தான் விஸ்வநாத பிரம்மச்சாரி.

அவனது கண்கள் கலங்கி இருந்தன... தனது கைகளால் குருவின் கால்களை பற்றியவாறே பேச துவங்கினான்...”குருவே உங்களிடமிருந்து வேத சாஸ்திரத்தையும் பிரம்ம சூத்திரத்தையும் முழுமையாக கற்றுகொண்டேன். உண்மை பொருளை கூறும் அனைத்து கருத்துக்களையும் நீங்கள் எனக்கு விளக்கியுள்ளீர்கள். உங்களிடம் பணிவிடை செய்வதிலும் , உங்களுடன் இருப்பதிலும் எனக்கு நிகரில்லாத ஆனந்தம் கிடைக்கிறது. இப்படி இருக்க என்னை ஏன் வேறு இடத்தில் இருக்கும் ஒரு ஞானியை குருவாக ஏற்க கட்டளை இடுகிறீர்களே. இது நியாயமா?”..

அவனை மெல்ல தனது கரத்தால் தூக்கி குரு அவனை தீர்க்கமாக பார்த்தார்..”விஸ்வநாதா..! சாஸ்திர ஞானத்தை மட்டும் தான்
என்னால் உனக்கு வழங்க முடியும். உனக்கு பிரம்ம ஞானத்தை வழங்க குரு ஒருவர் காத்திருக்கிர்றார் . காசிக்கு அருகில் இருக்கும் வனத்தில் வசிக்கும் அவரை கண்டு ஞானம் அடைவாயாக...வளர்ச்சி அடையும் வரைதான் புழு கூட்டில் வசிக்க முடியும். அதன் பின் வண்ணத்து பூச்சியாக மாற கூட்டை கடந்து சென்றாக வேண்டும்...சென்று வா”...என்றார் குரு.


பிரிய மனமில்லாமல் தனது குருநாதரிடமிருந்து விடைபெற்றான் விஸ்வநாத பிரம்மச்சாரி..



காசியை அடைந்து அங்கு அவன் பெயரில் வீற்றிருக்கும் விஸ்வநாதரை தரிசித்துவிட்டு , நகரின் வெளியே இருக்கும் வனத்தை நோக்கி நடந்தான்.

வனத்திற்கு உள்ளே இரு நாட்களாக நடந்தும் யாரும் கண்களுக்குதட்டுபடவில்லை. தனது குரு அனுப்பியதன் நோக்கம் புரியாமல் குழப்பம் மேலோங்க பயணத்தை தொடர்ந்தான். பசியும் தாகமும் அவனை சோர்வடைய செய்தது. வழியில் தென்பட்ட தடாகத்தில் நீர் அருந்த குனிந்தான்.

அந்த தடாகத்தின் மேல்பரப்பில் அருகில் இருந்த கோவில் கோபுரம் நிழலாகதெரிந்தது... நடுக்காட்டில் கோவில் இருப்பதை கண்டு ஆச்சரியத்துடன் அதை அடைந்தான்..

கோவில் வாசலை அடையும் முன் உள்ளே இருந்து ஓர் குரல் பேச துவங்கியது.....
”வா விஸ்வநாத உனக்காகத்தான் காத்திருக்கிறேன்...உனது குரு என்னை பார்க்கவே அனுப்பினார்..”

தனது ஞான குருவை காணும் ஆவலில் கோவிலின் உள்ளே சென்றான் விஸ்வநாதன்.

அங்கே கண்ட காட்சி அவனை மாபெரும் அதிர்ச்சி அடைய செய்தது...


பரதேசி போன்ற தோற்றம் கொண்ட ஒருவர்...கருவறையில் இருக்கும் சிவலிங்கத்தின் மேல் தனது கால்களை வைத்து ஆட்டியவாறு தலையில் கைகளை வைத்து கொண்டும் படுத்திருந்தார்.

விஸ்வநாதனுகோ கோபத்தை கட்டுபடுத்த முடியவில்லை. “எனது குருஉங்களை பற்றி உயர்வாக கூறி அனுப்பினார். நீங்கள் அவர் சொன்னதற்கு நேர்மாறாக அல்லவா இருக்க்கிறீர்கள். ஐயா சற்று சிவன் மேல் இருக்கும் காலை எடுத்து கீழே வைக்க கூடாதா?” என்றான்.

அந்த பரதேசி சற்றும் அவனது கருத்துக்களை காதில் போட்டுக்கொள்ளாமல்அவனை பார்த்து கூறினார்..”ஓ நீ அவ்வளவு பக்திமானா? உனக்குவேண்டுமென்றால் எனது கால்களை எடுத்து வேறு இடத்தில் வை. என்னால் கால்களை எடுக்க முடியாது..” என்றார்.

கோபத்தின் உச்சகட்டத்திற்கு சென்ற விஸ்வநாதன் , அவரின் கால்களை பற்றி சிவலிங்கத்தின் மேலிருந்து எடுத்து வேறு இடத்ததிற்கு மாற்ற முயற்சிசெய்தான்.
கால்களை எங்கு வைத்தாலும் அங்கே ஓர் சிவலிங்கம் முளைத்தது...

பல இடங்களில் மாறி மாறி வைத்தான்...அனைத்து இடத்திலும் சிவலிங்கம்தோன்றின...

கடைசியல் முடிவுக்கு வந்தவனாக...

தனது தலையில் அவரின் கால்களை வைத்து கொண்டான்...

தானே சிவமானான்...

----------------------------------ஓம்-----------------------------
திருவடி ஞானஞ் சிவமாக்கு விக்குந்
திருவடி
ஞானஞ் சிவலோகஞ் சேர்க்குந்
திருவடி
ஞானஞ் சிறைமல மீட்குந்
திருவடி
ஞானமே திண்சித்தி முத்தியே.
திருமந்திரம்
- 1598

ஞானகுருவின் திருவடி நம்மை முழுமையான பரப்பிரம்ம நிலைக்கு கொண்டுசெல்லும். வேத நூல்களோ அல்லது தத்துவமோ எட்ட முடியாத எல்லையை குருவின்கருணை எளிதில் எட்டிவிடும்.

பாவம் சிவன்

By M.Mukarji vijayakumar


சிவனுக்கு எத்தனை கண்? இது தெரியாதா? மூன்று கண் என்று உடனே பதில் சொல்பவர்கள் சற்றே மன்னிக்க வேண்டும். கவி காளமேகத்தின் கணக்குப்படி சிவனுக்கு உள்ளது அரைக் கண் தானாம்.
எப்படி? காளமேகம் சொல்கிறார். சிவனின் உடலில் சரி பாதி உமையம்மை பிடித்துக் கொண்டிருக்கிறாள். எனவே மூன்றில் பாதி ஒன்றரைக் கண் உமையுடையது. மீதி உள்ளதிலாவது சிவனுக்கு உரிமை உண்டா? இல்லையாம். அதிலும் ஒரு கண் கண்ணப்பனுடையது. மீதி அரைக் கண் தான் சிவனுககுச் சொந்தமானது என்று வாதிடுகிறார் அவர்.
முக்கண்ணன் என்றரனை முன்னோர் மொழிந்திடுவர்
அக்கண்ணற் குள்ளது அரைக்கண்ணே-மிக்க
உமையாள்கண் ஒன்றரைமற் றூன்வேடன் கண்ணொன்று
அமையும் இதனாலென்று அறி.
காளமேகமாவது நகைச்சுவைப் புலவர் என்று பேர் வாங்கியவர். அப்பரடிகள் இருக்கிறாரே! அவர் இளமையில் சமணத்தில் இருந்து முதுமை வந்தபின் சைவத்தைச் சரணடைந்தவர். அவரது பாடல்களில் தன் பழைய வாழ்க்கை பற்றிய கழிவிரக்கமும் சிவபெருமானின் பெருமைகளும் தான் காணப்படும்.  அவர் கூட சிவனின் மூன்று கண்களை வைத்துக் கொண்டு கிண்டல் செய்கிறார்.
இன்றரைக் கண்ணுடை யாரெங்கு மில்லை யிமயமென்னும்
குன்றரைக் கண்ணன் குலமகட் பாவைக்குக் கூறிட்ட நா
ளன்றரைக் கண்ணுங் கொடுத்துமை யாளையும் பாகம்வைத்த
ஒன்றரைக் கண்ணன்கண் டீரொற்றி யூருறை யுத்தமனே. (தேவாரம் 4-86-7)
உலகத்தில் எல்லோருக்கும் இரண்டு கண் தான் உண்டு. சில பேர் ஒரு கண் பார்வையை இழந்தவர்களாக இருந்தால் அவர்களை ஒற்றைக் கண்ணன் என்று சொல்வார்கள். ஆனால் ஒரு கண்ணும் இல்லாமல் இரண்டு கண்ணும் இல்லாமல் ஒன்றரைக் கண் உடையவர்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இதோ இருக்கிறார் பாருங்கள். அவருக்கு முதலில் மூன்று கண் தான் இருந்தது. இமயமலையின் அரசனான இமவானின் மகளை மணந்து கொண்டபோது தன் உடம்பில் பாதியை உமா தேவிக்குக் கொடுத்து விட்டார். அதனால் சிவனுக்கு ஒன்றரைக் கண் தான் மிச்சம் என்கிறார் நாவுக்கரசர்.
அண்மைக் காலப் புலவரான கோபால கிருஷ்ண பாரதி பாடுகிறார்,
அந்தமில் நடனம் செய்யும் அம்பல வாணனே
அருமையாகவே பெற்று
ஒருமையுடன் வளர்த்த
தந்தை தாய் இருந்தால்
இவ்வுலகத்தில் உமக்கிந்த தாழ்வெல்லாம்
வருமோ ஐயா
கல்லால் ஒருவன் கடந்தடிக்க உடல் பதைக்க
காலின் செருப்பால் ஒரு வேடன் எதிர்த்து உதைக்க
வில்லினால் ஒருவன் வந்தடிக்க
உமது திருமேனி என்னமாய் நொந்ததோ
கூசாமல் இடைவன் கைக்கோடாரியால் வெட்ட
கூட்டத்தில் ஒருவன் பித்தா பேயா எனத் திட்ட
வீசி மதுரை மாறன் பிரம்பால் அடிக்க
அந்த வேளை யாரை நினைந்தீரோ ஐயா
சீலமில்லாதொரு பெண் காரியுமிழலாச்சே
சேர்ந்தவளும் தலைமீதேற எளிதாய்ப் போச்சே
பாலகிருஷ்ணன் இதைப் பார்க்கும்படியாசேசே
பாலருகில் எங்கணும் பார்க்கில் இதுவே பேச்சே
பாவம் சிவன். இந்தப் புலவர்கள் வாயில் அகப்பட்டுக் கிண்டலுக்கு ஆளாகி, தன் அரைக் கண்ணைக் கசக்கிக் கொண்டு நிற்கிறார்.

