August 07, 2011

இதுதான் புதுகை

புதுகை வரலாறு

தலைநகரம் : புதுக்கோட்டை
பரப்பு : 4,649 ச.கி.மீ
மக்கள் தொகை : 1,452,269
எழுத்தறிவு : 919,086 (71.96 %)
ஆண்கள் : 720,847
பெண்கள் : 731,422
மக்கள் நெருக்கம் : 1 ச.கீ.மீ - க்கு 312



வரலாறு:

புதுக்கோட்டை என்பது புதியக் கோட்டை எனப் பொருள்படும். 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொண்டைமான் ரகுநாதா என்பவரால் ஒரு புதிய கோட்டை கட்டப்பட்டு, புதுக்கோட்டை எனப் பெயரிடப்பட்டது. இம்மாவட்டம் பரப்பளவில் சிறிது என்றாலும், வரலாறு, சிற்பம், ஓவியம், ஏனைய கலைகள் மற்றும் கனிம வளம் போன்ற சிறப்புக்களால் பெருமைப் பெற்ற மாவட்டமாகத் திகழ்கிறது. இம்மாவட்டம் பல்லவர், பாண்டியவர், ஹேர், சோபூர், முத்தரையர், ஹொய்சளர், முஸ்லீம்கள், விஜயநகர அரசு, நாயக்கர்கள்,மராத்தியர்கள் மற்றும் ஆங்கிலேயர்களால் படையெடுக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு, அவர்களின் கலை கலாச்சாரங்களால் தாக்கம் பெற்றது. சுதந்திரத்திற்கு முன்பு தொண்டைமான்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. 1974 ஜனவரி 1ஆம் தேதி திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களின் சில பகுதிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.

பொது விவரங்கள்:

எல்லைகள்:

கிழக்கில் வங்காள விரிகுடா மற்றும் தஞ்சை மாவட்டமும்; மேற்கிலும் வடக்கிலும் திருச்சி மாவட்டமும்; தெற்கில் சிவகங்கை மாவட்டமும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எல்லைகளாக உள்ளன. கடற்கரை நீளம் 36 கி.மீ.

பருவநிலை:

புதுக்கோட்டை மாவட்டம் வடகிழக்கு பருவ மழையால் நல்ல மழை பெறுகின்றது. சராசரி மழையளவு (ஆண்டுக்கு) 1395.1 மி.மீ.

வருவாய் நிர்வாகம்:

கோட்டங்கள்-2 (புதுக்கோட்டை, அறந்தாங்கி) வட்டங்கள்-7 (கந்தர்வக் கோட்டை, குளத்தூர், ஆலங்குடி, திருமயம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆவுடையார் கோவில்).

உள்ளாட்சி நிறுவனங்கள்:

நகராட்சிகள்-2 (புதுக்கோட்டை, அறந்தாங்கி) ஊராட்சி ஒன்றியங்கள்-13 (புதுக்கோட்டை, அன்னவாசல், திருமயம், விராலிமலை, குன்றாண்டார் கோவில், பொன்னமராவதி, அரிமழம், அறந்தாங்கி, கறம்பக்குடி, கந்தர்வக்கோட்டை, மணல்மேல்குடி, திருவரங்குளம், ஆவுடையார் கோவில்); பேரூராட்சிகள்-8; கிராமங்கள்-757.

பாராளுமன்ற தொகுதி

இம்மாவட்டத்திலுள்ள பாராளுமன்றத் தொகுதி-1 (புதுக்கோட்டை)

கல்வி:

பள்ளிகள்: துவக்கநிலை-1,103; நடுநிலை-182; உயர்நிலை-81; மேனிலை-38. கல்லூரிகள்-9; மாட்சிமை தாங்கிய மாமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை; அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, புதுக்கோட்டை; ஸ்ரீகணேசா செந்தமிழ்க் கல்லூரி, மேலைச்சிவபுரி; ஸ்ரீமூகாம்பிகை பொறியியல் கல்லூரி, கீரனுர்; அரசினர் பாலிடெக்னிக், அறந்தாங்கி; சீனிவாசா பாலிடெக்னிக், கீரனுர்; ஜெ.ஜெ. கலைக்கல்லூரி, புதுக்கோட்டை; ராயவரம் சுப்பிரமணியம் பாலிடெக்னிக், வெங்கடேஸ்வர பாலிடெக்னிக் ஆகிய கல்வி நிறுவனங்கள் இம்மாவட்டத்தில் உள்ளன.

இவை தவிர, இலங்கை, பர்மா முதலிய இடங்களிலிருந்து குடிபெயர்ந்தோரின் குழந்தைகள் கல்வி பெறுவததற்காக மாட்டூர் பகுதியில் அகதிகளுக்கான உயர்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. 18 வயதிற்கு மேல் 23 வயதிற்கு உட்பட்ட இளங்குற்றவாளிகள் கல்வி பெற ஒரு அரசுப் பள்ளி புதுக்கோட்டையில் இயங்கி வருகிறது.

முக்கிய ஊர்கள்:

அம்புக்கோயில்:

ஆலங்குடி வட்டத்தைச் சேர்ந்த இவ்வூர் புதுக்கோட்டையிலிருந்து 43 கி.மீ. தொலைவில் உள்ளது. சங்க இலக்கியமான அகநானுறில் இவ்வூர் அலும்பில் எனக் குறிப்பிடப்படுகிறது. கல்வெட்டுச் சான்றுகளும் இதை உறுதிப்படுத்துகின்றன. அலும்பில் என்பதே இன்று அம்புக்கோயில் என்று அழைக்கப்படுகிறது. புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் சக்கரவர்த்தி இங்கு குடியிருந்ததாக 1210 ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்று கூறுகிறது.

ஆவுடையார் கோயில்:

புதுக்கோட்டையிலிருந்து 49 கி.மீ. தொலைவிலுள்ள இவ்வூர் அறந்தாங்கி வட்டத்திலுள்ளது. இங்குள்ள கோயில் பெயரே ஊர் பெயராய் அமைந்துள்ளது. இது அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலிய சைவ சமயக் குரவர்களால் பாடப்பெற்ற தலமாகும். இத்தலப் பெருமையை திருப்பெருந்துறை புராணமும், திருவாசகமும் விரித்துரைக்கின்றன. உருவமற்ற வழிபாட்டு முறை இக்கோயிலில் பின்பற்றப்பட்டு, இறைவுருவற்ற மூலத்தானத்தில் பூசைகள் நடைபெறுகின்றன. இவ்வழிபாட்டு முறைக்கு ஆதரவாக கோயிலில் சிறப்பு வாய்ந்த சிற்பங்களும் ஓவியங்களும் காணப்படுகின்றன. இவ்வூர்ச் சிவன் கோயில் காலங்காலமாக சைவ வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது. கண்கவர் ஓவியங்களும், சிற்பங்களும், கோயிலின் வடிவமைப்பும் இக்கோயிலுக்குப் பெருமை சேர்க்கின்றன. இது ஒரு சுற்றுலாத் தலமாகும்.

ஆவூர்:
avur_church
புதுக்கோட்டையிலிருந்து 42 கி.மீ. தொலைவிலுள்ள இக்கிராமம் குளத்தூர் வட்டத்திலுள்ளது. இங்கு வாழ்வோரில் பெரும்பாலோர் கிறித்துவர்கள். 1697ல் தந்தை ஜான் வெனன்டியஸ் பவுக்கெட் என்பவரால் கட்டப்பட்ட தேவாலயம் ஒன்று இங்குள்ளது. இது ஒரு சுற்றுலாத் தலமாகும். ஈஸ்டர் பெருநாளையொட்டி கிறித்துவர்கள் நடத்தும் சிலுவைப்பாடுகளின் நாடகம் 'ஆவூர் பாஸ்கா' புகழ்பெற்றதாகும்.

கீழநிலை:

Kizhanilaiபுதுக்கோட்டையிலிருந்து 33 கி.மீ. தொலைவிலுள்ள இவ்வூர் திருமயம் வட்டத்திலுள்ளது. சோழர், பாண்டியர் ஆட்சிக் காலத்தில் போர்ப்படைகள் தங்கும் இடமாக கீழநிலை இருந்தது. நாயக்கர் ஆட்சிக் காலத்தில் சோழ நாட்டின் எல்லையாக விளங்கியது. கடைசி நாயக்க மன்னர் விஜயராகவா இவ்வூர்க் கோட்டையைக் கட்டினார். இக்கோட்டை பல்வேறு காலக் கட்டங்களில் பல அரசர் கைகளுக்கு மாறியதால் சீரழிந்த நிலையில் உள்ளது. 1683இல் சேதுபதி அரசர் காலத்தில் போர்த்தளவாடங்கள் இக்கோட்டையில் உற்பத்தி செய்யப்பட்டன. கோட்டை 45 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்து, சுற்றிலும் மதில்சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. கோட்டையினுள் சிறிய அனுமான் கோவில் உள்ளது. அரியநாயகி அம்மன் கோவிலும், அம்மன் குளமும், விஷ்ணு ஆலயமும் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோட்டையிலுள்ள சுரங்கப்பாதை ராமநாதபுரத்து சாக்கோட்டைக்குச் செல்வதாகக் கூறப்படுகிறது. என்றாலும் சுரங்கம் அடைபட்டுள்ளது.

கொடும்பாளூர்:

புதுக்கோடடையிலிருந்து 40 கி.மீ. தொலைவிலுள்ள இவ்வூர் குளத்தூர் வட்டத்திலுள்ளது. இவ்வூரின் கலைச் சிறப்புமிக்க கோயில்கள் தென்னிந்திய சிற்பக் கலைப் பெருமைக்குச் சான்றாகத் திகழ்கின்றன. 108 சைவ ஆலயங்கள் கொடும்பாளூர் பராமரிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இவ்வூர் மண்ணை எங்குத் தோண்டினாலும் லிங்கமோ நந்தியோ கிடைக்கின்றன. உடைந்த சிற்பங்களும், புதைந்தும் புதையாமலும் இருக்கும் உருவச் சிலைகளும் பல இடங்களில் காணப்படுகின்றன. சோழர் தலைநகரான உறையூருக்கும் பாண்டியர் தலைநகரான மதுரைக்கும் இடையில் கொடும்பாளூர் இருந்ததாகச் சிலப்பதிகாரம் விவரிக்கிறது.
muvarkoil_vimanam
பெரிய புராணம் இவ்வூரை கோனாட்டுடன் இணைந்த கோனாட்டுக் கொடி நகரம் எனச் சொல்கிறது. இங்குள்ள மூவர் கோயில் பெயர் பெற்றதாகும். இக்கோயிலில் சிற்பங்கள் கலை நயத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. ஆலயத்துள் லிங்க உருவமே இல்லை. சோழர், பல்லவர் கால கலைச் சிறப்பு கோயில் முழுவதும் காணப்படுகிறது. இக்கோயில் நந்தி சுமார் 7 அடி உயரம், 10 அடி நீளம், 11 அடி சுற்றளவுடையது. பல்லவ நரசிம்மன் கால கலை அமைப்பை இந்நந்தி கொண்டுள்ளது. அப்பர், சுந்தரர், சம்பந்தர் மூவராலும் கட்டப்பட்டதால் மூவர் கோயில் என்பர்.

muchukundesvara-templeவேறு சிலர் சேர, சோழ, பாண்டியர்களால் எழுப்பப்பட்டதால் இப்பெயர் பெற்றதென்பர். மற்றும் சிலரோ பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்களுக்காக இக்கோயில் கட்டப்பட்டதால் இப்பெயர் வழங்கலாயிற்று என்பர். இவ்வூரிலுள்ள முச்சுக்கொண்டேஸ்வரர் கோயில் முற்காலச் சோழர் கால ஆலயமாகும். பல்லவ கலை அமைப்பில் லிங்கம் கலை வழிபாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது மற்றும் இவ்வூரிலுள்ள ஜவஹர் கோவில் சிவாலயமாகும். ஐவர் கோயிலுக்கு சில மீட்டர் தூரத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் பல சோழர் காலச் சிற்பங்கள் கண்டெடுக்கப் பெற்றன. அவை புதுக்கோட்டை, சென்னை அருங்காட்சியங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இது ஒரு சுற்றுலாத் தலமாகும்.

விராலிமலை:
Viralimalai
விறலி (நாட்டியமாடும் பெண்) மலையே விராலி மலை என்று திரிந்ததாகவும் கூறுவர். விராலூர் மலை என்பது விராலிமலை என அழைக்கப்படுகிறது. புதுக்கோட்டையிலிருந்து 42 கி.மீ. தொலைவில் இது அமைந்துள்ளது. இம்மலையில் சுப்பிரமணியர் கோயில் உள்ளது. நூற்றுக்கணக்கான மயில்கள் இம்மலையில் காணப்படுகின்றன. இத்தலம் அருணகிரிநாதரால் பாடப்பெற்றது. இது ஒரு சுற்றுலாத்
தலமாகும்.

திருவரங்குளம்:
thiruvarangulam_temple
புதுக்கோட்டையிலிருந்து 25 கி.மீ. தொலைவில் புதுக்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு ஹரிதீர்தீஸ்வரர் கோயில் உள்ளது. சிற்பங்களுடன் விளங்கும் இக்கோயிலின் நடராசர் சிலை தற்சமயம் டில்லி தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. சோழ, பாண்டிய, நாயக்கர் காலத்தைச் சேர்ந்த 65 கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன. பெரிய கோட்டை ஒன்று இருந்து அழிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஊராட்சி ஒன்றியம் இதுவேயாகும்.

திருமயம்:

திருமெய்யம் என்பதே இதன் பூர்வீகப் பெயராகும். அழகிய மெய்யர் இவ்வூர் பெருமாளின் பெயர். புதுக்கோட்டையிலிருந்து கிழக்கில் 12 மைல் தொலைவில் மதுரைக்கு போகும் சாலையில் இவ்வூர் உள்ளது. இங்குள்ள கோட்டை இராமநாதபுரம் அரசர் விஜயரகுநாத சேதுபதியால் கி.பி. 1687 இல் கட்டப்பட்டது. இம்மலையின் தென்சரிவில் இரண்டு குடைவரைக் கோயில்கள் உள்ளன. ஒன்று இவை பல்லவர் காலத்தவை.
thirumayam
ஆதிரங்கம் எனப்படும் 'வைணவ ஆலயம்' இவற்றில் ஒன்று. இது திருமங்கை ஆழ்வாரால் பாடப்பெற்ற தலமாகும். சிவாலயத்தில் இசை சம்பந்தமான பல அபூர்வ செய்திகளைக் கூறும் கல்வெட்டுகளும் உள்ளன. சிவாலயத்தில் உள்ள லிங்கோத்பவர் மிக உயரமானதாகும். இவ்விரு கோவில்களும் இன்று நலிந்த நிலையில் பராமரிப்பற்று உள்ளன. இவ்வூர் பிரமுகர்கள் 'திருமெய்யர் அறக்கட்டளை' என்ற அமைப்பை ஏற்படுத்தி பராமரிப்பு வேலைகளை ஆற்றத் துவங்கியுள்ளனர். தீரர் சத்தியமூர்த்தி இவ்வூரில் பிறந்தவர்.