September 01, 2011


தவமொன்று மில்லையொரு சாதனையு மில்லையடா, சிவமொன்றே யுள்ளதென சிந்தைசெய்தார் போதுமடா. --- பாரதியார்

அர்த்தநாரீஸ்வரர் கோவில்,திருச்செங்கோடு



திருசெங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் ஒரு பாடல் பெற்ற ஸ்தலம்.சம்பந்தர் இந்த சிவ ஸ்தலம் பற்றி பதிகம் பாடியுள்ளார்.அருணகிரிநாதரும் செங்கோட்டு வேலவன் குறித்து பதிகம் பாடியுள்ளார்.நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது திருச்செங்கோடு ஈரோடில் இருந்து 18கி.மீ தொலைவில் உள்ளது. நமகல்லில் இருந்து 32 கி.மீ தொலைவில் உள்ளது . சேலத்தில் இருந்து 27 கி.மீ தூரத்தில் உள்ளது. அடிவாரத்தில் இருந்து கோவில் வரை 1200 படிகள் கொண்ட நடை பாதை உள்ளது. வாகனங்கள் மேலே செல்வதற்கு மலை பாதையும் உள்ளது .சுமார் 2 .5 கி.மீ உள்ளது இந்த மலை பாதை .இந்த கோவிலில் சிவன் ஆண் பாதியாகவும் பெண் பாதியாகவும் காட்சி தருகிறார்.வலப்பக்கம் பார்வதியாகவும் இடப்பக்கம் சிவன் ஆகவும் காட்சி தருகிறார்.அதனால் இறைவனுக்கு உமையொருபாகன் என்ற காரண பெயரும் உண்டு.இங்குள்ள மூலவர் சிற்பம் உளி படாத சுயம்பு சிற்பம் என்று சொல்லபடுகிறது.தலையில் ஜடாமகுடம் தரித்து, பூர்ண சந்திரன் சூடி, கழுத்தில் ருத்ராட்சம், தாலி அணிந்து, கையில் தண்டாயுதம் வைத்திருக்கிறார். அம்பிகையின் அம்சமாக உள்ள இடது பாக காலில் கொலுசு உள்ளது. சிவன், சக்தி சேர்ந்த வடிவம் என்பதால் வலதுபுறம் வேட்டியும், இடப்புறம் சேலையும் அணிவிப்பர். மூலவரின் காலடியில் இருக்கும் தேவதீர்த்தம் எக்காலத்திலும் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கும். மூலவரை தரிசிக்க வருபவர்களுக்கு இந்த தீர்த்தம் வழங்கப்படுகிறது.படிக்கட்டுகள் வழியே மலைக்குச் செல்லும் வழியில் பாறையில் செதுக்கப்பட்டுள்ள நாகர் சந்நிதி மிகவும் பிரசித்தி பெற்றது. நாக தோஷங்கள் நீங்குவதற்காக இங்கு பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள்.ஆதிசேஷன் மஹாவிஷ்னு ஆகியோர் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டுள்ளனர். ஆதிகேசவப் பெருமாள் என்ற பெயரில் மஹாவிஷ்னு தனிக்கோயிலில் காட்சி தருகிறார். வைகாசி பிரம்மோற்ஸவத்தின் போது இவருக்கு தனியே கொடியேற்றி 10ம் நாளில்திருக்கல்யாணமும்பின் தேரோட்டமும் நடக்கும். சிவராத்திரியன்று இரவில் இவருக்கு 4 கால பூஜை நடப்பது விசேஷம். ஏகாதசி நாட்களில் கருடசேவை சாதிப்பார்.இந்த கோவிலில் ஆதி சேஷனுக்கு தனி சன்னதி உள்ளது. தவிர , ஆதிகேசவ பெருமாளுக்கு ஒரு சன்னதி ,பெருமாள் சன்னதி முன் கருடாழ்வார் மற்றும் ஆஞ்சநேயர் உள்ளார். மீனாக்ஷி அம்மன்,குபேர லக்ஷ்மி,விஷ்ணு துர்கா,நரசிம்மர்,மல்லிகார்ஜுனர், ஆகியோருக்கும் இங்கு சன்னதி உள்ளது. நாகலிங்கம் என்று நாகேஸ்வரருக்கு ஒரு தனி சன்னதி உள்ளது. கோவில் மிகவும் சுத்தமாக உள்ளது. மலை மேலிருந்து திருச்செங்கோடு நகரின் அழகிய தோற்றம் காணலாம். நிறைய மண்டபங்கள் உள்ளது .பக்தர்கள் அமர்ந்து இளைப்பாற்ற வசதியாக உள்ளது. கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு கோவில்.
இந்த வார சிறப்புக் கட்டுரை
 
வாசக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் ஏற்கனவே அறிவித்திருந்தபடி - வேலைப் பளு காரணமாக வழக்கமாக பதிவுகள் இட முடியவில்லை. இடையில் இந்த வாரத்தில் , மார்ச் 31 ஆம் தேதி எனது பிறந்த நாள் வந்து இருந்தது. FACEBOOK இல் , மின்னஞ்சலில்  வாழ்த்து செய்தி அனுப்பி இருந்த அத்துணை அன்பு உள்ளங்களுக்கும் என் இதயங்கனிந்த நன்றி.. 

அப்புறம், வேர்ல்ட் கப்பில் இந்தியா வெற்றி வாகை சூடியது , நெஞ்சை விட்டு அகலாத இனிய சம்பவமாக மனதில் தங்கி இருந்தது. கோடானு கோடி ரசிகர்களின் எதிர்பார்ப்பை சுபமாக்கித் தந்த இந்திய அணி இன்னும் வர விருக்கும் எதிர் காலத்தில் பலப்பல வெற்றிகளை குவிக்க , தேச கவுரவத்தை காக்க வாழ்த்துவோம்..

இன்று , நாம் பதிவிட இருப்பது - மகாலிங்க மலையைப் பற்றி இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களை. எனது சொந்த ஊர் கிராமம் - தாணிப்பாறையில்  இருந்து அதிக பட்சம் 15 கி. மீ. தான். பள்ளிப் பருவ நாட்களில் ,  தாணிப்பாறையில் தண்ணீர் ஓடுகிறது என்றால் வீட்டில் இருந்து சைக்கிளிலேயே நண்பர்களுடன் சென்று வருவோம்.  சலிக்க சலிக்க சுற்றி இருக்கிறோம். அப்போது எல்லாம், இவ்வளவு விஷயங்கள் , அதன் அருமை பெருமைகள் தெரியாது.

என் அனுபவத்தில் - சதுரகிரியும், திருவண்ணாமலையும், எத்தனை முறை சென்றாலும் , ஒவ்வொரு முறையும் அதன் பிரம்மாண்டத்தை உணர்த்துவதில் தவறியதே இல்லை.    

இன்று மகாலிங்க மலையைப் பற்றி - நீங்கள் அறியாத சில சுவாரஸ்யமான தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

நோய் தீர்க்கும் மலை: சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர்.

திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர்.
[theerththam.jpg]

தாணிப்பாறை அடிவாரம் - கருப்பர் சந்நிதி அருகே உள்ள தீர்த்தம் 

* மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை "சஞ்சீவி மலை' என்கின்றனர்.

*சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது.
*ஆடி அமாவாசை முக்கிய விழா. தை அமாவாசை, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, மார்கழி முதல் நாள் ஆகிய நாட்களிலும் அதிக கூட்டம் இருக்கும்.


* பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது.


*இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்துள்ளார்கள்.


*மகாலிங்கம் கோயிலின் வடக்கே "ஊஞ்சல் கருப்பண சாமி' கோயில் உள்ளது.
* சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் 1 மணிக்கு அபிஷேகம் துவங்கும்.


* ஆடி அமாவாசை தவிர மற்ற அமாவாசை நாட்களில் தேனும், தினைமாவும் பிரசாதமாக தரப்படுகிறது.


* சதுரகிரி மலைக்கு மின்சார வசதி கிடையாது. ஜெனரேட்டர் பயன்படுத்துகின்றனர்.


இருப்பிடம்: 
மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் பஸ்களில் சென்றால், தாணிப்பாறை விலக்கில் இறங்கலாம். இங்கிருந்து 7 கி.மீ., தூரம் சென்றால் சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை வரும். அங்கிருந்து மலை ஏறி, 10 கி.மீ., நடந்தால் மகாலிங்கத்தை தரிசிக்கலாம்.


அல்லது , மதுரையிலிருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் - செங்கோட்டை செல்லும் பஸ் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் , செங்கோட்டை செல்லும் பஸ்ஸில் ஏறி - கிருஷ்ணன் கோவில் நிறுத்தத்தில் இறங்கி - அங்கிருந்து வத்திராயிருப்பு செல்லுங்கள். ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் பேருந்து வசதி உள்ளது. 

அங்கிருந்து தாணிப் பாறைக்கு -  மினிபஸ் அல்லது ஆட்டோவில் சென்று விடுங்கள்.