தேனீ மலை:
புதுக்கோட்டையிலிருந்து 31 கி.மீ. தொலைவில் திருமயம் வட்டத்தில் உள்ளது. இவ்வூர் சுப்ரமணியர் ஆலயம் பழம்பெருமை பெற்ற தலம். மலையின் கிழக்குச் சரிவில் ஆண்டார்மடம் எனும் குகைக் கோயில் இருக்கிறது. ஜைனக் கலாச்சாரம் இப்பகுதியில் பரவி இருந்தமைக்குக் கல்வெட்டு ஆதாரம் காணப்படுகிறது.

திருக்கட்டளை:

புதுக்கோட்டைக்கு 6 கி.மீ. தொலைவில் ஆலங்குடி வட்டத்தில் உள்ளது. கி.மு. 874 ஆம் ஆண்டில் முதலாம் ஆதித்ய சோழனால் இங்கு கட்டப்பட்ட சிவாலயம் சோழர் காலச் சிறப்புடன் திகழ்கிறது. பத்தாம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் இவ்வாலயச் சுற்றுச் சுவர்களில் காணப்படுகின்றன.

சித்தன்னவாசல்:

Siththannavasalஇது ஒரு சுற்றுலாத்தலம். கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த, வரலாற்றுச் சிறப்புமிக்க சித்தன்ன வாசல் குகைக் கோயில்கள் உலகப் புகழ்பெற்றவை. சித்தன்னவாசல் பெரியபுராணம், தேவாரப் பாடல்களிலும் கல்வெட்டுகளிலும் அண்ணல்வாயில் என்று குறிக்கப்படுகிறது. அண்ணல் வாயில் என்பது அன்னவாசல் என்று மாறி வழங்கப்படுகிறது. இங்குள்ள கோயில்கள் பல்லவர் காலச் சிற்பக்கலையைப் பின்பற்றியவை. பாண்டியர் காலத்திய 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அற்புதமான சுதை ஓவியங்கள் இக்கோயில்களில் அழகுற அமைந்துள்ளன.
Siththannavasal
விலங்குகள், மீன், வாத்துக்கள், குளத்தில் தாமரை மலர்களை சேகரிக்கும் மக்கள், இரண்டு நடன ஓவியங்கள் என்று காணப்படும் இவ்வோவியங்களின் தேர்ந்த வண்ணங்கள் இன்றுவரை மெருகு குன்றாமல் காண்பவரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. அர்தி மண்டபத்தில் 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுதை ஓவியங்கள் காணப்படுகின்றன. இந்த ஓவியங்களையும் சிற்பங்களையும் காண நாள்தோறும் வெளிநாட்டினரும் வருகிறார்கள். இங்கு சிறப்பு மிக்க ஜைன ஆலயங்கள் ஆதியில் அமைந்திருந்த தாகவும், பிற்கால பல்லவ, சோழப் பேரரசுகளால் அவை அழிவுற்று சைவ வைணவக் குகைக் கோயில்கள் அமைக்கப்பட்டதாகவும் வரலாறு குறிப்பிடுகிறது. சித்தன்னவாசல் புதுக்கோட்டைக்கு 16 கி.மீ. தொலைவில் குளத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது.

புதுக்கோட்டை:
Pudukkottai
புதுக்கோட்டை நகரம் சென்னைக்குத் தென்மேற்கில் 366 கி.மீ. தொலைவில் இருக்கிறது. நகரின் மத்தியில் கோட்டை ஒன்று வலுவான மதிர்சுவர்கள் சூழ, தக்க பாதுகாப்பு அரண்களுடன் கட்டப்பட்டுள்ளது. கோட்டைக்கு எதிரில் கிழக்கிலிருந்து மேற்காகவும் வடக்கிலிருந்து தெற்காகவும் அகலமான பெரிய வீதிகள் அமைந்துள்ளன. கோட்டைக்கு நடுவில் பழைய அரண்மனை உள்ளது. தட்சிணாமூர்த்தி கோயிலும் தர்பார் மண்டமும் கட்டப்பட்டுள்ளன. ராமச்சந்திர தொண்டைமானால் கட்டப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலும், பெரிய குளத்தின் தென்கரையில் வினாயகர் கோயிலும் உள்ளன. திருவாப்பூர் ராஜராஜேஸ்வரம் ஆலயம் சோழர் கால சிற்பச் சித்திரங்களைக் கொண்டு விளங்குகிறது. சுந்தரபாண்டியன் காலத்தில் கட்டப்பட்ட கல்யாண பிரசன்ன வெங்கடேஸ்வரர் ஆலயமும், பிறகு கட்டப்பட்ட வேணுகோபால ஸ்வாமி ஆலயமும் திருவப்பூரில் உள்ள வைணவ ஆலயங்களாகும். திருக்கோகர்ணம்- திருவாப்பூர் மார்க்கத்தில் மாரியம்மன் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. கருப்பரPudukkottai் கோயிலும் புகழ்வாய்ந்த ஆலயம் ஆகும். சாந்தநாத ஸ்வாமி கோயிலும், பிருகதாம்பாள் ஆலயமும் சிறப்பு பெற்றவையாகும். வரதராஜா, விட்டோபா, வெங்கடேச பெருமாள்களுக்கு வைணவ ஆலயங்கள் உள்ளன. சுற்றுலா பயணிகளைக் கவருவதில் புவனேஸ்வரியம்மன் ஆலயம் முதலிடம் வகிக்கிறது. இங்கு வைகாசி மாதத்தில் உற்சவங்கள் நடைபெறுகின்றன. நகருக்குத் தென்மேற்கில் தொண்டைமான் அரசரால் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட அரண்மனை உள்ளது. இது பிச்சாத்தான்பட்டி அரண்மனை என வழங்கப்படுகிறது. இது ஒரு சுற்றுலாத் தலமாகும்.

பொற்பனைக் கோட்டை:
பொன் பரப்பினான்பட்டி என்ற பண்டையப் பெயர் பொற்பனைக் கோட்டை என மாறி வழங்கப்படுகிறது. புதுக்கோட்டைக்கு 6 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது. இங்குள்ள பாழடைந்த கோட்டை 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். சுமார் 2000 போர் வீரர்கள் தங்க வசதியானது.

பொன்பட்டி:

இவ்வூர் அறந்தாங்கி வட்டத்தை சேர்ந்தது. இக்கிராமத்தின் மேற்கிலமைந்த கரூர் எனும் ஊரில், தியான நிலையில் அமர்ந்தவாறு 2 1/2 அடி உயரம் கொண்ட புத்தர் சிலை காணப்படுகிறது. இதிலிருந்து சோழர் ஆட்சியில் புத்தமதம் இப்பகுதியில் பரவியிருந்தது தெளிவாகிறது. சோழ அரசன் வீரராஜேந்திரன் வேண்டுகோளுக் கிணங்க, பொன் பட்டியை ஆண்ட புத்தமித்திரனால் கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் வீரசோழியம் என்னும் நூல் இயற்றப்பட்டது. வீரசோழியம் சிறந்த தமிழ் இலக்கண நூலாகும். கலித்துறையால் ஆக்கப்பெற்ற இந்நூல் சந்தி, சொல், பொருள், யாப்பு, அலங்காரம் என்னும் ஐவகையாலும் சிறப்புற்றது. புத்தமித்திரன் பிறந்த ஊரும் இதுவேயாகும்.

பேரையூர்:

புதுக்கோட்டைக்கு 15 கி.மீ. தொலைவில் திருமயம் வட்டத்தில் அமைந்துள்ளது. பேரையூரில் நாகநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் வரிசை வரிசையாக நாகக் கற்சிலைகள் புதையுண்டுள்ளன. இக்கோயில் அருகில் உள்ள குளம் குறிப்பிட்ட அளவு நிறைந்ததும், வீசும் காற்றால் ஒருவித இசை ஒலி எழும்புகிறது. இவ்வித இனிய இசை நாதம் ஒரிரு நாட்கள் தொடர்ந்து கேட்பதுண்டு. ஆதிசேஷன் சிவனை இத்தகைய நாதவெள்ளத்தால் வழிபடுவதாகக் கூறப்படுகிறது. 13ஆம் நூற்றாண்டுச் சோழர், பாண்டியர் கல்வெட்டுக்கள் நிறைய காணப்படுகின்றன. இக்கோயில் பிரகதாம்பாள் உருவம் விஜய நகர அரசர் கால கலைச் சிறப்பைப் பெற்றுத் திகழ்கிறது. பனை ஓலை விசிறிகளுக்கு இவ்வூர் புகழ்பெற்றதாகும்.

பள்ளிவாசல்:

இவ்வூர் புதுக்கோட்டையிலிருந்து 35 கி.மீ. தொலைவில் திருமயம் வட்டத்தில் அமைந்துள்ளது. காட்டுபாவா பள்ளிவாசல் என்பது இயற்பெயர். கிழவர் சேதுபதியால் இரண்டு ஏரிகளும் பெரிய நிலப்பரப்பும் இக்கோயில் கட்டுவதற்காக வழங்கப்பட்டது. இது ஒரு சுற்றுலாத் தலமாகும்.

நெடுங்குடி:

புதுக்கோட்டையிலிருந்து 35 கி.மீ. தொலைவில், திருமயம் வட்டத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள சிவாலயமும், இங்கு நடத்தப்படும் தேர் திருவிழாவிற்கு ஏராளமான மக்கள் கூடுவதும் இவ்வூருக்கு பெருமை சேர்ப்பனவாகும்.

நார்த்தாமலை:

Narttamalaiபுதுக்கோட்டையிலிருந்து 19 கி.மீ. தொலைவில் குளத்தூர் வட்டத்திலுள்ளது. ஒன்பது சிறிய குன்றுகள் அமைப்பாக காணப்படும் இடம் நார்த்தாமலை. ஒரு குடைவரைக் கோயிலையும் சேர்த்து இங்கு சில பழங்காலத்திய கற்கோயில்கள் உள்ளன. மைய மண்டபத்தில் கைதேர்ந்த சிற்பத்திறனுடன் வடிவமைக்கப்பட்ட ஆறு விஷ்ணு சிலைகள் உள்ளன. விஜயாலயா சோழீச்சுவரம் கோயிலுக்கு முன்னால் தெற்கில் 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குகைக்கோயில் ஒன்று சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. விஜயாலயன் பிற்காலச் சோழர்களில் முதலாமவன். சிற்பங்கள் அடங்கிய இந்த சிவன் கோயில் சோழர்களின் ஆரம்பகால படைப்புகளில் ஒன்றாகும். விஜய சோழீச்சுவரம் கோயிலிலும் சுற்றுப்புறங்களிலும் இறை உருவங்கள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இவை 17ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட கால ஓவியங்களாகும். கடம்பர் மலையில் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட திருக்கடம்பூர் உடைய நாயனார் கோயில் உள்ளது. இது ஒரு சுற்றுலாத் தலமாகும்.

குடுமியான் மலை:
kudumiyamalai
இங்குள்ள சிவன் கோவில் பல கல்வெட்டுகளையும் அழகான சிற்பங்களையும் தாங்கி நிற்கிறது. எட்டு நாண்களை உடைய பரிவதினி எனும் இசைக்கருவியைக் கொண்டு மகேந்திரவர்மன் பல்லவன் இசை பற்றி ஆய்வு மேற்கொண்டிருந்ததைக் குறித்து ஒரு கல்வெட்டு கூறுகிறது. சிதிலமடைந்த நிலையில் ஆயிரங்கால் மண்டபம் கோயிலுக்கு முன்னே உள்ளது. உள் மண்டபம் விஜயநகர காலத்து ஓவியங்களால் நிறைந்துள்ளது. உள் மகா மண்டபம் சோழர் கால கலைச் சிறப்பையும், கோபுரம் பல்லவர் கால கலைச்சிறப்பையும் பெற்று விளங்குகின்றன. மலை மேல் இருக்கும் மேலக்கோயிலின் பல இடங்களில் சோழர் கால கல்வெட்டுகள் உள்ளன. இது ஒரு சுற்றுலாத் தலமாகும். இது புதுக்கோட்டையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் தொலைவில் குளத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது. தமிழக அரசின் மிகப்பெரும் விவசாயப் பண்ணையான அண்ணா பண்ணை இங்கு அமைந்துள்ளது.

மடத்துக் கோயில்:

புதுக்கோட்டையிலிருந்து 38 கி.மீ. தொலைவில் குளத்தூர் வட்டத்தில் உள்ளது. இங்குள்ள கோயிலின் முன் மண்டபம் சோழர் காலத்தைச் சேர்ந்தது. கருங்கற்களால் அமைந்துள்ளது. உள் மண்டபம் விஜயநகர அரசர் காலத்தது. சிவப்புக் கற்களால் அமைந்துள்ளது. இங்கு சோழர், பாண்டியர் காலத்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கோயிலில் 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிறந்த சிற்ப வேலைபாடுகளுடன் உயரமான பைரவர் சிலை உள்ளது.

திருக்கோகர்ணம்:

இவ்வூர் புதுக்கோட்டையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு மகேந்திரவர்ம பல்லவன் கட்டிய குடைவரைக் கோயில் உள்ளது. இங்குள்ள அருங்காட்சியகத்தில் புவியியல், விலங்கியல், மானுடவியல், கல்வெட்டியல், வரலாறு மற்றும் கலை தொடர்பான பிரிவுகள் உள்ளன. இதற்கருகில் உள்ள குமாரமலையில் சுப்பிரமணிய சுவாமி மலைக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இது ஒரு சுற்றுலாத் தலமாகும்.

வேளாண்மை:

புதுக்கோட்டை மாவட்டத்தை பூகோள அடிப்படையில் பாறைகள் நிறைந்த பகுதி, சமவெளிப் பிரதேசம் என இருப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். பாறைப் பகுதிகள் விவசாயத்திற்கு இலாயக்கற்றவை. சமவெளிப் பிரதேசத்தில் விவசாயம் செழிப்பாய் விளங்குகிறது. விவசாயத்திற்கான நீர்ப்பாசனம் ஆறுகள், அணைக்கட்டுகள், ஏரிகள், குளங்களிலிருந்து பெறப்படுகிறது. வெள்ளாறு, பாம்பாறு, அக்னி ஆறு, அம்புலியாறு, கோரையாறு, குண்டாறு, கோவலனாறு, நரசிங்க காவேரி ஆகிய ஆறுகள் இம்மாவட்டத்தில் பாய்கின்றன. குடுமியாமலைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள அணையால் விசலூர், வயலோகம், பெருமானாடு, கவிநாடு ஏரிகள் நீர் பெறுகின்றன. சேந்தமங்கலத்தில் கட்டப்பட்டுள்ள அணையாலும் கவிநாடு ஏரி நீர் பெறுகிறது. ஹோல்ட்ஸ்வர்த் அணைக்கட்டு வளநாடு ஏரிக்கு நீர் வழங்குகிறது.