திறக்கும் நேரம்: 
காலை 6- 12 மணி, மாலை 4- இரவு 9 மணி. விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடும்.போன்: 98436 37301, 96268 32131    


மலைக்கு மேலே - சாப்பாடு பற்றிய கவலை வேண்டாம். எந்த நேரமும், உங்கள் வயிறை குளிரவைக்க " கஞ்சி மடம் '   உள்ளது. உங்களுக்கு குறைந்த பட்சம், கஞ்சியோ , கூழோ , பழைய சோறோ - நிச்சயம் கிடைக்கும். 24 மணி நேரமும் என்பதுதான் விசேஷம்.  மிகப் பெரிய குழுவாக சென்றால், முன்கூட்டியே சொல்லி விடுங்கள். சுடச்சுட சாதம் கிடைக்கும்.

சதுரகிரி
தல வரலாறு : சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள்.

வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு "சடதாரி' என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.

சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான்.


சிவபெருமான் அவனை தேற்றி, "" நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன்,'' என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி "மகாலிங்கம்' என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம்.
சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 

தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து  மலையேற வேண்டும். 
மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன.

இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம். சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம். அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு. 


இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும். இது ஆபத்தான இடம். இதன் பவித்திரம் உணராமல் இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது. இதை ஒட்டிய குகையில் உள்ளே ஒரு சிறிய லிங்கம் உள்ளது. இதை நீங்கள் காணும்போது , மெய் சிலிர்க்கும் அனுபவம் உங்களுக்கு ஏற்படுவது உறுதி. 


கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது. கொஞ்சம் இளவட்ட ஆளுங்க போக முடியும். ரொம்பவே செங்குத்தான பாதை. அதனால் , அனைவரும் முயற்சிக்க வேண்டாம்.



இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம். சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது. இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள். பின்னர், பச்சரிசிப்பாறை, வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோயிலைத் தரிசித்து, மகாலிங்கம் கோயிலை அடையலாம். மலையிலுள்ள 10 கி.மீ. தூரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.



இரட்டை லிங்கம்: ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன் மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. அவரது மனைவி ஆண்டாள். பெருமாள் பக்தை. இவர்கள் இருவரும், தான் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர். இதற்கு விடை காண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்தனர். இவர்கள் முன்பு சிவன் தோன்றினார்.

""சிவபெருமானே! தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள், என்பதை என் மனைவியிடம் தெரிவிக்க வேண்டும்,''என வேண்டினார் வியாபாரி. சிவன் ஆண்டாளிடம் சென்றார். அவளோ, ""நான் உம்மை நினைத்ததே இல்லை. பெருமாளை நினைத்தே தவம் செய்தேன்,'' என்றாள். அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது.



பிலாவடி கருப்பு: வணிகர் ஒருவருக்கு சிவன் கோயில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால், பணம் போதவில்லை. பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. முனிவர் ஒருவர், ""சதுரகிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும்,'' என்றார்.

வணிகரும் சதுரகிரி வந்து காலங்கிநாதரை தரிசித்தார். அவர் அங்குள்ள சில மூலிகைகளைக் கொண்டு உலோகங்களை தங்கமாக்கி அவனிடம் கொடுத்தார். மீதமிருந்த தங்கத்தையும், தங்கம் தயாரிக்க பயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில் கொட்டி பாறையால் மூடினார். இந்த கிணற்றுக்கு காவலாக கருப்பசுவாமியை நியமித்தார். இவரது சன்னதியில் மூன்று காய்களுடன் கூடிய பலாமரம் உள்ளது. இதனால், இவரை "பிலாவடி கருப்பர்' என அழைத்தனர். இந்த மரத்தில், ஒரு காய் விழுந்து விட்டால் இன்னொரு காய் காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாக நடக்கிறது.


பெரிய மகாலிங்கம்: நடுக்காட்டு நாகர் சன்னதியை அடுத்து, லிங்க வடிவ பாறை உள்ளது. இதை "பெரிய மகாலிங்கம்' என்கின்றனர். பெரிய மகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம் உள்ளது. சாதாரண நாட்களில் இதற்கு மட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கிறது. சிவராத்திரியன்று மட்டும் பெரிய லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

 

தவசிப்பாறை: மகாலிங்கம் கோயிலிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை (தபசுப்பாறை) அடையலாம். இது கடல்மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ளது. கோயிலில் இருந்து தவசிப்பாறை செல்ல குறைந்தது 2 மணி நேரமாகும். இது மிகவும் சிரமமான பயணம். பாறைக்கு செல்லும் வழியில் "மஞ்சள் ஊத்து' தீர்த்தம் உள்ளது.
[p91a.jpg]

தவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய்யும் குகை உள்ளது. குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு செல்லும்படியான துவாரம் உள்ளது. உள்ளே சென்ற பிறகு, பத்து பேர் அமர்ந்து தியானம் செய்ய வசதியிருக்கிறது. இதனுள் ஒரு லிங்கம் உள்ளது. மன திடம் உள்ளவர்கள் மட்டுமே இந்த குகைக்குள் சென்று லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும். இந்த குகையில் தான் 18 சித்தர்களும் தினமும் சிவபூஜை செய்வதாக கூறப்படுகிறது. குகைக்கு மேலே 9 பெரிய பாறாங்கற்கள் உள்ளன. இவற்றை "நவக் கிரக கல்' என்கிறார்கள். இதற்கு அடுத்துள்ள "ஏசி' பாறையின் கீழ் அமர்ந்தால், கடும் வெயிலிலும் மிகக் குளுமையாக இருக்கும். தவசிப் பாறையிலிருந்து கிழக்குப்பக்கமாக கீழிறங்கும் வழியில் "வெள்ளைப்பிள்ளையார்' பாறை உள்ளது. பார்ப்பதற்கு விநாயகர் போல் தெரியும். இங்குள்ள ஒரு மரத்தின் இடையில் அரையடி உயர பலகைக்கல் விநாயகர் சிலை உள்ளது. அருகில் நடுக்காட்டு நாகர் சன்னதி உள்ளது.

சுந்தரமூர்த்தி

கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும். சதுரகிரியில் அகத்தியர் தங்கியிருந்த குன்றை "கும்ப மலை' என்கின் றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுந்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் "சுந்தரமூர்த்தி லிங்கம்' எனப்படுகிறது. அருளை வழங்குவது "சுந்தரமகாலிங்கம்', பொருளை வழங்குவது "சுந்தரமூர்த்தி லிங்கம்' என்று கூறுவர். சதுரகிரி கோயிலின் நுழைவுப்பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது. இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம்.

பார்வதி பூஜித்த லிங்கம் :
சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய்விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள். தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள். மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து "அர்த்தநாரீஸ்வரர்' ஆனார் என தல வரலாறு கூறுகிறது. பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும்


இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார். மகாசிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்றனர்.


இக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம் தான். 18 சித்தர்களுக்கும் சிலை உள்ளது. செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள்.இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் வனகாளி கோயில் உள்ளது.


லிங்க வடிவ அம்பிகை

சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் "ஆனந்தவல்லி' என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள். சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது.


 சதுரகிரியில் தீர்த்தங்கள்
சந்திர தீர்த்தம்

சதுரகிரியில் சுந்தர மகாலிங்க மலையில் 'சந்திர தீர்த்தம்' இருக்கிறது.இந்த சந்திர  தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி ஒரு முறை நீராடினால் கொலை, காமம், குரு துரோகம் போன்ற பஞ்சமா பாதங்களிலிருந்து நீங்கி புண்ணியம்  பெறலாம்.

கெளண்டின்னிய தீர்த்தம்.

சந்திர தீர்த்தத்திற்கு வடபுறத்தில் உள்ளது இந்தத் தீர்த்தம். இது தெய்வீகத் தன்மை வாய்ந்த நதியாகும். வறட்சியுற்ற காலத்தில் தேவர்களும், ரிஷிகளும் சிவபெருமான் வேண்ட, ஈசன் தமது சடை முடியில் உள்ள கங்கைலிருந்து ஒரு துளி எடுத்து நான்கு கிரிகளுக்கும் மத்தியில் விட்டு, லிங்கத்தில் மறைந்தார் என்பது ஐதீகம்.

கங்கை, கோதாரி, கோமதி, சிந்து, தாமிரவருணி, துங்கபத்திரை முதலிய  புண்ணிய நதிகளுக்கு நீராடிய பயனுண்டு. இந்த நதியில் நீராடுவதால் சகல பாவங்களும் தீர்வதால் இதற்கு ''பாவகரி நதி'' என்னும் பெயரும்  உண்டு.

சந்தன மகாலிங்கம் தீர்த்தம்.

இச்சதுரகிரியின் மேல் 'காளிவனம்' என்கிற  இருண்டவனம் ஒன்றுள்ளது. அவ்வனத்திலிருந்து  வருகிற தீர்த்தம் சந்தனமகாலிங்க தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. உமையாள் பிருங்க முனிவர் தம்மை வணங்காமல் ஈசனை வணங்கியமையால் ஏற்பட்ட கோபத்தின்  காரணமாகச் சிவபெருமானை விட்டுப் பிரிந்து, அர்த்த நாரீஸ்வரர் என்கிற சிவசக்தி கோலத்தில் இருக்க வேண்டி சதுரகிரிக்கு வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேகத்திற்கு வரவழைத்த ஆகாய கங்கையாகும்.

இப்புண்ணிய தீர்த்ததில் நீராடினால், எந்தப் பாவமும் நீங்கி முக்தி கிடைக்கும்.

இது தவிர, சதுரகிரியில் பார்வதி தேவியின் பணிப்பெண்களான சப்த கன்னியர்கள் தாங்கள் நீராடுவதற்கு உண்டாக்கிய 'திருமஞ்சனப் பொய்கை' உண்டு.

காலாங்கிநாதரால் உண்டாக்கப்பட்ட 'பிரம்மதீர்த்தம்' ஒன்று சதுரகிரி மலைக்
காவலராகிய கருப்பணசுவாமி சன்னதி முன்பாக இருக்கிறது. இது தவிர கோரக்கர், இராமதேவர், போகர் முதலிய மகரிஷிகளால் உண்டாக்கப்பட்ட 'பொய்கைத் தீர்த்தம்''''பசுக்கிடைத் தீர்த்தம்'',  'குளிராட்டித் தீர்த்தம்' போன்ற அனேக தீர்த்தங்கள் சதுரகிரி மலையில் உள்ளன.மகாலிங்கம் கோயிலிலிருந்து சாப்டூர் செல்லும் வழியில் உள்ள குளிராட்டி பொய்கையில் நீர் வற்றாது. இதில் குளித்தால் கிரக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

மகரிஷிகளும், சித்தர்களும் இன்றும் அருவுருவாக வாழ்ந்தும் அருள் வழங்கும் வண்ணம் சதுரகியில் வீற்றிருக்கிறார்கள்.

பொதுவாகவே மலைகளின் மேல், மனிதர்களுக்கு ஆயுளும், ஆரோக்கியமும் தரும் அற்புதமான பல மூலிகைகளும், மருத்துவ குணம் நிறைந்த மரம் செடி கொடிகள் யாவும் இருக்கின்றன. இவைகளைத் தழுவி வரும் காற்று நம் மீதுபட்டவுடன் உடலில் உள்ள நோய்கள் தீர்கின்றன.

அபூர்வ மூலிகைகள் :

 இங்கே கிடைக்கும் பல அற்புத மூலிகைகளில் முறிந்த எலும்பை கூடவைக்கும் மூலிகை இலை கூட இங்கே உள்ளது . முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி, இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும்.

பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சமும், சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள், மூலிகைகள், இலைகள் இம்மலையில் மேல் உள்ளன. இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன.

தவிர கோரக்க முனிவரால் 'உதகம்' என்று குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு. மருத்துவ குனம் கொண்ட மரம், செடிகொடிகளின் மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர் தேங்கியசுனைகள் இருக்கிறது.

இந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான் 'உதகம்' என்று பெயர். பார்ப்பதற்கு குழம்பிய சேற்று நீர்போல் காணப்படும். இந்த உதகநீர் மருத்துவ குணங்களைக் கொண்டது. இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது.

விபரங்கள் அறிந்தவர்க்ளின் மூலமும், துணையோடு அந்நீரை மருந்தாக
 பயன்படுத்த வேண்டும்.

சதுரகிரி மலையில் தபசு குகைக்கு அருகில் கற்கண்டு மலைக்குக்கீழ் அடிவாரத்தில் சுணங்க விருட்சம் என்னும் மரம் உள்ளது.

இந்த மரத்தின் காய் நாய்க்குட்டி போலிருக்கும். அந்தக் காய் கனிந்து விழும்போது நாய்க்குட்டி குரைப்பதைப் போல் இருக்கும். விழுந்த கனி 10 வினாடிக்குப் பிறகுமறுபடியும் அம்மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும்.

அதேபோல் 'ஏர் அழிஞ்ச மரம்' என்றொரு மரம் உண்டு.

இந்த மரத்தில் காய்க்கும் காய் முற்றியவுடன் கீழே விழுந்து விடும். விழுந்த காய் காய்ந்து அதன் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் போய்  ஒட்டிக்கொள்ளும். இடையில் மழை, காற்றினால் மரத்தை விட்டு தள்ளிப்போய் இருந்தாலும் மேல் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில்
வந்து ஒட்டிக்கொள்ளும்.

இந்த 'ஏர் அழிஞ்ச மரத்தின்' கொட்டைகளை எடுத்து எண்ணையில ஊறவைத்து அதன் மூலம் கிடைக்கும் மையை உபயோகித்து வசியம் செய்வது ஒரு வகை.

சதுரகிரியில் நந்தீஸ்வரர் வனத்தில் கனையெருமை விருட்சம் என்றொரு மரமுண்டு. அம்மரத்தினடியில் யாராவது ஆட்கள் போய்  நின்றால் அம்மரம் எருமை போல் கனைக்கும். அம்மரத்தை வெட்டினால், குத்தினால் பால் வரும்.

இதேபோல் மற்றொரு விருட்சம் மரமும் உண்டு. இந்தவிருட்சம் நள்ளிரவில் கழுதைப் போல் கத்தும். வெட்டினால் பால் கொட்டும். நவபாஷண சேர்க்கையில் இந்த விருட்சக மரத்தின் பாலும் முக்கியமான சேர்க்கையாகும். 


இவை எல்லாவற்றையும் விட தூக்கி சாப்பிடும் விஷயம் ஒன்று உள்ளது. மலையில் மிக அடர்ந்த பகுதியில் - " மதி மயக்கி வனம்" என்ற பகுதி உள்ளது. இங்கே உள்ளே சென்றவர்கள் , மதியை மயக்கி அவர்கள் வெளியே வரவே முடியாது என்று கூறுகின்றனர். நான் கேள்விப்பட்ட வரை , எங்கள் அருகில் இருக்கும் கிராமத்துக் காரர்  ஒருவர்  வழி தவறி உள்ளே சென்று மாட்டிக்கொண்டு விட்டார். "மகாலிங்கம் காப்பாத்து, காப்பாத்து" என்று மூன்று நாட்கள் கதறி, ஒரு வழியாக அந்த வனத்திலிருந்து வெளியே வந்து விட்டார். அடர்ந்த காடு, நிறைய பூச்செடிகள் இருந்தது. எதுவும்  கோவில் கூட இல்லை. ஆட்களே யாரும் இல்லை. பசியே தெரியவில்லை. வெளியே வந்தது ஆண்டவன் அருள் என்று, இன்றும் அவர் திரும்ப திரும்ப புலம்பிக் கொண்டே இருக்கிறார். 


இன்றும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் - சித்தர்கள், ரிஷிகள் - மகாலிங்க பூஜை செய்ய வருகின்றனர். கூட்டம் கூட்டமாக நட்சத்திரங்கள் மலைப்பகுதிகளில் விழுகின்றன. வீடியோ காமிராக்களில் அதை நிறைய பகதர்கள் பதிவு செய்து இருக்கின்றனர். ஏற்கனவே நாம் " கட்டை விரல் அளவில் காட்சி தந்த சித்தர் பற்றிய பதிவை வாசகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளோம். இவை அத்தனையும் சர்வ நிஜம். இறை நம்பிக்கை உள்ள பக்தர்கள் , வாழ்வில் ஒரு முறையேனும் இந்த மகாலிங்கத்தையும்  , சந்தன மகா லிங்கத்தையும்  - மனமுருக  பூஜித்து வழிபட்டு வாருங்கள். நீங்கள் நினைத்ததை சாதிக்கும் வல்லமையை அந்த சிவம் உங்களுக்கு அளிக்கும். 


உங்கள் தேடல் , பக்தி உண்மை எனில் - நீங்கள் மனதார நினைத்து வழிபாடு செய்யும் சித்தர் தரிசனம் உங்களுக்கு சதுரகிரியில் நிச்சயம் கைகூடும். இதை நிறைய பக்தர்கள் அனுபவித்து இருப்பதால் , இப்போதெல்லாம் சதுரகிரியில் கூடும் கூட்டத்திற்கு குறைவில்லை.. 



முதன்முறை செல்பவர்கள் - கூட்டம் அதிகமாக இருக்கும் தினங்களை தவிர்த்து சாதாரண சனி , ஞாயிறு கிழமைகளில் செல்வது உங்களுக்கு நல்லதொரு அனுபவம் கிடைக்கும். 
 வாழ்க வளமுடன் !

 
திருவாசகம்
1. சிவபுராணம்

(திருப்பெருந்துறையில்  அருளியது)

தற்சிறப்புப் பாயிரம்

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உளமகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலனடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சிற்றார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி

ஆறாத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்ட எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிப்
கல்லாய் மனிதரைப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஒம்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே

ஆக்கம் அளவு இறுதி இல்லை, அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே

கறந்த பால் கன்னலொடு நெயகலந்தார் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,

விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம்கெடப்

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே

அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம் கருத்தில்

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இல்லாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே அத்தா மிக்காய் நின்ற
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக் குடம்பின் உள்கிடப்பப்
ஆற்றேன் எம் ஐயா அரனேஓ என்று

போற்றி புகழ்ந்து இருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைபிறவிச் சாரமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நல் இருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே

அல்லல் பிறவி அறுப்பானேஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.

திருச்சிற்றம்பலம்

மலைகளின் மாவட்டம் நாமக்கல்

கோயில் மாநகர் மதுரை, மாங்கனி மாநகர் சேலம் என்பதைப் போல மலைகளின் மாநகராக நாமக்கல் விளங்குகிறது.

எந்த மாவட்டத்தில் இருந்து இந்த மாவட்டத்துக்கு நுழைந்தாலும் ஒரு மலையைத் தொட்டுத்தான் நுழைய முடியும் என்கிற அளவுக்கு மலைகளும், மலைக் குன்றுகளும் நிறைந்ததாக உள்ளது நாமக்கல் மாவட்டம்.

சித்தர்கள், பக்தர்கள், மலைவாசிகள், திருடர்கள் (!) என பலருக்கும் அடைக்கலமாக இருந்த ஒவ்வொரு மலையும் ஒரு பெயர்க் காரணம் கொண்டுள்ளது.

மலைக்கோட்டை:

ராமாயண காலத்தில் நரசிம்மமூர்த்தி அமர்ந்த கல் பாறையை எடுத்துக் கொண்டு அனுமன் வரும்போது நாமக்கல் கமலாலயக் குளத்தில் மகாலட்சுமி தவம் செய்து கொண்டிருந்தார்.

அனுமனும் நரசிம்மர் சிலை அமைந்த பாறையை அங்கு வைத்துவிட்டு காலைக்கடன்களை முடித்துத் தவம் செய்தான். பின்னர், பாறையைத் தூக்கி முயன்றபோது அனுமனால் அதைத் தூக்கமுடியவில்லை. பின் நரசிம்ம மூர்த்தி வேண்டுகோளின்படி அக் கல்லை அங்கேயே அனுமன் விட்டுச் சென்றான்.