விவசாயத்திற்குப் பயன்படும் குளங்கள் இம்மாவட்டத்தில் நிறைந்து காணப்படுகின்றன. குளத்தூர் வட்டத்தில் 1968 குளங்களும், திருமயம் வட்டத்தில் 1595 குளங்களும், புதுக்கோட்டை வட்டத்தில் 533 குளங்களும் அறந்தாங்கி வட்டத்தில் 531 குளங்களும் விவசாயச் செழிப்புக்கு உதவுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை மழையால் நீர் பெறுபவையாகும். இம்மாவட்டம் மருதம், முல்லை, நெய்தல், குறிஞ்சி, பாலை என்னும் ஐவகை நிலப் பண்புகளையும் கொண்டுள்ளது. வறட்சி காலங்களில் இம்மாவட்டம் பாலையாகக் காணப்படும். இங்கு காலங்காலாக நெல், சோளம், கம்பு, கேழ்வரகு இவைகளைப் பயிரிட்டு விவசாயப் பணி மேற்கொண்டு வருகிறார்கள். செவ்வல் மண் இருக்கும் பகுதிகளில் கம்பு, திணை, முந்திரி ஆகியவற்றை விளைவிக்கிறார்கள். கரிசல் மண் இருக்கும் பகுதிகளில் நெல், வாழை இவற்றை அதிகம் பயிரிடுகிறார்கள். கோடையில் இப்பகுதிகளில் வேர்க்கடலை, உளுந்து , துவரை முதலிய பணப் பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. 440 ச.கி.மீ. பரப்பளவில் பரந்து கிடக்கும் படுகைப் பகுதிகளில் தென்னை பயிர்களாக புகையிலை, மிளகாய், வாழை, மாங்காய், பலாப்பழம் ஆகியன விளைவிக்கப்படுகின்றன. இம்மாவட்டத்தில் மொத்தம் 1.75 இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

தாது வளம்:

புதுக்கோட்டை மாவட்டம் இயற்கை தாது வளத்தில் சிறந்து காணப்படுகிறது.

பாறைகள்:

கோயில், கட்டடங்கள் கட்டுவதற்கும், நீர்நிலைகளில் கரை அமைப்பதற்கும் இங்கு கிடைக்கும் பாறைகள் சிறந்து விளங்குகின்றன. திருக்கோகர்ணம், புத்தாம்பூர், திருமயம், லம்பலக்குடி, கோனாப்பட்டு, மலைக்கோயில், பேரையூர், உசிலை மலைப்பாறை, விராலிமலை, விட்டமாப்பட்டி, குடுமியாமலை, பனங்குடி, அம்மாசமுத்திரம், வீரப்பட்டி, சித்தாம்பூர், கீரனுர் முதலிய இடங்களில் இக்கற் பாறைகள் மிகுந்த அளவில் கிடைக்கின்றன. இங்கு எடுக்கப்படும் கருங்கல் ஜல்லிகள் பாதைகள் அமைப்பதற்கும், அஸ்திவாரங்கள் அமைப்பதற்கும் பயன்படுகின்றன.

லேடரைட்:

இம்மாவட்டத்தில், உறுதியான கட்டுமானப் பணிகளுக்குத் தேவைப்படும் லேடரைட் என்னும் கனிமம் மிகுந்த அளவில் கிடைக்கிறது. இரும்பும் அலுமினிய கனிமங்களும் இயற்கையாகவே அளவாகக் கலந்த நிலையில் கிடைக்கின்றன.

காவி மண்:

செட்டிப்பட்டிப் பகுதிகளில் பாதுகாக்கப்படும் காட்டுப் பகுதிகளில் கிடைக்கும் இம்மண் வண்ணங்கள் தயாரிப்பதற்கும், சாக்கட்டிகள் செய்வதற்கும் பயன்படுகிறது. வீடுகளுக்குத் தேவைப்படும் டிஸ்டம்பர் தயாரிக்கவும் இம்மண் மிகுந்த அளவில் பயன்படுத்தப்படுகிறது. இம்மண் சுமார் 16000 ச.மீ. பரப்பளவில் கிடைக்கிறது. செட்டிப்பட்டியில் சுமார் 15000 டன் கிடைப்பதில் மூன்றில் இரண்டு பாகம்
உபயோகப்படுத்தப்படுகிறது.

கங்கர்:
வீடுகளுக்குத் தேவைப்படும் சுண்ணாம்பு இதிலிருந்து தயாரிக்க முடியும். வெள்ளை நிறத்திலும் இது காணப்படுகின்றது. ஆதனக்கோட்டை, ஆலங்குடி பகுதிகளில் இது நிறையக் கிடைக்கிறது.

ஸ்படிகம்:

வெங்கச்சங்கல் எனப்படும் ஒருவகை ஸ்படிகம் வீரலூர் ஏரிக் கரைகளில் கிடைக்கிறது. கல்தச்சு வேலைக்கருவிகள் செய்ய இது பெரிதும் பயன்படுகிறது. வீட்டு உட்புற அழகு வேலைகள் செய்யவும் இதை உபயோகிக்கிறார்கள்.

வெள்ளைக்களிமண்:

விவசாயத்திற்கு லாயக்கற்ற, இரும்புச் சத்து அதிகம் கொண்ட இம்மண் 70,000 டன் அளவுக்கு பரவியுள்ளது. அறந்தாங்கி-புதுக்கோட்டை மார்க்கத்தில் கிடைக்கும் இம்மண் சிமெண்டு கலவைக்கு ஏற்றதாகும்.

ஆல்கலைன்:

இது கண்ணாடி வளையல்கள் செய்வதற்குச் சிறந்த மூலப்பொருள் ஆகும். இதைப் பல நாட்கள் உலையிலிட்டு, பிலிங்க் என்னும் பொருளைச் சேர்த்து கருமை நிறமாக்கி வளையல்கள் செய்ய வேண்டும். ஆனால் இந்த முறைக்கு செலவு அதிகமாவதால் இலாபகரமற்ற தொழிலாகக் கருதி கைவிடப்பட்டுள்ளது. ஆனால் தொழில் முனைவோர் இதை கண்ணாடி சம்பந்தமான வேறு தொழில்களுக்குப் பயன்படுத்தலாம்.

இல்மினைட்:

மிமிசல்-அதிராம்பட்டிணம் மார்க்கத்தில் இது கிடைக்கிறது. ஆனால் குறைந்த அளவே காணப்படுகிறது.

மைகா

புதுக்கோட்டை நகரப் பகுதியில் சில இடங்களில் மைகா கிடைப்பதாக 1903 ஆம் ஆண்டில் தெரியவந்தது. தக்க ஆய்வு மேற்கொண்டால், மேலும் இதைப் பற்றிய விவரம் தெரியவரும்.