சாலி கிராமத்திலிருந்து அனுமன் எடுத்துவந்த கல்தான் நாமக்கல் மலைக்கோட்டை என்பது தலபுராணச் செய்தி. பின்னர், பல்லவ மன்னன் காலத்தில் குடவறைக் கோயில், அனுமன் கோயில் ஆகியவை கட்டப்பட்டதாகவும் தகவல்.

பின்னர், திப்புசுல்தான் காலத்தில் இம் மலைக்கோட்டைதான் நகர எல்லைக் கண்காணிப்புத் தலமாகவும் இருந்தது.

கொல்லி மலை:

நாமக்கல் மாவட்டத்திலேயே மிகப் பெரிய மலையாக கொல்லிமலை உள்ளது. 50 கி.மீ., சுற்றுப் பரப்பளவுள்ள இம்மலையில் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, அறப்பளீஸ்வரர் கோயில் ஆகியவை மிகவும் பிரசித்தி பெற்றவை.

நூற்றாண்டுகளுக்கு முன் இங்கு கொல்லிவாய்ப் பறவைகள் அதிகம் வசித்ததால் இது கொல்லிமலை என்று பெயர்பெற்றது என பெயர்க் காரணம் கூறப்படுகிறது.

இங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்குச் செல்ல 500-க்கும் அதிகமான படிக்கட்டுகள் உள்ளன. இந்த படிக்கட்டுகளில் ஏறி இறங்கவே குறைந்தது 2 மணிநேரம் ஆகும். மூலிகைகள் நிறைந்தது இம்மலை.

அர்த்தநாரீஸ்வரர் மலை: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருமலை இம் மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்றது. குழந்தையில்லாதோர் இம் மலை உச்சியில் உள்ள கோயிலைச் சுற்றி வந்தால் குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.

இங்குதான் சிவனும், சக்தியும் ஒரே உருவில் இடது, வலமாக இருப்பர். இங்கு பார்வதி வழிபட்ட கெüரி விரத சிவலிங்கம் உள்ளது. பெண்கள் கூட்டம் இங்கு எப்போதும் அலைமோதும்.

நைனா மலை: நாமக்கல்லை அடுத்த சேந்தமங்கலத்தில் இருந்து புதன்சந்தை செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது நைனா மலை.

இம் மலை உச்சியில் உள்ள பெருமாள் கோயில் மிகவும் புகழ்பெற்றது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் முழுவதும் இங்கு விழாக் கோலம்தான். புரட்டாசி மாத சனிக்கிழமை தோறும் பக்தர்கள் நடந்தே மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்வர்.

தலை மலை: எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம் செவிந்திப்பட்டியை அடுத்துள்ளது இந்த தலைமலை. இம் மலையில் தானாக வளர்ந்த சஞ்சீவிராயன் பெருமாளுக்குக் கோயில் உள்ளது.

மலைக்குச் செல்ல நடைபாதை மட்டுமே உண்டு. இம் மலையை தொலைவில் இருந்து பார்த்தால் ஒரு மனிதன் படுத்திருப்பது போன்று தோற்றமளிக்கும். மனிதன் தலையுடன் கூடிய அமைப்பாக உள்ளதால் தலைமலை என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுவதுண்டு.

ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் இத் திருக்கோயிலில் விஷேசம் நடைபெறும். இம் மலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் எங்கு விழா நடந்தாலும் தலைமலைப் பெருமாளுக்கு படையல் வைப்பது வாடிக்கை. மழைவேண்டி பூஜை செய்த மறுவிநாடியே இங்கு இடி, மின்னல் விழும் என்கின்றனர் இப் பகுதியினர்.

சித்தர் மலை: ராசிபுரத்திலிருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ளது சித்தர் மலை. நூற்றாண்டுகளுக்கு முன் இங்கு சித்தர்கள் வாழ்ந்த காரணத்தினால் சித்தர் மலைபெயர் ஏற்பட்டுள்ளது. மூலிகைகள் அடங்கிய மலையாக உள்ள இங்கு மலைவாழ் மக்கள் 100-க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.

போத மலை: இம் மலையும் ராசிபுரத்தில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ளது. ஞானிகள், சித்தர்கள், போதர்கள் என பலரும் வந்து வசித்த மலை போத மலை. தற்போது, இம் மலையில் 2 கிராமங்களே உள்ளன.

சிவன் மலை: நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ளது சிவன் மலை. ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் இங்கு திருவிழா நடைபெறும். இங்குள்ள சிவன் கோயிலுக்கு வரும் பெண்கள், பக்தர்கள் அனைவரும் மணலில் சாதம் பரப்பி மண்சோறு சாப்பிடுவது வாடிக்கை. இந்த நேர்த்திக் கடன் செலுத்துவோருக்கு கேட்டது கிடைக்கும் என்பது ஐதீகம்.

இவைதவிர ஒவ்வொரு தாலுகா, ஒவ்வொரு கிராமம் அருகேயும் சிறு சிறு மலைக்குன்றுகளும், மலைகளுமாக மலை மாவட்டமாகத் திகழ்கிறது நாமக்கல்.

தத்துவமசி

திருமூலர் திருமந்திரம்,மற்றும் வரலாறு
 

சதுரகிரி மலை சித்தர்கள்

By M.Mukarji vijayakumar 
  • சதுரகரி சுந்தரமகாலிங்க சுவாமி சுயமாகத் தோன்றிய லிங்கம். இந்த இறைவன் தோன்றிய விதம் பற்றி வரலாறு கூறுவதாவது : சதுரகிரி மலை மீது பச்சைமால் என்பவர் பசு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்பசுக்களின் பாலை விற்பனை செய்து வந்தார். அதில் ஒரு பசு மட்டும் பால் கொடுப்பதில்லை. இவ்வாறு பல நாட்கள் கொடுக்காததைக் கண்டு பச்சைமால் காரணம் புரியாமல் சிந்தித்துக் கொண்டிருந்தார். பசுக்கள் காலையில் மேய்த்துவிட்டு மாலையில் கொட்டிலுக்கு வரும்போது பால் கொடுக்காத ஒரு பசு மட்டும் ஒரு குறிப்பிட்ட இடம் வந்தவுடன் நின்று தன்மடிப்பாலை சொரிந்து கொண்டிருந்தது. இதை பார்த்த பச்சைமால் தன்கையில் வைத்திருந்த கம்பால் பசுவை அடித்தார். அப்பொழுது பசுமாடு விலகி ஒடிவிட்டது. அந்த பால் சொரிந்த இடத்தில் சிவபெருமான் அடியார் கோலத்தில் தலையில் இரத்தம் வடிய நின்றார். இதைப்பார்த்த பச்சைமால் அதிர்ச்சியடைந்து அடியாரை வணங்கி மன்னிப்பு கேட்டு ரத்தம் வடிந்த இடத்தில் அருகிலிருந்த செடியின் இலையைப் பிடுங்கி வைத்து கட்டினார். உடனே ரத்தம் நின்று வடுவும் தெரிந்தது. அடியார் வடிவத்தில் வந்த சிவன் இந்த இடத்தில் யாம் இங்கே தங்கியிருக்க விரும்புகிறோம். எனவே இங்கே கோயில் கட்டி வழிபாடு செய்யுங்கள். அவ்வாறு செய்து வந்தால் அனைவருக்கும் வேண்டிய பலன் கிடைக்கும் என்று கூறிவிட்டு லிங்கமாகி மறைந்துவிட்டார். இதை பச்சைமால் இப்பகுதி பெரியவர்களிடம் கூறி கோயில் உருவாக்கி வழிபாடு செய்து வந்தனர். பின் கோரக்கர் சித்தர் போன்ற பல சித்தர்கள் தங்கி பல சித்துக்கள் செய்ததாகக் கூறப்படுகிறது. அவ்வாறு தங்கிய சித்தர்களின் பெயர்களால் அந்த இடங்கள் அவர் பெயர்களாலேயே இன்றும் வழங்கப்படுகிறது.
அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயில்
  • சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள். வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு “சடதாரி’ என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான். சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான். சிவபெருமான் அவனை தேற்றி, “” நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன்,” என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி “மகாலிங்கம்’ என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. “இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம்”.
திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் “பதினாறு” கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர்.
* மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை “சஞ்சீவி மலை” என்கின்றனர். *சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது. *ஆடி அமாவாசை முக்கிய விழா. தை அமாவாசை, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, மார்கழி முதல் நாள் ஆகிய நாட்களிலும் அதிக கூட்டம் இருக்கும். * பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை “போகர்” சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது. *இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்துள்ளார்கள். *மகாலிங்கம் கோயிலின் வடக்கே “ஊஞ்சல் கருப்பண சாமி” கோயில் உள்ளது. * சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் 1 மணிக்கு அபிஷேகம் துவங்கும். * ஆடி அமாவாசை தவிர மற்ற அமாவாசை நாட்களில் தேனும், தினைமாவும் பிரசாதமாக தரப்படுகிறது. * சதுரகிரி மலைக்கு மின்சார வசதி கிடையாது. ஜெனரேட்டர் பயன்படுத்துகின்றனர்.

சிவன் வணக்கம்

சிவன் வணக்கம் சிவலிங்க வணக்கமாக மாறுதல்
பழங்காலத்தில் மக்கள் சிவன் என்னும் ஞாயிற்றுக் கடவுளை மலைமுகடுகளில் கண்டு வணங்கினார்கள். ஆகவே மலை முகடுகள் கடவுளின் உறைவிடம் என்று கருதினர். மலை இலாத நாடுகளில் மலைபோன்ற முக்கோண செய்குன்றுகளை எழுப்பி அவை மீது ஞாயிற்றைப் போன்ற வட்ட வடிவான வடிவத்தை வைத்து வழிபட்டார்கள். எகிப்தியரின் “கூர்நுதி”ச் சமாதிகள் ஞாயிற்றுக் கடவுளின் கோயில்களே யாகும். எல்லா இடங்களிலும் செய்குன்றுகளளை எழுப்புதல் எளிதன்று. ஆதலின், செய்குன்று வடிவான முக்கோணக் கற்கள் ஞாயிற்றின் குறிகளாக வைத்து வழிபடப்பட்டன. இலிங்கம் என்பதற்கு அடை யாளம் என்பது பொருள். (sanchi and its Remain – p.50 General F.C.Maisey) முக்கோண வடிவான கற்கள் பின்பு அடி அகன்று நுனி ஒடுங்கிய கற்களாக மாறின. ஒபிலிஸ்க் (Obelisk) எனப்படும் சதுரவடிவான தூண்களும் ஞாயிற்றின் வடிவங்களாகும்.

விவிலிய மறையில் பீதெல் என்று சொல்லபடுவன மரங்களின் கீழ் நிறுத்தப்பட்ட சிவலிங்கங்களேயாகும்.

கைலை, என்பது பழங்காலத்தில் சிவன், கோயில் கொண்டிருந்த மலைகளைப் பொதுவில் குறிக்க வழங்கிய பெயர் எனத்தெரிகிறது. இலங்கையிலுள்ள திருக்கோணமலையே எல் தொடர்பான பெயரைப் பெற்றிருப்பதற்குக் காரணம் அது, தென் கைலை என வழங்கப்படுகிறது.

கைலை மலை, திருக்கோணமலை முதலிய மலைகளைப் பார்க்கும் போது சிவலிங்கள் வடிவம் போன்று தோற்றம் அமைந்திருப்பதனாலேயே அவை சிவனின் இருப்பிடங்கள் எனக் கருதப்பட்டிருக்கின்றன. வடக்கேயுள்ள சிவன் மலை வட கைலை என்றும், தெற்கேயுள்ள அவ்வகை மலை தென் கைலை என்றும் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆதியில்,

இவ்விடங்களின் பெயர்கள் ‘எல் + ஐ + அம் = எல்ஐஅம் என்று இருத்தல் கூடும். பின்பு பிரித்தறியும் பொருட்டு வடகை ( வடக்குப் பக்கத்திலுள்ள) இடகை (இடப் பக்கத்திலுள்ள) என்னும் சொற்கள் சேர்ந்து வழங்கப்பட்டனவாகலாம். அப்பொழுது வடகை எல்லை அம், தென்கை எல்லை அம் என்று ஆகிய பெயர்கள் வடகைலாயம், தென்கைலாயம் என்று வழங்கலாயின என்று கருதலாம்.

இலிங்க வணக்கம் இந்தியாவில் மட்டும் காணப்படுவதன்று. ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் அகிப்திலும் காணப்படுகிறது. உரோமர் சிவலிங்கங்களைப் பிரியாபஸ் எனப் பெயரிட்டு வணங்கினார்கள். கிரேக்கர்களின் இலிங்கக் கடவுள் இதுவே. உரோமரும், கிரேக்கரும், எகிப்தியரும் சிவலிங்கங்களை நாட்டிக் கோயில்கள் அமைத்தார்கள். பிரியாபஸ் என்பது இந்தியாவில் காணப்படும் சிவலிங்கங்கள் போன்றது. இஸ்ரவேலர் சிவலிங்கங்களை வழிபட்டார்கள். விவிலிய மறை (I King XV) அசா (Asa) என்பவன் தன் தாயைச் சிவலிங்கத்துக்குப் பலி செலுத்தாதபடி தடுத்து அதனை அடைத்தெரிந்தானென்று கூறுகிறது. (A Dictionary of Religious Ceremonies of the Eastern Nation)

சிவம்பொருள் விளக்கம்:
‘சிவம் என்ற சொல் தமிழ்ச் சொல் என்று டாக்டர் கிரையர்சன் கூறுகின்றார் “The term’ Siva is Tamil in its origin; the conception of Rudra-Siva has a tinge of Dravidian influence on the Aryans not only philosophically but on their whole mode of thought” வேத இந்தியா (Vedic India) என்னும் நூலில் ரகோசின் என்பவர் சிவ வழிபாடு ஆரியர் வந்தபோது இந்த நாட்டில் வாழ்ந்த ஆதிமக்களில் ஒரு வகையாளர் வழிபாடென்று குறிப்பிட்டுள்ளார். சிவ என்ற சொல்லிலுள்ள சகர ஓசை ஆதியில் ஆரிய மொழியிற் கிடையாத கபால ஒலி (Cerebral) எனப்படும். அத்தகைய ஒலிகள் திராவிடச் சார்பால் ஆரிய மொழியில் புகுந்தன என்று ஆசிரியர் ராப்சன் கூறுகின்றார். சிவ என்ற சொல் செம்மை என்பதன் அடிப்படையாகப் பிறந்தது. அது சிவப்பு என்றும் நன்மை, மங்களம் என்றும் பொருள்படும். தமிழ் மக்கள் வேட்டுவ வாழ்க்கை நிலையிலிருந்த போது சிவனை வழிபட்டமையால் தமக்குள் அரிய செயலாய் மதிக்கப்பட்ட புலிக் கொலையையும் பாம்பு வசியத்தையும் அப்பெருமானுக்கு ஏற்றி வணங்கினர் போலும். புலித் தோலாடையும் பாம்பு நகையும் சிவபெருமானுக்கு உரியன வாயின1 என கா. சு. பிள்ளை விளக்குவதினின்று சிவம், ஆதிதிராவிட பழங்குடியினரின் வழிபாட்டில் இருந்தாகவும் அது மொழி வழியாகவும் பண்பாட்டின் வழியாகவும் தமிழர்க்கு உரியதென விளங்குகிறது.

சதாசிவம்:

ஆனந்த மார்க்கத்தின் தலைவரான ஆனந்த மூர்த்தி ஆய்வுக் கட்டுரையின் மூலம் மனிதனாகத் தோன்றி, மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினங்களின் நல வாழ்விற்காகவும் அருந்தொண்டாற்றியவர் ‘சதாசிவம்’ என்றழைக்கப் பெற்றவர் என அறிகின்றோம்.2

வழிபாட்டில் சிவன்:

இராமன் சீதையை இராவணனிடமிருந்து மீட்டு வரும் போது சிவனை வழிபட்ட இடத்தைக் காட்டியதாக இராமயணம் மூலம் அறிகிறோம். கிருஷ்ணன் மகாபாரதப் போரின் போது 12ஆம் நாள் இரவு அருச்சுனனிடம் சிவனை நோக்கி வேள்விச் செய்யச் சொன்னான் என்பதாலும், இராமனுக்கும் கிருஷ்ணனுக்கும் காலத்தால் முற்பட்டவன் சிவன்3 என்னுங்கருத்தால் காலத்தைத் தெளிவாக வரையறை செய்ய முடியாத பழமை மரபிற்குரிய பெயரே ‘சிவன்’ எனத் தெரிகிறது.

பழமைச் சிறப்புடைய சிவன், காலத்தால் பழைய சங்க இலக்கியங்களிலும் குறிக்கப் பெறவில்லை என்பது வியப்பிற்குரியது. ஆனால், குறிப்பாக உணர்த்தும் மரபினைப் பரவலாகக் காணமுடிகிறது.

இலக்கியங்களில் சிவன்,

முக்கண் செல்வன்4
கரை மிடற்றண்ணல்5
காரி உண்டிக் கடவுள்6
தாழ் சடையன்7
புரமெரித்தோன்8
கொன்றை மாலையன்9
ஆலமர் கடவுள்10

1. கா.சு. பிள்ளை, தமிழர் மதம். சென்னை. பக். 6869
2. ஆறுமுக சாமிகள், தமிழ் ஆய்வுக் களங்கள். திருநெல்வேலி. 1999. பக். 65
Sadasiva who was born into this world about 7000 years ago and who by his holy birth consecreated as it were, each and every dust particle of this earth and utilized this whole life for the sole purpose of advancing the course of universal welfare Remember I have not said ‘human welfare’ because in our world not only are there humans, there are also birds and animals, trees and plants. Siva belongs to all and for all living beings. He gave His all, Hence the people called him Sadasiva- Sadasiva means ‘always’ and siva- as a I have said earlier means ‘welfare’ so Sada Siva means one whose only vow of existance is to promote the all round welfare of all living beings. (Sri Sri, Namah Shivaya Shamtaya, Ananda marga prachara sangam, Calcutta. 1985, p.5)
3. ஆறுமுக சாமிகள், தமிழ் ஆய்வுக் களங்கள். பக். 6869
4. புறம். 6, 55, அகம்181, முருகு153, கலி2:104
5. புறம் 1, 6, 55
6. மலைபடு கடாம் 82, 83
7. புறம்1
8. புறம்55
9. புறம்1, கலித்தொகை150
10. புறம்198

மேலே குறிக்கப் பெற்ற அத்தனையும் சிவனைக் குறிப்பனவே. என்ன காரணத்தினாலேயோ ‘சிவன்’ என்னும் பெயரால் குறிக்காமல் இத்தகைய குறிப்பால் குறிக்கும் மரபினைப் புலவர் கையாண்டனர் என்பது வியப்பளிப்ப தாகும்11 என்பர்.

மேற்கண்ட அனைத்தும் சிவனின் செயல்தான் என்பதற்கான எந்தச்சான்றினையும் காட்டவில்லை. முக்கண் செல்வன், கரை மிடற்றண்ணல், காரி உண்டிக் கடவுள், தாழ் சடையன், புரமெரித்தோன், கொன்றை மாலையன், ஆலமர் கடவுள் என்பன வெல்லாம் சிவனுக்கு மட்டுமே உரியதெனக் கருதுவதில் எந்த நியாமும் இருப்பதாகத் தோன்றவில்லை.

“சேயோன் மேய மைவரை யுலகம்”12 எனத் தொல்காப்பியம் குறிப்பது சிவனையேயாதல் வேண்டும்.13 என்பதும் சரியாகத் தோன்றவில்லை.