காந்தக்கல்:

குளத்தூர் வட்டத்திலுள்ள மல்லம்பட்டியில் சுமார் 50,000 டன் காந்தக்கல் காணப்படுகிறது. இதில் 34 சதவீதம் இரும்பு உள்ளது. ஆனால் இன்னும் இது பொது உபயோகத்திற்கு வரவில்லை.

மீன்வளம்:

அறந்தாங்கி வட்டத்திலுள்ள ஏரிகளில் வெண்கெண்டை, அறிஞ்சான், காக்கா மீன், கருஞ்சேல், கருமுழிக் கெண்டை, சேல்கெண்டை, சல்லிக்கெண்டை, கெழுத்தி, கருபுத்தேளி, கொரவை, ஜிலேபிக் கெண்டை முதலியன மிகுதியாக கிடைக்கின்றன. கருஞ்சேல், சேல்கெண்டை, ஜிலேபிக் கெண்டை மீன் வகைகள் மீன்வளத் துறையினரால் புதுக்கோட்டை வட்டத்தில் 16 இடங்களிலும், அறந்தாங்கி வட்டத்தில் 35 இடங்களிலும் வளர்க்கப்படுகின்றன. பிறவகை மீன்கள் காவேரி சங்கமமாகும் இடத்தில் மிக அதிகமாகக் கிடைக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டத்தில் 28 மைல் நீள கடற்கரை ஓரங்களில் அமைந்த 18 கிராமங்கள் மீன்பிடி தொழிலில் சிறந்து விளங்குகின்றன. அவையாவன: காட்டுமாவடி, பிரதாபிராமன் பட்டினம், கிருஷ்ணாஜி பட்டினம், திருமங்கலம் பட்டினம், வடக்கு அம்மா பட்டினம், சீதாராமப்பட்டினம், அம்மா பட்டினம், புதுக்குடி, ஆயிப்பட்டினம், கோட்டைப் பட்டினம், ஜகதாப்பட்டினம்,கோபாலப்பட்டினம், அய்யம்பட்டினம், புதுப்பட்டினம், அரசனேரி, முத்துக்குடா முதலியன இப்பகுதியில் சுமார் 10,000க்கு மேற்பட்டோர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மீன், இறால் இவைகளைப் பதப்படுத்தும் நிலையம் மணமேல்குடியில் 1.54 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. மீனும் இறாலும் பனிக்கட்டிகளால் மூடப்பட்டு அறந்தாங்கி, பட்டுக்கோட்டை வழியாகப் பல ஊர்களுக்கும் இரயில் மூலம் அனுப்பப்படுகின்றன. கோட்டைப் பட்டினம், ஜகதாப்பட்டினம் கடற்கரைகளில் இறால்கள் மிகுதியாகக் கிடைக்கின்றன. புதிய மீன்பிடிப் பகுதிகளையும், அதிகமாக மீன் கிடைக்கக்கூடிய இடங்களையும், அதிகமாக பிடிபடும் மீன் இனங்களையும் அறிய வருவதற்காக 1975 ஆம் ஆண்டு மல்லிப்பட்டிணம் அருகில் மீன்பிடி ஆராய்ச்சி நிலையம் ஒன்றை மீன்வளத்துறையினர் கட்டியுள்ளனர். 465 ச.கி.மீ. பரப்பளவுக்கு இரண்டு இயந்திரப் படகுகளைக் கொண்டு புதுக்கோட்டை, அறந்தாங்கிக் கடற்கரைப் பகுதிகளில் இந்நிலையம் பலவித ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது. அம்மாப்பட்டினத்தில் நாட்டுப்படகுக் கட்டும் நிலையம் ஒன்று செயல்படுகிறது.மீன்பிடிக்கும் தொழிலில் பர்வதராஜ குலத்தைச் சேர்ந்த இந்துக்களும், ராவுத்தர், மரைக்காயர் பிரிவுகளைச் சேர்ந்த முஸ்லிம்களும், கள்ளர் இனத்தைச் சேர்ந்த கிறித்துவர்களும் ஈடுபட்டுள்ளனர். இத்தொழில் செய்வோரில் கல்வியறிவு பெற்றோர் மிக மிகக் குறைவு.

புகழ் பெற்றோர்:

எழுத்தாளர் அகிலன், விடுதலைப் போராட்ட வீரர் சத்தியமூர்த்தி, குழந்தை எழுத்தாளர் அழ. வள்ளியப்பா, கல்வியாளர் முத்துலட்சுமி அம்மாள், திரைப்பட இயக்குனர் ப.நீலகண்டன், திரைப்பட நடிகரும், இயக்குனருமான பி.கே. ராஜா சாண்டோ, நடிகர்கள் பி.யு. சின்னப்பா, ஏ.வி.எம். ராஜன் போன்றோர் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்து புகழ்பெற்றோர் ஆவர்.

பொது விவரங்கள்:

சுகாதாரம்: அரசு மருத்துவமனைகள்-12; ஆரம்ப சுகாதார மையங்கள்-55; துணை சுகாதார மையங்கள்-241.
வங்கிகள்: 90 வங்கிகள் உள்ளன. காவல் நிலையங்கள்: மொத்தம் 35 காவல் நிலையங்கள். காவலர்கள்: ஆண்-1059 பேர்; பெண்-20 பேர். அனைத்து மகளிர் காவல் நிலையம் - 2 (புதுக்கோட்டை, அறந்தாங்கி)

தபால் நிலையங்கள்: மொத்தம் 329.
பதிவுப் பெற்ற வாகனங்கள்: 23,450.
சாலை நீளம்: 3,802.

தொழில் வளர்ச்சி:

புதுக்கோட்டை மாவட்டத்தைத் தொழில் துறையில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆயினும் கைத் தொழில்களில் இம்மாவட்டம் சிறப்புப் பெற்றுத் திகழ்கிறது. திருவாப்பூர், அறந்தாங்கி, பரம்பூர், இலுப்பூர் ஆகிய இடங்களில் பட்டு, பருத்தி நெசவுத் தொழில் செயல்பட்டு வருகிறது. சோனியாப்பட்டியில் விலை மலிவான புடவைகளைத் தயாரிக்கிறார்கள்.

அன்னவாசல், இலுப்பூர், மாங்குடி, சத்தியமங்கலம், திருவேங்கை வாசல், கூத்தாடி வயல், மலையூர், நாரங்கிப்பட்டி, கள்ளம்பட்டி, சும்பூதி, பூவரசக்குடி, கோசலக்குடி முதலிய ஊர்களில் மண் சிலைகளைச் செய்து விற்கிறார்கள். நெடுஞ்சாலைக்கு அருகிலும், ஆற்றங்கரை ஓரங்களிலும், கிராம தேவதைக்கான கோயில்கள் முன்பும் வைக்கப்படும் பெரிய பெரிய குதிரை, யானை, நாய் உருவங்களை மண்ணால் செய்து சுட்டு வண்ணங்கள் பூசி விற்கிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பனை மரம் மிகுதியாதலால், இங்கு பனை ஓலையைக் கொண்டு பாய் முடைதல், தடுக்கு முடைதல், பெட்டிகள், கூடைகள், விளையாட்டு சாமான்கள் செய்தல் ஆகிய குடிசைத் தொழில்கள் நடைபெற்று வருகின்றன. இத்தொழில் கற்க அரசு தரப்பில் ஒரு தொழில் நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

ஓலைச் சீவ ஒரு இயந்திரம் வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. செங்கோட்டை, சென்னை முதலிய இடங்களிலிருந்து பிரம்பு இறக்குமதி செய்யப்பட்டு, அதைக் கொண்டு நாற்காலிகள், மேஜை, டீப்பாய் போன்ற பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. பிரம்புப் பொருட்களைத் தயாரிக்க புதுக்கோட்டையில் ஒரு பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