புராணம் குறிப்பிடும் சிவனும், இலக்கண இலக்கியம் காட்டும் குறிப்புகளும் ஒருவரையே குறிப்பிடுகின்றன என்பது பொருந்தாது. புராணங் குறித்த காலமும் இலக்கண இலக்கிய காலமும் வேறு வேறானவை. நீண்ட இடைவெளியைக் கொண்டவை என்பதால் இவ்வாறு கருதத் தோன்றுகிறது.
சிவன் பண்டு தியானம் கருதி மலையைத் தேர்ந்தவன். தென்னகத்தின் பொதியமும், வடக்கில் கயிலையும் அவன் சேர்ந்த மலைகள். சிவன் புலித் தோலையும் யானைத் தோலையும் உடுத்தியவன் என்பதிலிருந்து பனிக்காக இவ்வாடைகளைத் தேர்ந்தான் என அறிகின்றோம். சாம்பலைத் தண்ணீரில் குழைத்து உடம்பெல்லாம் பூசிக் கொள்ள எப்படிப் பட்ட குளிர் பாதிப்பும் ஏற்படாது. சிவன் இப்பழக்கம் மேற் கொண்டவன். காலப்போக்கில் சாம்பல் சமயச் சின்னமாகிய திருநீறாகியது. தியானம் யோகம் கற்பம் போன்ற முறைகளைக் கையாள சாத்வீக உணவையே கொள்ளுதல் வேண்டும். சிவன் மேற் கொண்ட உணவுமுறை இதுவே. சிவனை வழிபடு வோர் சைவர் எனப்பட்டது போல, உணவில் சிவன் கண்ட முறையும் காலப் போக்கில் சைவம் ஆனது14 என்பர்.

சிவன் தியானத்திற்காக மலையைத் தேர்ந்து, பொதிகைக்கும் கயிலைக்கும் சென்றான் என்பது பொருந் தாது. சிவன், கடல் கொண்ட குமரி நாட்டில் பஃறுளி ஆற்றங் கரையில் இருந்த தென் மதுரையில் நடைபெற்ற முதற் தமிழ்ச் சங்கத்தின் தலைவன். இது கி.மு. 10490 என்று கருதுவர் என்றால் கி.மு. 10490இல் குமரிக்கண்டத்திற்கும் கயிலைக்கும் ஒருவன் சென்று வருவதென்பது வெறுங் கற்பனையே. சாலை வசதியோ வாகன வசதியோ இல்லாத அக்காலத்தில் தமிழ்ச் சங்கத்தின் தலைவனாக இருந்த புலவரும், யோக நெறியைப் பின்பற்றுபவருமான ஒருவர் இவ்வளவு தூரம் நெடும் பயணம் மேற்கொண்டிருந்தால், அவர் மேற்கொண்டிருந்த புலமையும் யோக நெறியும் மேலோங்கியிருக்காது. கயிலை என்பதும் பொதிகை என்பதும் வேறு பொருளை உணர்த்தும் குறியீடாக இருக்கலாம்.

11. ஆறுமுக சாமிகள், தமிழ் ஆய்வுக் களங்கள். பக். 69
12. தொல்காப்பியம், அகத்தினை. இயல். 5
13. ஆறுமுக சாமிகள், தமிழ் ஆய்வுக் களங்கள். பக். 69
14. ஆறுமுக சாமிகள், தமிழ் ஆய்வுக் களங்கள். பக். 70
15. ஆறுமுக சாமிகள், தமிழ் ஆய்வுக் களங்கள். பக். 6869

முதல் சித்தன் சிவன்:

“சிவனைப் புராண நாயகனாகக் கொள்வதைக் காட்டிலும் வரலாற்று நாயகனாகக் கொள்வது பொருந்தும்.
சித்தர் இலக்கியங்கள் மூலம் சிவனே முதல் சித்தன் என்பதற்கான சான்றுகளைக் காணலாம்.

“பொதிகையிலே எனைப் பார்க்க சிவனும் வந்தார்
பூரணனே தெய்வமென்று போற்றிச் செய்து
இதமாகக் கற்பமுறை யாவும் கேட்டேன்”16

“சுகமாக நாகமது தரித்த ஈசன்
சுந்தரிக்குச் சொல்ல என்பால்
சூட்டினான்பார்”17

“நீ கேளு புலத்தியனே கற்ப மார்க்கம்
நின்மலமாம் சதாசிவனார் எனக்குச் சொன்னார்”18

“சாரித்த நாற்பத்து முக்கோ ணத்தைச்
சதாசிவனார் வகுத்தபடி சாற்றி னேனே”19

“சருகுமுனி எனும்பேர் சிவன் தந்தார் பாரே”20

“நாரிமுனி பாகனார் அருளால் சொன்னார்”21

“சிவனார் உரைத்தமொழி பரிவாய்ச் சொன்னார்”22

“பாதிமதி அணிந்தவர்தான் சொன்னதிது”23

“சொல்லவே தேவிக்குச் சதாசிவன்தான்
சொல்லிடவே தேவியும் நந்திக்குச் சொல்ல”24

“தாரணிந்த ஈசனன்று ஆயிக்குச் சொல்ல
தாயான ஈஸ்வரியும் நந்திக்குச் சொல்ல”25

என்பன போன்ற ஒத்த கருத்துகள் சித்தர் இலக்கியங்களில் காணமுடிகிறது.மருத்துவ நூல்களில் சிவன் மரபு தமிழில் காணப்பெறும் நூல்களில் பெரும்பாலும் பரமசிவன் தேவிக்கும், தேவி நந்திக்கும், நந்தி அகத்தியர் க்கும், அகத்தியர் புலத்தியர்க்கும் புலத்தியர் ஏனைய சித்தர் களுக்கும் சரியை, கிரியை, யோகம், ஞானம், மருத்துவம் ஆகிய அனைத்தையும் கூறியதாகக் காணப்படுகிறது. (இதே கருத்து சித்த மருத்துவப் பகுதியில் விளக்கப்பட்டுள்ளது.) ஆகவே அக்காலத்தில் சிறப்புற்று வாழ்ந்த மருத்துவப் பெரியார்களைப் போற்றுகின்ற வகையில் இவ்வாறு கூறப் பட்டதாகக் கொள்வதே சான்றோர்களுக்குச் சிறப்பெனத் தோன்றுகிறது.

சிவனின் வழிவந்த அகத்தியர் மருத்துவ மரபிரைக் குறிக்கும் முனைவர். ஆ. தசரதன், புலத்தியர்க்குப் பின், பரிபூரணம், முப்பு, சூத்திரம், வாகடம், வைத்தியம், கர்மம், கலைஞானம், தீட்டை, பூசை, இரசம், ஞானம்... .... .... என தற்போது

16. அகத்தியர் கற்ப முப்பு குறுநூல். பா. 48 17. அகத்தியன் வைத்திய வல்லாதி 600, பா.385 18. அகத்தியர் தீட்சா விதி200. பா. 50 19. அகத்தியர் பரிபூரணம்400. பா. 69 20. அகத்தியர் சௌமிய சாகரம்1200. பா. 77 21. யாகோப் வைத்திய வாத சுருக்கம்400. பா. 37 22. தேரையர்1001. பா. 653 23. யூகி வாதாங்க தீட்சை300. பா. 260 24. தன்வந்திரி வைத்திய சிந்தாமணி150. பா. 3 25. போகர் புவன கோசரம். பா. 1

வழங்கி வருகின்ற நூலின் பெயரோடு அர்/ஆர் விகுதிகளைச் சேர்த்துக் காரணப் பெயராக்கிப் பட்டிலிடு கின்றார். இது, படிக்கவும் கேட்கவும் சிறப்பாகத் தோன்றினாலும், ஆராய்ந்து பார்த்தால் அவ்வளவும் நூலின் பெயராகவும் மருந்தின் பெயராகவும் இருக்கக் காணலாம்.
இவையெல்லாம் ஆய்வாளர்களிடையே ஏற்படுகின்ற மயக்கங்கள் எனலாம்.

சிவன் சக்திகுறியீடு:

“கருவான எட்டிரண்டும் நாதம் விந்து
பேணப்பா நாதவிந்து சக்திசிவ மாச்சு
பெருகிநின்ற சத்திசிவம் தான்தான் என்று
பூணப்பா அறிவதனால் மனமே பூண்டு”26

என்பவற்றால், சத்தி என்பதும் சிவம் என்பதும் எட்டு, இரண்டு எனக்குறிப்பிடப்படுவது நாதம், விந்து ஆகிய இரண்டையேயாகும். அது வெளியிலுள்ளதல்ல. தான்தான் அது. அறிவினைக் கொண்டு மனதால் அறிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

“தானான சூட்சமது என்ன வென்றால்
தன்மையுடன் போம்வாய்வு சிவம தாகும்
ஊனான உட்புகுதல் சத்தி யாகும்”27

மூக்கின் வழியே உள்ளே போகும் காற்று சத்தி என்றும், வெளியே போகும் காற்று சிவம் என்று அகத்தியரும், உள்ளே வெளியே உள்ள காற்று தெய்வமென்று, காகப் புசுண்டரும் குறியீடாகக் குறிப்பிடுகின்றனர். இவற்றால், சிவம் என்பதும் தெய்வம் என்பதும் குறியீடாகத் தோன்றுவது புலப்படும்.

“திரிந்து பார் தவாரங்கள் செடிபூ டெல்லாம்
சீவசந்து ஊர்வினங்கள் நடப்பினங்கள்
விரிந்துபார் பறப்பினங்கள் விலங்கி னங்கள்
வெறும் பாழென் றெண்ணாதே சிவமென்றெண்ணு”28

காற்றைச் சிவமென்ற அகத்தியரே, தாவரங்கள், செடி, பூண்டு, சீவசந்து, ஊர்வன, நடப்பன, பறப்பன, விலங்கு ஆகிய அனைத்துமே ‘சிவம்’ என்பது குறியீடல்ல. சிவப்பிரச்சாரமாகத் தோன்றுகிறது. (சிவம் என்றால் ‘அ’ ஆகிய உயிர் என்பதால் எல்லாவிடங்களிலும் அது இருக்கிறது எனுங் கருத்தில் இவ்வாறு கூறியிருக்கலாம்)

“மூன்றுக்கும் பேரேது முக்கண் ணென்பார்
மூவரென்பார் மூலமென்பார் மூர்த்தி யென்பார்
மூன்றுக்கும் பொருளறிந்தால் அவனே வாதி
முப்பாழு மிதுக்கொப்பு முடிவு மொப்பு”29

26. அகத்தியர் சௌமிய சாகரம். பா. 336
27. அகத்தியர் சௌமிய சாகரம். பா. 337
28. அகத்தியர் வைத்திய வல்லாதி600. பா. 285
29. கொங்கணர் முதற்காண்டம்1000. பா. 671

தங்கச் சுண்ணத்துள்ளே லிங்கம், பூரம், காரமிட்டு ஆட்ட செந்தூரம் ஆயிற்று. தங்கத்தாலான குருவுக்கு இம் மூன்றும் பச்சை வெட்டாகும் (கூட்டுப் பொருள்) இக் கூட்டுப் பொருளில்லா விட்டால் வேதையில்லை (வாத வித்தை) இத்தங்கக் குருவின் கிடையும் பச்சை மூன்றும் சிவனின் கண்கள் மூன்றுமாம். இறைவன் கண்கள் மூன்றுக்கும் ஒரே பெயராக முக்கண் என்பர்; அவன் செய்யும் தொழில்களை ஏதுவாகக் கொண்டு மும்மூர்த்தி என்பர் மூலக் காரணன் என்பர்; மூன்றுக்குமுள்ள பொருளறிந்தால் அவனே வாதியாம்.30 என்பவற்றிலிருந்து வாதத்திற்கு வேண்டிய மூலப் பொருள் இறைவன் என்றும், அதில் சேரும் மூன்று பொருள் இறைவனின் மூன்று கண்கள் அல்லது முக்கண் என்றும், அப்பொருள்கள் செய்யும் தொழிலை அடிப்படையாகக் கொண்டு மும்மூர்த்தி என்றும் மூலக்காரணன் என்றும் குறியீட்டு முறையால் மறை மொழிகள் வழங்கக் காணலாம்.

சிவன் சித்தர்:

“சித்தராய்ப் போகுமென்று பேசிக் கொண்டு
சிவனவனும் யோசனையே செய்தார் பின்பு”31
மருந்துப் பொருளைச் சிவன் என்று சொன்ன கொங்கணர் வேறொரு நூலில் சிவனைச் சித்தர் என்று கூறுகின்றதைக் காண்கிறோம்.
“தானான சிவன்தன்னைப் பாலில் போட்டுத்
தனித்துமே அடுப்பேற்றி எரித்துக் கொண்டு
ஊனான துலர்த்தியே யிடித்து நைய்ய
உருசிலை வடிகொண்டு சூரணமே செய்து”32

சிவனைப் பாலில் போட்டு அடுப்பேற்றி எரித்து நைய இடித்து உலர்த்திச் சூரணஞ் செய்து என்று போகர் உரைப்பகுதிலிருந்து சிவன் இறைவனாகவோ, சித்தனாகவோ தோன்ற நியாயமில்லை. சிவன் என்பது ஒரு பொருளின் பெயர் என்பது தெளியும்.

“தானென்ற மூவருக்கும் வயது இந்தத்
தகைமையுள்ள கலியுகந்தான் கடாசி தன்னில்
நானென்ற இவர்களுமே மாண்டே போவார்
நன்மையென்ற அடுத்தோர்கள் வீணாய்ப் போவார்
வானென்ற சதாசிவனும் மகேஸ் பரன்றான்
வண்மையுள்ள யுகநூறில் மாண்டே போவார்
தேனென்ற சிவன்மனையாள் பராப ரையும்
தேகம்விட்டு மாண்டிடுவாள் கேளு கேளு
மாண்டிடுவாள் நானுமந்த யுகத்திற் தானும்
மாண்டிடுவேன் சித்தரெல்லாம் மாண்டே போயி
ஆண்ட குரு பராபரத்திற் சேர்ந்தே கொள்வார்
அப்பனே இல்வாழ்க்கை சொற்ப மாகும்”33

சுப்பிரமணியர் அகத்தியர்க்கு உரைப்பதாக வரும் ஞான உபதேசத்தில், இக் கலியுக இறுதியில் சிவன், சிவனின் மனைவி, ஆகியோர் முதலிலும் பின்னர் தானும் மாண்டு போவோம் என உரைக்கக் காண்கிறோம்.

30. கொங்கணர் முதற்காண்டம்1000. பா. 66971 31. கொங்கணர் கற்பம்100. பா. 76 32. போகர் கற்ப விதி. பா. 36 33. சுப்பிரமணியர் ஞானம்25. பா.810

இந்த உலகில் இறைவனாக இருந்தாலும் சித்தனாக இருந்தாலும் ஒரு நாளில் மரணமடைவதற்கு உரியவர்கள் என்பதனால், புராணங்கள் கூறுவது போலும் பக்திநூல்கள் கூறுவது போலும் சிவன் எந்தக் காலத்திலும் அழியாமல் இருப்பவனல்ல என்பது விளங்கும்

சிவன் என்னும் சொல் பல்வேறு பொருளில் பல நிலைகளில் பயன்படுத்தப் படுகின்ற சொல்லாக மருத்துவ நூல்களில் காணப்பகின்றன. என்றாலும், சித்தர்களில் ஒருவன் சிவன் என்னும் பெயரில் இருந்து வந்ததாகவும் அவனின் நினைவாக அவனுரைத்த மருந்து, ஞானம் ஆகியவற்றிற்கு அவனின் பெயர் விளங்க வழங்கி வருவதாகவும் கருத நேர்கிறது. சித்த மருத்துவத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு குழம்பிற்கு அகத்தியர் குழம்பு எனும் பெயர் வழங்கப் படுகிறது. அந்த மருந்து ஏனைய மருந்துகளிலிருந்து மாறுபட்ட மருந்தாகவும் எல்லா நோயையும் போக்கக் கூடிய மருந்தாகவும் உரைக்கப்படுவது நினைவிற் கொள்ளத் தக்கது.

பழந்தமிழ் நூல்களுள் மிகப் பழமைவாய்ந்தது, தொல்காப்பியம். அதன்கண் சேயோன், மாயோன், கொற்றவை என்பவையாகும். சேயோன் சிவந்த நிறமுடையவன். மாயோன் கரிய நிறமுடையவ திருமால். கொற்றவை திரிபுர சுந்தரி அல்லது முப்புறம் எரித்த அம்மை ஆகிய தெய்வங்கள் வழிபடப்பாட்டிற்குரியன எனக் குறிக்கப் பட்டுள்ளது.

குமரி நாட்டில் பஃறுளியாறு கடல்வாய்ப்படுமுன் இயற்றப்பட்டதுமான ‘காரிக்கிழாரின் புறப்பாட்டில்,
‘வடாஅது பனிபடு நெடுவரை வடக்குந்
தெனாஅ துருகெழு குமரியின் றெற்கும்’

என்று, தமிழகத்தின் எல்லையைக் குறிப்பிடுவதுடன்,

‘பணியிய ரத்தை நின் குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே’

என்று, சிவனுக்குத் திருக்கோயில் இருந்தது என்பதுடன், வழிபாட்டிற்குரிய தெய்வம் என்றும், நகரில் ஊர்வலமாகவும் எடுத்துவரப் பட்டது! என்றும், குறிப்பிடுகிறார்.
இச்செய்யுள் இன்றைக்கு ஏறத்தாழ 5000 ஆண்டிற்கு முற்பட்டது.

பெருங்கடுங்கோன், பாலைகலியில்,

‘முக்கண்ணான் மூவெயிலும்
உடன்றக்கால் முகம்போல ஒண்கதிர் தெறுதலின்’

என்று, சிவன் முப்புறம் எரித்ததைக் கூறுவதையும் காண்க.

‘இமயவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்’

என்று, குறிஞ்சிக்கலியும்,

‘மணிமிடற் றண்ணற்கு மதியாரற் பிறந்தோய் நீ’

என்று, பரிபாடலும் கூறுகிறது.

‘புனையிழாய் ஈங்குநாம் புலம்புறப் பொருள்வெஃகி
முனை என்னார் காதலர் முன்னிய ஆரிடைச்
சினைவாடச் சிறக்குநின் சினம் தணிந்து ஈக எனக்
கனைகதிர்க் கனலியைக் காமுறல் இயைவதோ?’

என்று, கலித்தொகை (16: 9-12) கூறுகிறது.
சிவன், திருவண்ணாமலை, அக்னி மலை
அருணாசலேஸ்வரருக்கு சிறந்த நாள்? SHIVA - THIRUVANNAMALAI.
 

சிவன் கோவில்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடு திங்கட்கிழமை இருக்கும்.  ஆனால் திருவண்ணாமலை அக்னி மலை.  இந்தக் கோவில் அக்னி கோவில். அக்னிக்குரிய அதிபதி அங்காரகன்.  அங்காரகனுக்கு உரிய நாள் செவ்வாய் கிழமை. அதனால் இந்த கோவிலில் மட்டுமே சிவபெருமானுக்கு செவ்வாய் கிழமை அன்று விசேஷ வழிபாடு நடக்கும்.  இத்தல ஈசனை செவ்வாய்கிழமை அன்று வழிபடுவோர் பிரவிப் பிணியில் இருந்து விடுபடலாம் என்று புராணங்கள் கூறுகின்றன. 
TUESDAY PRAYERS - SPECIAL AT THIRUVANNAMALAI, AGNI STHALAM, TN, INDIA.
Normally special prayers are done on Monday's in Shiva Temples.  But in Thiruvannamalai, special prayers are done on Tuesday's, because this place is AGNI sthalam.  Tuesday is Ankaarahan's day because he is the lord for Agni.  One will get rid of their prarabhda karma, if they visit this temple, offer their prayer and surrender to HIM,  at Thriuvannamalai on Tuesday.

om namashivaya, shivaya nama om!!!