வரப்போரங்களில் விளைந்திருக்கும் கத்தாழையை தண்ணீரில் ஊறவைத்து, அடித்துத் துவைத்து, நாரை மட்டும் பிரித்தெடுத்து கயிறு உற்பத்தி செய்கின்றனர். மற்றும் ஆற்றோரங்களில் விளைந்திருக்கும் கோலைப் புல்லைக் கொண்டு பாய் முடைவதும் தொழிலாக நடைபெறுகிறது. இவ்விதம் பாய் முடைதல் அமனாப்பட்டி, கந்தர்வக் கோட்டை, முள்ளங்குறிச்சி, பல்லவராயன் பட்டி, தீத்தான் விடுதி முதலிய இடங்களில் நடைபெறுகின்றன. கோரைப் பாய்கள், ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் மதிப்புக்குத் தயாரிக்கப்பட்டு வெளியூர்களுக்கு அனுப்பப்படுகின்றன. இத்தொழிலில் நவீன முறைகளைப் புகுத்தினால் மேலும் இது முன்னேறும்.

ஆத்திப்பள்ளத்தில் மூங்கில் கூடைகள், மூங்கில் தட்டிகள் செய்யப்படுகின்றன. திருக்கோகர்ணத்தில் கருங்கற்களில் சிற்பங்களை, குறிப்பாக கடவுளர் உருவச் சிற்பங்களை வடிக்கும் தொழில் நடைபெறுகிறது. சிலத்தூர், ராயவரம் முதலிய ஊர்களில் மரங்களைக் கொண்டு கடவுளர் வாகனங்கள் செய்யப்படுகின்றன. எருது, சிங்கம், மாடு, குதிரை முதலிய உருவச் சிலைகள் ஒருவகை பொதிய மரத்தைக் கொண்டு படைக்கப்படுகின்றன.

தேர்ந்த வர்ணப் பூச்சைக் கொடுத்தபின் கோயில்களில் வைப்பதற்காகவும், வீடுகளில் வைப்பதற்காகவும் விற்பனை செய்யப்படுகின்றன. 1960 ஏப்ரல் முதல் தேதியில் இம்மாவட்டத்தில் காதி மற்றும் கிராமத் தொழில் வளர்ச்சி இணையம் தோற்றுவிக் கப்பட்டது. புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி முதலிய இடங்களில் தொழில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கீழ்க்கண்டத் தொழில்கள் அதன் கட்டுப்பாட்டில் உள்ளன.

தீப்பெட்டித் தொழிற்சாலைகள் - 2
பதநீர், பதநீர் பொருள் உற்பத்தி - 15
கைக்குத்தல் அரிசி ஆலை - 1
மட்பாண்ட தொழில் நிலையங்கள் - 2
தச்சு, கருமாரநிலையம் - 1

இன்னும் பல கிராமக் கைத்தொழில் நிலையங்கள் அமைக்கும் திட்டம் ஆய்வில் உள்ளது. அதனால் தொழில்துறையில் பின்தங்கியுள்ள இம்மாவட்டம் மேலும் பல தொழில் வாய்ப்புகளைப் பெறும். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள முக்கியத் தொழிற்சாலைகள்: சிப்காட் காம்ப்ளக்ஸ், புதுக்கோட்டை; ஸ்பெக்சுரல் பேப்ரிக்கேஷன்ஸ், நல்லூர்; பிளாஸ்டிக் இண்டஸ்ட்ரீஸ், நல்லூர்; மாத்தூர் இண்டஸ்ட்ரியல் காம்ளக்ஸ், சால்வன்ட் எக்ஸ்ட்ராக்ஷன் யூனிட், புனக்குளம்; கெமிக்கல் யூனிட் மற்றும் டெக்ஸ்டைல் மில், அறந்தாங்கி; டெக்ஸ்டைல் மில், நமனசமுத்திரம். புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழில் மற்றும் வணிகத்துறையில் பதிவு பெற்ற தொழில் நிலையங்கள்
பின்வருமாறு:

மரப்பட்டறைகள் - 77
அச்சகங்கள் - 10
இரும்புக் குழாய் பொருட்கள் - 9
சோப்பு தயாரித்தல் - 15
மிட்டாய் செய்தல் - 4
மெழுகுப் பொருட்கள் - 12
விவசாயக் கருவிகள் - 90
தீப்பெட்டி -7
சிமெண்ட் பைப்புகள், மொசைக் கற்கள் - 22
வீட்டுப் பொருட்கள், (பித்தளை, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அலுமினியப் பாத்திரங்கள்) - 33
கற்கள் பட்டைத் தீட்டுதல் - 9
டயர் ரீடெரேடிங் - 5
பாக்கு, புகையிலை - 5
பஸ் பாடி கட்டுதல் - 22
பேப்பர் அட்டை செய்தல் - 2
கதவுத் தாழ்ப்பாள், குதிரை, மாடு லாடம் செய்தல் - 6
துணிப் பொருட்கள் - 4
இரும்புப் பெட்டிகள் - 3
பிளாஸ்டிக் பொருட்கள் - 5
மருந்து உற்பத்திப் பொருட்கள் - 4
கயிறு உற்பத்தி - 1
சர்க்கரை தயாரித்தல் - 1
அரிசி ஆலை - 1
சேமியா தயாரித்தல் - 1
ஐஸ் தயாரிப்பு - 2
கால்சியம் குளூகோனட் - 1

இவை தவிர பதிவுப் பெறாத பல தொழில் நிலையங்களும் உள்ளன. மொத்தம் 351 தொழிற்சாலைகளில் புதுக்கோட்டையில் 122 தொழிற்சாலைகளும், அறந்தாங்கியில் 138 தொழிற்சாலைகளும், திருமயத்தில் 37 தொழிற்சாலைகளும், குளத்தூரில் 47 தொழிற்சாலைகளும், ஆலங்குடியில் 7 தொழிற்சாலைகளும் உள்ளன.

பெருந்தொழில் வாய்ப்புகள்:

இம்மாவட்டத்தில் டிட்கோ ஆதரவில் எண்பது கோடி ரூபாய் மூலதனத்தைக் கொண்டு டிறால்விங் பல்ப் மற்றும் விஸ்கோஸ் ஸ்டேபிள் பைபர் தொழிற்சாலை ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இத்தொழிற்சாலையால் 2000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், சுமார் 10,000 பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் கிடைக்கிறது.சிப்காட் ஆதரவில் ரூபாய் 292.75 இலட்சம் முதலீட்டில் ஹார்டு போர்டு தொழிற்சாலை ஒன்றும் அமையவிருக்கிறது. இதனால் சுமார் 200 பேர் வேலை வாய்ப்பு பெறலாம்.

சோளத்தைப் பக்குவம் செய்து, குழந்தை உணவுப் பொருட்களுக்கும், டெக்ஸ்ட்ரோஸ், குளூகோஸ், ஸ்டார்ச் இவைகளுக்குப் பயன்படும் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை அமைக்கும் திட்டத்தைத் தமிழ்நாடு வேளாண்மைத் தொழில் கார்ப்பரேசன் ஆய்வில் வைத்துள்ளது. இது ஆலங்குடி வட்டத்திலாவது திருமயம் வட்டத்திலாவது அமையலாம். சுமார் ஆயிரம் பேர் இதனால் வேலைவாய்ப்பு பெறுவர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி வேர்கடலை சந்தைக்குப் பெயர் பெற்ற இடம். வேர்கடலை வனஸ்பதி தயாரிக்க உதவும் அத்தியாவசிய மூலப்பொருள் ஆதலால், இங்கு 200 டன் உற்பத்தித் திறன் கொண்ட வனஸ்பதித் தொழிற்சாலை ஒன்று அமையும் வாய்ப்பு உள்ளது.

சிறுதொழில் வாய்ப்புகள்:

சிறுதொழில் சேவை நிலையம் இம்மாவட்டத்தில் கீழ்க்கண்ட சிறுதொழில்களை அமைக்க ஆலோசனை வழங்கியுள்ளது. இம்மாவட்டத்தில் 46,400 டன் வேர்க்கடலை பயிராகிறது. 20,000 டன்கள் எண்ணெய் உற்பத்திக்கும் பயன்படுகிறது. மீதமுள்ளதைக் கொண்டு மேலும் சில எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் அமைக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. இத்துடன் மணிலா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் துவங்கலாம். முந்திரிப் பருப்பு பாடம் பண்ணுவதும், முந்திரி எண்ணெய் உற்பத்தியும் சிறந்த லாபம் தரக்கூடிய தொழில்கள். கந்தர்வக்கோட்டையில் இதற்கென ஒரு தொழிற்சாலை உள்ளது. இதைத் தவிர்த்து இம்மாவட்டத்தில் வேறு தொழிற்சாலைகள் கிடையாது. ஆண்டுக்கு 2000 டன் முந்திரி பயிராகும் இம்மாவட்டத்தில் இன்னும் பல ஆலைகள் திறக்க முடியும்.

முந்திரிப் பருப்பும், முந்திரி எண்ணெயும் அந்நியச் செலாவணியை ஈட்டி தருபவனாகும். மக்கள் பயன்படுத்தியது போக மீதமுள்ள சுமார் 1200 டன் முந்திரிப் பழங்கள் மாட்டுத் தீவனமாக உபயோகிக்கப் படுகின்றன. இவைகளைப் பதப்படுத்தி ஜாம், ஸ்குவாஷ் தயாரித்து விற்பனைக்கு அனுப்ப இயலும். குறைந்த மூலதனத்தில் நிறைந்த இலாபம் கிடைக்கும். முந்திரிக் கொட்டையில் பிரவுன் கலரில் மெல்லியத் தோல் ஒன்று மூடியிருக்கும். இது ஆடு, மாடு தோல்களைப் பதப்படுத்த மிகவும் சிறந்ததாகும். மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் இதைப் பரிந்துரை செய்துள்ளது. ஆறு லட்சம் ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை அமைத்து பயன் பெறலாம்.

இம்மாவட்டத்திலிருந்து 5000 டன் புளியங்கொட்டை மாட்டுத்தீவன உற்பத்திக்காக கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது. இதைக் கொண்டு துணி ஆலைகளுக்கும், கைத்தறித் துணிகளுக்கும் தேவைப்படும் ஸ்டார்ச் தயாரிக்க முடியும். ஒரு இலட்சம் ரூபாய் மூலதனத்தில் நிறைந்த இலாபம் தரும் தொழிலாகும்.

மீனைப் பதப்படுத்துதல் அன்னிய செலாவணி ஈட்டித் தரும் தொழிலாகும். மீன்களையும், இறால்களையும் பதப்படுத்தி, டின்களில் அடைத்து ஏற்றுமதி செய்வது அதிக இலாபம் ஈட்டும் தொழிலாகும். சுமார் ஆறு இலட்ச ரூபாய் முதலீட்டில் பலருக்கு வேலை வாய்ப்பும் அதிக இலாபமும் பெறலாம். 3430 இயந்திரப் படகுகள் இருக்க வேண்டிய இம்மாவட்டத்தில் 1550 படகுகளே பயன்பாட்டில் உள்ளன.

படகு கட்டும் கூடம் ஒன்று அமைக்க சுமார் ஒரு இலட்ச ரூபாய் முதலீடு போதுமானது. இக்கூடத்தில் 30 அடி நீளம் கொண்ட 18 படகுகள் கட்ட முடியும். அறந்தாங்கி வட்டத்தில் மிமிசல் பகுதி இத்தொழிலுக்கு ஏற்ற இடமாகும். சுமார் 100 பேர் வேலை வாய்ப்பும் பெறுவர். கடல் உப்பைக் கொண்டு சாப்பாடு உப்பு, பண்ணைகளுக்குப் பயன்படும் உப்பு, உயர்தரமான உப்பு, மாடுகளுக்குப் பயன்படும் உப்பு, டிஸ்டில் வாட்டருக்கு தேவைப்படும் உப்பு, மாக்னீசியம் கார்பனேட்டுக்குத் தேவைப்படும் உப்பு என்று பல வகை உப்புகள் தயாரிக்கும் தொழில் அமைக்கவும் வாய்ப்பு உள்ளது.

பவநகர் மத்திய ஆராய்ச்சி நிலையத்தை அணுகினால் இத்தொழில் பற்றிய ஆலோசனைகளைப் பெறலாம். பேப்பர், சர்க்கரை மற்றும் இரசாயனத் தொழில்களுக்குத் தேவைப்படும் ஒருவகைச் சுண்ணாம்பு கடற்கரைகளில் கிடைக்கும் கிளிஞ்சல்களிலிருந்து தயாரிக்க முடியும். ஆண்டுக்கு 1500 டன் கடற்சுண்ணாம்பு தேவைப்படுகிறது.

நீண்ட கடற்கரையைப் பெற்றுள்ள அறந்தாங்கி வட்டம் இத்தொழில் அமைய ஏற்ற இடம். சுமார் 1 இலட்சம் மூலதனத்தில் தொழிற்சாலை அமைக்கலாம். சலவை சோப்புகளுக்கு ஸின்தடிக் டிடர்ஜன் என்னும் கலவைப் பொருள் சேர்க்கப்படுகிறது. எண்ணெய் கொழுப்புப் பொருட்கள் கிடைக்காததால் அரிசி உமியிலிருந்து இப்பொருள் எடுக்கப்படுகிறது. சுமார் 10,000 ரூபாய் முதலீட்டில் தினசரி 50 கிலோ ஸின்தடிக் டிடர்ஜன்ட் தயாரிக்க முடியும். மாட்டுத் தீவனம் தயாரிக்கவும் மிக்க வாய்ப்புகள் இம்மாவட்டத்தில் உள்ளன சாக்பீஸ் தயாரிப்பதற்கான மூலப்பொருள் இம்மாவட்டத்தில் நிறைந்துள்ளதால், கல்வி நிலையங்களுக்குத் தேவையான சாக்பீஸ்களைத் தயாரித்து அளிக்க முடியும்.

இவை தவிர இம்மாவட்டத்தைச் சுற்றிலுமுள்ள பெரிய தொழிற்சாலைகளுக்குத் தேவையான இரும்பு வார்ப்படங்கள், இரும்பு குழாய்கள் செய்யும் தொழிற்சாலைகளைக் களத்தூர் அல்லது திருமயத்தில் அமைக்கலாம். இம்மாவட்டத்தில் புதுக்கோட்டையில் மட்டுமே தோல் பதனிடும் தொழிற்சாலை இயங்குகிறது. மேலும் சில தோல் பதனிடும் நிலையங்களை அமைக்கலாம்.

 

No comments:

Post a Comment